Wednesday, October 26, 2011

தந்தையின் பயணம், அன்னையின் கருணை = கனிக்கு பிணை



கலைஞரின் டெல்லிப் பயணம் வெற்றி, 
அன்னை சோனியா கடைக்கண்ணால் அருள
கனிமொழிக்கு பிணை அளிக்க 
சி.பி.ஐ  ஆட்சேபிக்கவில்லை. 
திகாரின்  கதவுகள் 
திறக்கும் நேரம் இது.
ராசாவிற்கு?
எக்கேடு கேட்டு போகட்டும்!
அவரது பாசமிகு தந்தை
கலைஞர் கிடையாதே . . . . 

Friday, October 21, 2011

இவரெல்லாம் ஒரு மத்திய மந்திரி !


மேலே  உள்ள படத்தைப் பார்த்தீர்களா?


தேசியக் கொடி தலைகீழாக உள்ளது கூட
தெரியாத ஒரு மத்திய மந்திரி, அவருக்குக்
கீழே ரத கஜ, துராக பதாதிகள் (சரிதானே) .
என அதிகாரிகள் பட்டாளம்.


ஆனால் யாருமே இதைக் கவனிக்கவில்லை.


இந்த அலட்சியம்தானே  இவர்கள் ஆட்சியின்
அடையாளம்!


ஆனால் எப்போதும் கபில் சிபலின் வாய் 
மட்டும் காது வரை நீளும் . . .

(இந்த படத்தை இணைய தளத்திலிருந்து
எடுத்துத் தந்த எனது மகனுக்கு நன்றி)

ஜெ வின் ஆணவம் அதிகரிக்குமா?

 

பத்து மாநகராட்சிகளிலும்  அதிமுக  வெற்றி பெற்றுள்ளதை
அக்கட்சிக்காரர்களே   ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். 
இந்த முடிவு நல்லதா, கெட்டதா?


மக்கள் தனக்கு  தொடர்ந்து ஆதரவளிக்கிறார்கள், நம்பிக்கை
வைத்துள்ளார்கள் , அவர்களுக்கு  நல்லது செய்ய வேண்டும் 
என்று  ஜெ  நினைத்தால்  அது அனைவருக்கும் நல்லது.


தான் என்ன செய்தாலும் மக்கள்  தனக்கே ஆதரவளிப்பார்கள்
என்று  ஆணவத்துடன்  நடந்து கொண்டால் அதற்கும் 
மக்கள்  பின்பு பதிலடி கொடுப்பார்கள். 


அடக்கமா ? ஆணவமா? 


ஜெ என்ன செய்யப்போகின்றார்.  

Wednesday, October 19, 2011

உள்ளாட்சிகள் உயிர்பெறட்டும்!

 - - - தோழர் ஜி.ராமகிருஷ்ணன்

மாநகராட்சிகளிலிருந்து சிற்றூராட்சிகள் வரை உள்ளாட்சித் தேர்தல்களின் பிரசாரம் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களைவிட பரபரப்பாக உள்ளது. காரணம், ஊராட்சி வார்டு முதல் மாநகராட்சி மேயர் வரை லட்சத்துக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு பல லட்சம் வேட்பாளர்கள் போட்டியிடுவதுதான்.



மத்திய அரசைவிட, மாநில அரசைவிட மக்களோடு நெருக்கமாக இருப்பது உள்ளாட்சி அமைப்புகள்தான். மத்திய அரசுக்குத் தனியான அதிகாரப்பட்டியல், மாநில அரசுக்குத் தனியான அதிகாரப்பட்டியல், இரண்டுக்கும் சேர்த்து பொதுப்பட்டியல், இவைகளன்றி 73-வது, 74-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தனியாக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
1992-ம் ஆண்டு கிராமப்புற மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (நகர்பாலிகா) சட்டத்திருத்தங்கள் அரசியல் சட்டத்தில் கொண்டுவரப்பட்டது. கிராமப்புற மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு 29 அதிகாரங்களும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 18 அதிகாரங்களும் வழங்கிடும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு அரசியல் சட்டம் அளித்தது.




மத்திய அரசிடமிருந்து கூடுதல் அதிகாரத்தை வலியுறுத்தும் தமிழ்நாடு மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேவையான அதிகாரம் வழங்கிட முன்வரவில்லை. தமிழகத்தில் இக்காலத்தில், 10 ஆண்டுகள் திமுக ஆட்சியிலிருந்தது. 3-வது முறையாக அதிமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது.


கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தை மாறி மாறி ஆட்சிசெய்த திமுக, அதிமுக தலைமை உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேவையான அதிகாரங்களையும், நிதி ஆதாரங்களையும் வழங்கவில்லை, உரிய நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை.மாவட்ட ஊராட்சிகள்:
மத்திய அரசு, மாநில அரசு போன்று உள்ளாட்சி அமைப்புகள் மாவட்ட அரசாகச் செயல்பட வேண்டுமென்பதுதான் 73-வது, 74-வது அரசியல் சட்டத்திருத்தத்தின் நோக்கம். ஆனால், தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளின் தலைமையும், மாவட்ட ஊராட்சி என்ற அமைப்பை ஏற்கவில்லை. இதனால் மாவட்ட ஊராட்சிகளுக்கு அதிகாரமளித்து சுயமாக இயங்கிட வகைசெய்யவில்லை. உதாரணமாக, மாவட்ட ஊராட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட திட்டக்குழு அமைக்கப்பட வேண்டும். இத்திட்டக் குழு ஆண்டுதோறும் மாவட்டத்துக்கு உள்பட்ட கிராமங்கள், நகரங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்கி அமலாக்கிட வேண்டும். ஆனால், இத்தகைய மாவட்ட திட்டக் குழுக்கள் கூடிக்கலையும் அமைப்புகளாகவே நீடித்துவருகின்றன.
ஆண்டுத்திட்டங்களை உருவாக்கிடவோ, அவைகளை அமலாக்கிடவோ, மாவட்ட ஊராட்சிகளுக்குப் போதுமான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியருக்கு ஆங்கிலேயர் காலத்தில் அளிக்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், இன்றும் குறுநில மன்னர்கள்போல மாவட்ட ஆட்சியர்கள் செயல்பட்டு வருகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சிகள் பெயரளவில்தான் உள்ளன.


ஊராட்சி அமைப்புகள் சுயமாகச் செயல்பட்டால் பல அற்புதங்களை நிகழ்த்த முடியும். மத்திய அரசு, மாநில அரசு நிர்வாகத்தில் மக்களின் நேரடிப் பங்கேற்புக்கு வாய்ப்பில்லை. ஆனால், கிராம ஊராட்சி நிர்வாகத்தில் ஊராட்சி உறுப்பினர்களையும், ஊராட்சித் தலைவரையும் வாக்களித்துத் தேர்வு செய்த மக்களுக்கு அந்த நிர்வாகத்தில் பங்கெடுக்க நல்ல வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ஊராட்சிமன்றத் தலைவர் கிராம சபைக் கூட்டத்தை நடத்தி ஆண்டுத்திட்டத்தை உருவாக்குவதிலும், திட்ட அமலாக்கத்தை பரிசீலிப்பதிலும் கிராமத்து மக்களை ஈடுபடுத்திட இயலும்.


ஊராட்சியின் வரவு செலவு உள்ளிட்ட, ஊராட்சி மன்றத்தினுடைய பணிகள் அனைத்தையும் கிராம சபையில் விளக்கி மக்களுடைய ஒப்புதலைப்பெற வேண்டும் என்ற ஷரத்து உள்ளது. இங்குதான் ஜனநாயகத்தின் வேர் உள்ளது. இந்த முறையில் ஜனநாயகத்தின் அடித்தளம் அமைந்திட வேண்டுமென்பதே மத்திய சட்டத்திருத்ததின் நோக்கம். ஆனால், இத்தகைய முறையில் ஊராட்சிகள் செயல்பட அரசு அதிகாரிகள் உதவி செய்வதில்லை, சுய நலமிகளும் அனுமதிப்பதில்லை. ஊராட்சித்தலைவர் பதவி பல லட்சத்துக்கு ஏலம் விடப்படுவதில் இருந்தே அடித்தள ஜனநாயகம் என்ன பாடுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.


நகர்ப்புற உள்ளாட்சிகள்:மூன்றடுக்கு உள்ளாட்சி குறித்த 73-வது அரசியல் சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகியவைகளுக்கான ஒரு ஒருங்கிணைந்த தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த சட்டம் இல்லை.


சில திருத்தங்களைச் சேர்த்து 1919-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட சென்னை மாநகராட்சி சட்டம்தான் இன்றும் அமலில் உள்ளது. இதைப்போலவே 1920-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாவட்ட நகராட்சி சட்டத்தின் கீழ்தான் நகராட்சிகளும் பேரூராட்சிகளும் இயங்கி வருகின்றன.


