Friday, June 24, 2011

இருண்ட இரவு நீடிக்கட்டுமே!

அலுவலகத்திலிருந்து  இரவு வீடு  திரும்பிக்கொண்டிருந்தேன். பிரதான
சாலையிலிருந்து  ஒன்றரை  கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளே வர வேண்டும். மின்சார  வெட்டு. வீடுகளில்  வெளிச்சம் இல்லை. வீதியிலும்
இல்லை. சாலையில்  செல்லும்  வாகனங்கள் தரும் ஒளி  மட்டுமே. 


அந்த ஒளியை  மிஞ்சி சிறுவர்களின் ஒலி. உற்சாகமாக  விளையாடிக் 
கொண்டிருந்தார்கள். அந்த ஆரவாரத்தைக் கேட்கவே  மிகவும் 
மகிழ்ச்சியாக இருந்தது. ஆண்களும் பெண்களும் கூட அககம்பக்கத்தை
சேர்ந்தவர்களோடு பேசிக் கொண்டிருந்தார்கள். ஆற்காட்டாரால்  
ஊக்குவிக்கப்பட்ட  வணிகமான இன்வெர்டர்  வாங்க முடியாத 
பொருளாதாரப்    பிரிவைச்  சேர்ந்த  மக்கள் அவர்கள். 


இது போன்ற சூழலை  இது நாள் வரை பார்த்ததில்லையே  என 
யோசித்துக் கொண்டிருந்தபோதே  அந்த சூழல் மாறி விட்டது. 


ஆம் மின்சாரம் வந்து விட்டது. அத்தனை பறவைகளும் கூட்டுக்குள்
அடைந்து விட்டது. புத்தகச்சுமைக்குள் சிறுவர் சிறுமியர் புதைந்து
போக ( பாடங்கள் துவங்கா விட்டாலும் கூட) நாதஸ்வரம், தங்கம்
என தொலைக்காட்சித் தொடர்கள் பெண்களையும் ஏன்  பல 
ஆண்களையும் இரு கரம் நீட்டி வரவேற்று விலங்கு பூட்ட
வீதியில் ஒளி  வந்திருந்தது, ஒலி தான் எங்கோ ஒளிந்து 
கொண்டு விட்டது. 


ஏக்கத்தோடு  நினைத்துப் பார்த்தேன்,
இருண்ட  இரவு   நீடிக்கட்டுமே!

2 comments: