Sunday, March 13, 2011

எங்கெங்கு நோக்கினும் இழவு விழுந்த வீட்டின் முகங்களாக

காலையில்  ஒரு தோழர் வீட்டு  கடா வெட்டி காதணி விழா! விழாவிற்கு 
வந்தவர்கள்  அங்கங்கே  நின்று  ஆவேசமாக, வருத்தமாக  பேசிக் கொண்டிருந்தது  ஒரு விஷயம் பற்றித்தான்.  நேற்று  தென் ஆப்பிரிக்காவிடம்  இந்தியா தோற்றுப் போனது பற்றித்தான் சோக ராகம் 
இசைந்து கொண்டிருந்தது. 

இரவு எட்டு மணிக்கு மேல் வெளியே புறப்பட்டேன். மருந்துக்கடை, மளிகைக்கடை,  பேக்கரி, மொபைல்  டாப் அப் , பெட்ரோல்  பங்க, பெட்டிக்கடை , காய்கறிக்கடை  என  பல வேலைகள் இருந்தது.  
எல்லா இடங்களிலும்  குழுக்களாக மக்கள் பேசிக் கொண்டிருந்ததும் 
நேற்றைய தோல்வி பற்றிதான். கிட்டத்தட்ட  24  மணி நேரத்திற்கும் 
மேலான போதும்  தோல்வி அவ்வளவு பாதித்து விட்டது போதும். 
சின்னப் பசங்க முதல் பெருசுகள்  வரை  அவ்வளவு வருத்தப்பட்டு
பாரம் சுமந்து கொண்டிருந்தார்கள். 

உண்மையில்  இதைப்பார்க்கையில்  எனக்கு  சிரிப்புதான் வந்தது. 
லீக் போட்டி தோல்விக்கே  இவ்வளவு ஃ பீலிங் என்றால்  கோப்பையை 
விட்டு வெளியேறினால்  இந்தியா முழுதும்  கண்ணீரில்  முழுகி விடுமோ? 

ஆவேசப்பட்ட  அனைத்துக் குழுக்களும்  ஒரு சந்தேகத்தை  எழுப்பியது
மகிழ்ச்சியை அளித்தது.  தென் ஆப்பிரிக்காவிடம் விலை 
போயிருப்பார்களோ  அல்லது   ஒட்டு மொத்த வாரியமே  இந்த போட்டியை  மேட்ச ஃ பிக்சிங்  செய்திருக்குமோ  என்ற சந்தேகம் இது.

இன்றைய கிரிக்கெட்  உலகமயமாக்கலின்  மோசமான விளைவால் 
ஊழல் மயமாகி விட்டது என்பதை  புரிந்து கொள்ள தொடங்கினால் 
போதுமானது.  

ஆனால்  இந்தியர்கள்  கவலைப்படுவதற்கும்  கோபப்படுவதற்கும்  
கொந்தளிப்பதற்கும்  ஏராளமான  பிரச்சினைகள்  உள்ளது. கிரிக்கெட் 
தோல்வி  நிச்சயமாக  அதில் ஒன்றல்ல. 

 
 

No comments:

Post a Comment