அரசியல் சட்டத்திருத்தத்தில் (நகர்பாலிகா) குறிப்பிடப்பட்டுள்ள 18 அதிகாரங்கள் தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. இதில், திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் தலைமைக்கும் ஆர்வமில்லை. நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ஓர் ஒருங்கிணைந்த சட்டம் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

சமூக நீதி:உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்படும் தலித் மக்கள், பெண்கள் சுயமாகச் செயல்பட இயலவில்லை. கடந்த ஆண்டுகளில் தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சிலர் ஜாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், பலர் தாக்கப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட பெண் பிரதிநிதிகள் சுயமாகச் செயல்பட உதவிசெய்யாமல் சம்பந்தப்பட்ட குடும்பங்களில் உள்ள ஆண்கள் அதிகாரம் செலுத்துவது பல பகுதிகளில் உள்ளன. இத்தகைய தவறான போக்குக்கு முடிவுகட்டிட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.


நிதியாதாரம்:ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாநில அரசு அமைத்திடும் நிதியாணைக்குழு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து செய்திடும் பரிந்துரையின் அடிப்படையில் மாநில அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். தமிழகத்தில் 4-வது நிதியாணைக்குழு அமைக்கப்பட்டு பரிந்துரைகளும் கடந்த மாத இறுதியில் அரசுக்கு அளிக்கப்பட்டது. முதல் நிதியாணைக்குழு, அரசின் வரிவருவாயில் ஐந்தாண்டுகளில் 8 முதல் 12 சதவிகிதம் வரை உள்ளாட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்திட பரிந்துரைத்தது. ஆனால், அது அமலாக்கப்படவில்லை. அடுத்து, மூன்று முறை நிதியாணைக்குழு அமைக்கப்பட்டது. ஆனாலும் 10 சதவிகிதம் மட்டுமே இறுதியாக உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


நிதியாணைக் குழுக்கள் உரிய பரிந்துரைகளைச் செய்வதில்லை என்பது ஒருபுறமிருக்க, அவற்றின் குறைந்தபட்ச பரிந்துரைகளைக்கூட மாநில அரசு அமலாக்கிட முன்வருவதில்லை. இருக்கிற சில வரிவருவாய்களையும் மாநில அரசு குறைத்துவிட்டது. உதாரணமாக, ஊராட்சி அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டுவந்த வீட்டுவரி இணை மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், உள்ளாட்சிகளின் செயல்பாட்டை நிதிப்பற்றாக்குறை மிகக் கடுமையாகப் பாதித்துவருகிறது. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பல திட்டங்களும், கடமைகளும் நிறைவேற்றப்படாததற்கு நிதிப்பற்றாக்குறையே காரணம் என்று உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.


ஆனால், அதிமுக-திமுக இரண்டு கட்சிகளின் தலைமைகளும் அதைப் பொருள்படுத்துவதாகவே இல்லை. மத்திய அரசு தன்னுடைய வரிவருவாயில் 30.5 சதவிகிதத்தை மாநிலங்களுக்கு நிதியாக ஒதுக்கீடு செய்கிறது. மாநில அரசு தன்னுடைய வரி வருவாயில் குறைந்தபட்சம் மூன்றில் ஒருபகுதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்திட வேண்டும்.




ஊழல்கள் ஒழிந்திட:உள்ளாட்சிகளுக்கு நிதிப்பற்றாக்குறை ஒரு பெரிய பிரச்னையாக இருப்பது வளர்ச்சிப்பணிகளுக்குப் பாதிப்பு என்றால், மறுபக்கம் கிடைக்கிற சிறு நிதி கூட ஊழல் மற்றும் முறைகேடுகள் காரணமாக மக்களுக்குப் பயன்படாமல் கொள்ளைபோகும் நிலை உள்ளது. கடந்த காலங்களில் தமிழகத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டும் இரு துருவங்களாக அரசியலில் சண்டமாருதம் செய்வார்கள். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் புரிந்துணர்வுடன் கமிஷனை பங்குபோட்டுக் கொள்வார்கள்.



உள்ளாட்சிகளில் ஊழல் நடைபெறாமல் தடுக்க மாவட்ட நீதிபதி தலைமையில் ஊழல் தடுப்புக்குழு அமைக்க வேண்டும் என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். இன்றைக்கு ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கும் நிலையில், உள்ளாட்சிகளில் ஊழல் நடைபெறாமல் தடுக்கவும், ஊழல் செய்தவர்கள்மீது விசாரணை நடத்தி தண்டனை வழங்கவும் அதிகாரமுள்ள ஊழல் தடுப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். அதேநேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் பிரிவு 205-இன் கீழ் பதவி நீக்கம் செய்திட மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் ரத்து செய்யப்பட வேண்டும்.




உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்தம் கோரி திட்டங்களை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கிறபோது, சிண்டிகேட் அமைத்து டெண்டர் இல்லாமலேயே வேலை ஒப்பந்தங்களைப் பெறுகிற முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். மேலும் ஆன்லைன் மூலமாக டெண்டர் விடும் முறையும் கொண்டுவர வேண்டும்.
உள்ளாட்சி மன்றங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தேர்தல் பிரசாரத்தில் விவாதப்பொருளாக பெருமளவு இடம்பெறவில்லை என்பதுதான் வேதனைக்குரியது. நடைபெறவுள்ள தேர்தல் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடிவுகாலம் பிறக்கட்டும். உள்ளாட்சிகள் உயிர்பெறட்டும்.



கட்டுரையாளர்:

(மாநிலச் செயலர்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்).

நன்றி - தினமணி

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஒ.பி.எஸ்ஸா?



நாளை ஜெ  சொத்து குவிப்பு வழக்குக்காக பெங்களூர்
செல்கின்றார்.  அதற்குள்   அவருக்கு  ஏதோ  சிறைத் 
தண்டனையே கிடைத்து  அடுத்த முதல்வராக 
மீண்டும் ஒ.பன்னீர் செல்வத்திற்கு  வாய்ப்பு 
கிடைத்து விட்டதாக  பலரும்  பேச ஆரம்பித்து
விட்டார்கள். 



அவ்வளவு சுலபமாக  இந்த  வழக்கு முடிந்து விட
ஜெ அனுமதித்து விடுவாரா என்ன?   ஜவ்வு 
போல இன்னும் பல காலம் இழுக்க மாட்டாரா
என்ன? 


அப்படியே அவர் பதவி விலக நேரிட்டாலும் 
ஒ.பி.எஸ்ஸிற்கு  மீண்டும்  வாய்ப்பு  இருப்பதாக
நான் நினைக்கவில்லை.


அத்தனை பேரும்  எதிர்பார்ப்பது போல நடந்து
கொள்வது  என்பது ஜெ வின் குணாம்சம் 
அல்லவே!  

Tuesday, October 18, 2011

மம்தாவிற்கு கொலை மிரட்டல்



மாவோயிஸ்டுகள்  தங்கள் நடவடிக்கைகளை 
நிறுத்திக் கொள்ள ஒரு வார கெடு கொடுத்த
மம்தா பானர்ஜிக்கு இப்போது மாவோயிஸ்டுகள்
பதிலடி கொடுத்துள்ளனர்.


திரினாமுல் காங்கிரஸ் தலைவர்கள் 
கொல்லப்படுவார்கள் என கையால் 
எழுதிய சுவரொட்டி ஒட்டியுள்ளனர். 

மார்க்சிஸ்டுகளுக்கு  எதிராக  மம்தா மற்றும்
ஏனைய பிற சக்திகளால் வளர்க்கப்பட்ட 
மாவோயிஸ்டுகள்  இப்போது  அவருக்கு 
எதிராக திரும்பியுள்ளனர். 

கொள்ளையர்கள் பணத்தை பங்கிடும் 
வேளையில் பிரச்சினை வந்தால் 
ஒருவர்  மற்றொருவரை காட்டிக் 
கொடுப்பார்கள். 

இப்போது யார் யாரை  அம்பலப்படுத்தப்
போகின்றார்கள்? 

யார் யாரை தாக்கப் போகின்றார்கள்?


இனி வரும் காலம் வங்கத்திற்கு 
வசந்த காலமே! 

Monday, October 17, 2011

அடிச்சுக்க ஆரம்பிச்சாட்டாங்கப்பா


 
மாவோயிஸ்டுகள்  தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திக் 
கொள்ள ஒரு வார கெடு அளித்துள்ளார் மம்தா பானர்ஜி.
இடது முன்னணி ஆட்சிக்காலத்தில் மார்க்சிஸ்ட் கட்சித்
தொண்டர்களை மாவோயிஸ்டுகள் கொன்று குவித்த 
போது மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகளே 
இல்லை என சாதித்தவர் மம்தா.  
 
 
இவரது கட்டுப்பாட்டில்இருந்த ரயில்வே துறையின்
ஒரு ரயிலை வெடி குண்டு வைத்து நூற்றுக் 
கணக்கானவர்களை கொன்ற போதும் 
கூட மாவோயிஸ்டுகள் இல்லவே இல்லை  என அவர் 
சாதித்தார்.  
 

