Thursday, August 12, 2010

குடியாத்தத்தில் இன்று அரங்கேறிய அரசு அராஜகம்

குடியாத்தம் நகரில் அரசு இடத்தில் 36 குடும்பங்கள் பல
தலைமுறையாய் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் இடத்திற்கு
பக்கத்தில் உள்ள ஒரு இடத்தை ஒரு ரியல் எஸ்டேட் தாதா
வாங்குகிறார். தன்னுடைய இடத்திற்கு நல்ல மதிப்பு கிடைக்க 
இந்த வீடுகள் தடையாக இருக்கும் என்பதால் அவர்களை 
அப்புறப்படுத்த முயல்கிறார். ஆசை வார்த்தையில் சிலர் மயங்கி 
மாற்று இடம் செல்கின்றனர். பலர் மறுத்து அங்கேயே தொடர்கின்றனர்.
எனவே அந்த வீடுகளை இடிக்க அவர் முடிவெடுக்கிறார். அதற்கு
முன்பு அவர் முக்கியமான ஒரு செயல்கிறார். பா.ம.க கட்சியிலிருந்து 
அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். 
ஆதி திராவிட, அருந்ததிய, இஸ்லாமிய மக்கள் வாழ்ந்த அந்த 
வீடுகளை அண்ணல் அம்பேத்காரின் பிறந்த நாளான ஏபரல் 14 அன்று 
புல்டோசர் கொண்டு இடித்து தள்ளுகிறார்.

நடுத்தெருவில் தவிக்கும் அம்மக்களின் பிரச்சினையை தமிழ்நாடு 
தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையிலெடுக்கிறது. ஆர்ப்பாட்டம் நடத்தி
பலமுறை மாவட்ட ஆட்சியரை சந்தித்தும் எந்த பலனும் இல்லாததால் 
குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் இன்று குடியேறும் போராட்டம் 
நடத்துவதாக முடிவெடுக்கிறது. 

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத்தலைவர் தோழர்  சம்பத்,
பொதுச்செயலாளர் தோழர் சாமுவேல் ராஜ், குடியாத்தம் எம்.எல்.ஏ 
தோழர் லதா ஆகியோர் தலைமையில் போராட்டம் நடத்துவதே 
திட்டம். காலையிலிருந்தே குடியாத்தம் தாலுகா அலுவலகம் செல்லும்
அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டு காவல்துறையினர் 
குவிக்கப்பட்டிருந்தனர்.  நானூறுக்கும் மேற்பட்ட தோழர்கள்
 குவிந்தனர். பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தலைவர்களை
 அழைத்து சென்றனர்.

இரண்டு மணி நேரத்திற்கு மேல் பேச்சு வார்த்தை நீடித்தது. அதே நேரம்
தோழர்கள் தாலுகா அலுவலகத்திற்கு வெளியே அமைதி
காத்தனர்,  ஒரு   நியாயமான  தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு. 
திடிரென காவல்துறையின் அணுகுமுறையில்
 ஒரு முரட்டுத்தனம் தென்பட்டது. வலுக்கட்டாயமாக ஒரு
தகராறை உருவாக்க முயற்சிஎடுத்தார்கள். 

பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தலைவர்கள் வெளியே
வந்ததும்தான்  உண்மை  தெரிந்தது.
 பேச்சுவார்த்தையில் ஒரு தீர்வை நோக்கி முன்னேறி 
ஒரு உடன்பாடும் கையெழுத்தாகும் நேரத்தில்
ஆர்.டி.ஒ விற்கு ஒரு தொலைபேசி வருகின்றது. அவர்
அங்கிருந்து வெளியேறுகிறார். போராட்டத்தில் 
ஈடுபட்டவர்களை  கைது செய்து 
காவலில் வைப்பது என்ற முடிவு 
எடுக்கப்படுகின்றது. நூறுக்கும் மேற்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்கு
 கொண்டு வரப்பட்டுள்ளனர்.

உடன்பாடு கையெழுத்தாகும் நேரம்
அதனை முறித்தது யார்?  யாருடைய 
தொலைபேசி நிலைமையை சிக்கலாக்கியது? 
யாருடைய நிர்ப்பந்தத்திற்கு 
அரசு அடிபணிந்து நியாயமான
 கோரிக்கைக்காக போராடியவர்களை கைது 
செய்துள்ளது? காவல்துறை மக்களுக்காகவா
 அல்லது ரியல் எஸ்டேட் 
தாதாக்களின் நலனை பாதுகாக்கவா? 
மாவட்ட நிர்வாகம் இந்நடவடிக்கை 
மூலம் மக்களுக்கு உணர்த்தியுள்ள செய்தி என்ன? 

பாதிக்கப்பட்ட மக்களையே கைது செய்வது என்ற 
அராஜகத்தை தமிழக அரசு   என்றுதான் நிறுத்துமோ? தலித் மக்களின் பாதுகாவலன் என்று 
பீற்றிக்கொள்வதையாவது கலைஞர் நிறுத்திக் கொள்ளட்டும்.

ஆனாலும் போராட்டம் ஓயாது. தொடரும்,
நியாயம் கிடைக்கும் வரை
உரிமைக்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

( குடியாத்தம் எம்.எல்.ஏ தோழர் லதா இருபது லட்சம் பணம் 
கேட்டு மிரட்டினார் என்று அந்த தாதா  நேற்று ஒரு பொய்ப்புகார் 
அளித்ததும் அதற்கு முதலாளித்துவ ஊடகங்கள் அதீத 
முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்ட கூத்தும் வேறு 
நடந்தது.)   

1 comment:

  1. Dear Comrade please visit
    http://www.indiantradeunion.blogspot.com/

    thanks and regards.

    ReplyDelete