மம்தாவின் ஆட்சியை  ஏற்படுத்துவதுதான் புரட்சி 
என செயல்பட்டவர்கள்  மாவோயிஸ்டுகள்.
 


கொள்கையற்ற இரு கூட்டங்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு
எதிராக கை கோர்த்தது . அவர்களின் நோக்கம் 
நிறைவேறியதும்  முரண்பாடுகள் இப்போது 
வெளி வந்து விட்டது.
 


முன்பு இடது முன்னணி ஆட்சிக்காலத்தில் மேற்கு
வங்க மாநிலத்தில் இல்லாத மாவோயிஸ்டுகள்
இப்போது மட்டும் எங்கிருந்து வந்தார்கள்? 
 
 
 
இனி சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க  
மம்தா தீதியும்  துப்பாக்கியின் மூலம்
புரட்சியை உருவாக்க  மோதப்போகின்றார்கள்.
இந்திய முதலாளித்துவ ஊடகங்களும், 
மெத்தப் படித்த மேதாவிகளும்  யார் பக்கம்
நிற்பார்கள்? 
இவர்கள் அடித்துக் கொள்வார்கள்  என்பது
எதிர்பார்த்ததுதான். ஆனால் இவ்வளவு 
விரைவில்  இது நடக்கும்  என்று 
எதிர்பார்க்கவேயில்லை.


பின் குறிப்பு 


சில மணி நேரம் முன்பு எழுதிய 
பதிவில் சில கூடுதல் விஷயங்களை
இணைத்துள்ளேன்.

அராஜகவாதிகளுக்குள் மோதலா?

மாவோயிஸ்டுகள்  தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திக் 
கொள்ள ஒரு வார கெடு அளித்துள்ளார் மம்தா பானர்ஜி.
இடது முன்னணி ஆட்சிக்காலத்தில் மார்க்சிஸ்ட் கட்சித்
தொண்டர்களை மாவோயிஸ்டுகள் கொன்று குவித்த 
போது மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகளே 
இல்லை என சாதித்தவர் மம்தா. 

மம்தாவின் ஆட்சியை  ஏற்படுத்துவதுதான் புரட்சி 
என செயல்பட்டவர்கள்  மாவோயிஸ்டுகள்.

கொள்கையற்ற இரு கூட்டங்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு
எதிராக கை கோர்த்தது . அவர்களின் நோக்கம் 
நிறைவேறியதும்  முரண்பாடுகள் இப்போது 
வெளி வந்து விட்டது.

முன்பு இடது முன்னணி ஆட்சிக்காலத்தில் மேற்கு
வங்க மாநிலத்தில் இல்லாத மாவோயிஸ்டுகள்
இப்போது மட்டும் எங்கிருந்து வந்தார்கள்?

Sunday, October 16, 2011

சாயம் வெளுத்துப் போன நடிப்பு சுதேசி அண்ணா ஹசாரே

அண்ணா ஹசாரே  என்ற புதிய உத்தமரை  ஊடகங்கள் 
தலை மேல் வைத்துக் கூத்தாடின. ஆம் அவர் உத்தமர்தான்.


ஊழல்களின் ஊற்றுக் கண்ணாக திகழும் முதலாளிகள்
ஆதரவோடு  ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திய
யதார்த்தவாதி. 


ஊழல் இன்று பல்கிப் பெருக  உலகமயம்தான் காரணம்
என்பதை  சிறிது கூட  கண்டு கொள்ளாத கொள்கை வீரர்.


சங் பரிவார ஆதரவோடு முன்னுக்கு  வந்து நடுநிலை  
மனிதர்    என்று   எல்லோரையும் இளிச்சவாயராக்கிய
திறமைசாலி.


பிரதமரை  இணைக்க வேண்டும் என பேசி விட்டு பிறகு
அதைப் பற்றி கவலையே கொள்ளாத காரியவாதி.


பாஜக விற்கு  ஆதரவாக  தேர்தல் களம் இறங்கிய போது
வேடம் களையத் தொடங்கியது. 


இத்தனை நாள் இவருக்கு  ஆதரவாக, பின்புலமாக 
இருந்த பிரசாந்த் பூஷன் சங் பரிவார அமைப்புக்களால்
கடுமையாக தாக்கப் பட்டபோது, ஆர்.எஸ்.எஸ் 
கருத்தை அப்படியே  வாந்தி எடுத்து  பிரசாந்த் 
பூஷனையும்  கழட்டி விடத் தயாரான போது 
உத்தமர் வேடம் முற்றிலுமாக கலைந்து விட்டது.


இனியும் என்ன வெட்கம் அண்ணா ஹசாரே?


கதர்க்குல்லாவை கழட்டி எறிந்து கறுப்புக் 
குல்லாவை  அணியுங்கள். . .


வெள்ளை ஆடையை வீசி எறிந்து காவி 
அங்கிக்குள்  அடைக்கலம் புகுந்திடுங்கள்.


உங்களின் அடுத்த அசிங்கம்  எது என்று 
அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்.

Saturday, October 15, 2011

அத்வானிக்கு அடி மேல் அடி

நரேந்திர மோடியின் உண்ணா விரத நாடகத்திற்கு 
போட்டியாக பிரதமர் பதவிக்கான  கனவு  எனக்கு 
இன்னும் உள்ளது  என்பதைக் காண்பிக்க  அத்வானி
ஊழல் எதிர்ப்பு ரத யாத்திரை  துவங்கிய நேரம் 
சரியில்லை போலும்! (ஜோசியரை மாத்துங்கப்பா)


நிருபர்களுக்கு  கவர் கொடுத்த விவகாரத்தை 
தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்காக  பாஜக
முன்னாள்  முதல்வர் எடியூரப்பா வேறு  இன்று 
கைதாகி விட்டார். 


அவர் கட்சி ஊழல்களுக்கு  எதிராக  அடுத்த 
ரத யாத்திரை கர்நாடகாவில் துவக்கி 
மத்திய பிரதேசம், உத்தரகண்ட் சென்று 
குஜாராத்தில் முடிப்பாரோ ? 

நிதி மூலதனத்தின் கொடுங்கோன்மை

 எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர்
தோழர் என்.எம்.சுந்தரம்  எழுதிய புத்தகத்திற்கு மேற்கு வங்க மாநில 
முன்னாள் நிதியமைச்சர் தோழர் அசோக் மித்ரா எழுதிய விமர்சனத்தின்
தமிழாக்கம் கீழே  தரப்பட்டுள்ளது. அருமையான  ஒரு புத்தகத்திற்கு
அருமையான ஒரு ஆய்வு. 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நிதி மூலதனத்தின் கொடுங்கோன்மை
---- அசோக் மித்ரா 

இருபது ஆண்டு காலத்தில் உலக நிதி மூலதனத்தின் பங்கு : அதன் பேராசையும், தவறான கணிப்புகளுமே, பெருவீழ்ச்சி காலத்திற்குப் பின்னர் அமெரிக்காவை இவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளியது.

(இன்சூரன்ஸ் ஊழியர் இயக்கத்தின் மூத்த தலைவர் என்.எம். சுந்தரம் எழுதியிருக்கும் “தகர் நிலையில் உலக நிதி மூலதனம் - முகத்திரை கிழியும் சுதந்திரச் சந்தை முதலாளித்துவம்” (Fragility of Global Financial Capital) என்ற ஆங்கில நூல் குறித்து பொருளாதார நிபுணரும் மேற்குவங்க முன்னாள் நிதி அமைச்சருமான டாக்டர் அசோக் மித்ரா - தி `ஹிந்து நாளிதழ் - 11.10.11)

இந்நூலின் ஆசிரியர் ஒரு பொருளி யல் வல்லுனரோ அல்லது எந்தக் குறிப்பிட்ட துறை குறித்த நிதி ஆய் வாளரோ அல்ல. அவர் தொழிற்சங்க இயக்கத்தில் பழுத்த அனுபவம் கொண் டவர். இந்திய இன்சூரன்ஸ் துறையில், உலக நிதி மூலதனம் ஊடுருவியதை எதிர்த்த இன்சூரன்ஸ் ஊழியர்களின் கடுமையான போராட்டத்தினை தலை மை தாங்கி நடத்தியவர். அந்தப் போராட் டத்தில் முன்வைக்கப்பட்ட அனைத்து அம்சங்களிலும் முழுமையான வெற்றி கிடைக்கவில்லையெனினும், சர்வதேச நிதி மூலதனம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும், அண்மைக் காலங் களில், அமெரிக்காவில் மட்டுமல்லாது, உலகின் பல கண்டங்களிலும் அது எத்த கைய மோசமான விளைவுகளை ஏற் படுத்தியிருக்கிறது என்பது குறித் தெல்லாம் நெருக்கமாக அறிந்து கொள்வ தற்கு அவருக்கு இந்த அனுபவம் உதவி யிருக்கிறது.

“இன்சூரன்ஸ் ஒர்க்கர்” மாத இதழில் தொடராக வெளிவந்த 27 கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. சில கருத்துக்கள் மீண்டும் மீண்டும் விவா திக்கப்பட்டிருக்கின்றன. தவிர, அருமை யான விவாதங்களுக்கு இணையாக, சில ஆழமான புள்ளி விவரங்களும் கூடு தலாக இடம்பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

சுந்தரத்தைப் பொறுத்தவரை அவரது தளராத நம்பிக்கைதான் அவரது பலம். நிதி மூலதனத்தின் தன்மை குறித்தும், அது ஒவ்வொரு நாட்டிலும், அதே போல் அந்நாடுகளில் ஒவ்வொரு துறையிலும் அது எப்படி கொள்ளைச் சுரண்டலில் ஈடுபட்டது என்பது குறித்த எதார்த்த நிலைமைகளை அவர் விரிவாகக் குறிப் பிட்டிருக்கிறார். கடந்த இருபது ஆண்டுக் கால அனுபவத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், சர்வதேச நிதி மூலதனம் என்பதற்கே நெருக்கடி என்பதுதான் மற்றொரு பெயராக இருக்க முடியும். அதனால் நெருக்கடியைத் தவிர வேறு ஒன்றையும் தோற்றுவிக்க முடியாது. ஏனெனில், அது அந்த வகையில் தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

உடனடி லாபம், மேலும் லாபம், மென் மேலும் லாபம் என்பதே நிதி மூலதனத் தின் தொடரும் வேட்டை. இதற்காக, உலகம் முழுவதும் சுதந்திரமாகச் சுற்றி வருவதற்கான உலக அமைப்பினை அது தனது நீண்ட நெடிய முயற்சியின் மூலம் உருவாக்கியிருக்கிறது. உற்பத்தியில் ஈடுபடுவதை விட ஊகத்தில் ஈடுபடு வதன் மூலமே, அத்தகைய உடனடி கொள்ளை லாபம் சாத்தியமாகிறது. எனவே, ஊக நடவடிக்கைகள் அதனது இயல்பான விருப்பமாக மாறியிருக்கிறது.

பொருத்தமான சூழ்நிலைகள்!

அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பா விலுள்ள பணக்கார நாடுகளிலும் புதிய உயர் தொழில் நுட்பங்கள் காரணமாக, பிற நாடுகளை விட, முதலீடு - உற்பத்தி விகிதம் சாதகமாக மாறியுள்ளது. இந்த நாடுகளில் வருமான வினியோகத்தில் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடவில்லை. எனவே, ஒட்டுமொத்த கிராக்கி நிலைமை களிலும் ஸ்திரத்தன்மை உள்ளது. ஊக நடவடிக்கைகளுக்கு இது வெகுவாகப் பொருந்துகின்ற சூழ்நிலை என்பதால், அவை பன்மடங்கு அதிகரித்துள்ளன.

நிதி மூலதனத்திற்கு அறநெறிகள் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. தனது லாபத்தினைப் பெருக்க வேண்டுமென் றால், அது எவ்வளவு மோசமானது என் றாலும், கிரிமினல் நடவடிக்கை என்றா லும் கூட அதில் ஈடுபடத் தயங்காது. எந்த அமெரிக்கப் பொருளாதாரம் தனக்கு மிகப் பெரும் பலமாக இருந்ததோ, அந்தப் பொருளாதாரத்தினையே இன்று பலவீனப்படுத்துவதில் நிதி மூலதனம் தயக்கம் காட்டவில்லை.

நிதி மூலதனத்தின் கொடுங்கோன் மை, மேற்கு ஐரோப்பாவில் மத்திய தரைக் கடல் ஓரங்களில் இருக்கும் சிறிய நாடுகளை வறுமைக்குள்ளாக்கும் நிலை மைக்கு சென்றிருக்கிறது. இந்தியப் பொரு ளாதாரத்தினை எப்படி வேண்டுமா னாலும் வடிவமைத்துக் கொள்ளலாம் என்ற அளவில், அது நிதி மூலதனத்தின் கைகளில் சிக்கித் தவிக்கிறது. பங்குச் சந்தையின் மீதான முழுமையான கட்டுப் பாடு அந்நிய நிதி முதலீட்டாளர்களின் கைகளில் உள்ளது. இந்திய நாடு உருவாக்கி வைத்திருக்கும் தொழில் உற்பத்தித் தளங்களை அழிப்பதற்குமான சக்தியும் இன்று அதனிடம் உள்ளது.

அதனுடைய அழிவு சக்தி ஒரு புறம் இருப்பினும் கூட, நாம் வேறு ஒரு அம்சத் தினை விவாதிக்க முடியும். நிதி மூலத னம் தகர்நிலையினை எட்டிவிட்டது என்பது உண்மையா? கடந்த இருபது ஆண்டு காலத்தில் உலக நிதி மூலதனத் தின் பேராசையும், தவறான கணிப்புக ளுமே, பெருவீழ்ச்சி காலத்திற்குப் பின் னர் அமெரிக்காவை இவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளி யிருக்கிறது.

1930களில், அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், அரசாங்கத் தின் பொதுப்பணிகளின் மூலம் வரு மானத்தையும், வேலைவாய்ப்புக்களை யும் உருவாக்கினார். பற்றாக்குறை பட் ஜெட் (னுநகiஉவை குiயேnஉiபே) மூலம் நிதி நிலைமையினைச் சமாளித்தார்.

அரசியல் செல்வாக்கு!

இன்றைய அமெரிக்காவில் நிதி மூல தனத்தின் அரசியல் செல்வாக்கு, இதற்கு நேர்மாறாக செயல்பட்டிருக்கிறது. பாரக் ஒபாமாவும் பற்றாக்குறை பட்ஜெட்டிற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். ஆனால் மக்களுக் காக அல்ல. திவாலாகும் நிலையிலிருந்த வங்கிகளையும், பெரிய கம்பெனிகளையும் காப்பாற்றுவதற்கான நிர்ப்பந்தம் அது. அவர்களது சொந்தத் தவறுகளின் காரணமாக ஏற்பட்ட நிலைமைகளி லிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற் காக செலவழிக்கப்பட்ட பணம் அது. உலக நிதியங்களுக்கு தலைமை தாங்கிய, கம்பெனி தலைவர்களின் போனஸ் உட்பட அனைத்தும் பாதுகாக்கப்பட்டது.

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் ஒதுக்கிய பணத்தின் ஆகப் பெரும்பகுதி, பெரிய பெரிய கம்பெனிகளின் நலன்களுக் காகவே செலவிடப்பட்டதே தவிர, நடுத் தர வர்க்கம் மற்றும் தொழிலாளி வர்க்கத் தினரின் வாழ்நிலைத் துயரங்களைப் போக்குவதற்கு செலவிடப்படவில்லை.

தேசியப் பொருளாதாரங்கள் பலவற் றை அழித்த பின்னரும் கூட நிதி மூல தனம் ஒரு அச்சுறுத்தும் சக்தியாகவே தொடர்ந்து வருகிறது. அதன் அளவு கடந்த பேராசை அமெரிக்காவில் உற் பத்தி தேக்கத்தினை உருவாக்குமா, அதை விட மோசமான நிலைமைகளை உருவாக்குமா? மேற்கு ஐரோப்பாவில், சமூக நிலைமைகளை புரட்டிப் போடுமா? என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. வியத்தகு வகையில் பலவும் நடக்கக் கூடும். அமெரிக்கப் பொருளாதாரம் நம்பகத்தன்மையினை இழக்குமானால், டாலர் உலகின் ரிசர்வ் நாணயம் என்ற அந்தஸ்தினை இழந்து விடும். அதுவே, நிதி மூலதனத்தின் இறுதி யாத்திரைப் பாடலாக அமையலாம்.

மற்றுமொரு காரணியும் இங்கு கவனத் தில் கொள்ளப்படவேண்டும். நிதி மூலத னத்தினை எதிர்கொள்ளும் சக்தியாக ஏதும் இல்லாததும் நிதி மூலதனத்தின் ஆதிக்கம் தொடர்வதற்குக் காரணமாய் இருக்கிறது.

உலகின் அடிவானத்தைத் தொட்டுப் பார்த்தால், இன்னும் 20 ஆண்டுகளில், சீனா பெரிய அளவில் பொருளாதார மற்றும் இராணுவ பலத்துடன் நிதிமூல தனத்தினை எதிர்கொள்ளும் சக்தியாக உருவாகும் சாத்தியங்கள் உள்ளன. ஆனால் ஒரு நிபந்தனை. ஏற்றுமதியினை பெரிதும் நம்பி நிற்கும் பொருளாதாரம் என்ற நிலைமையிலிருந்து அது விடுபட வேண்டும்.

சுந்தரத்தினுடைய புத்தகம் அவை குறித்த சிந்தனைகளை முன்வைக்கிறது. அவை அனைத்தும் வரவேற்கப்பட வேண்டியவையே.

தமிழில் : இ.எம். ஜோசப்

நன்றி : தி ‘ஹிந்து நாளிதழ் - 11.10.11


தமிழாக்கம் வெளியீடு  தீக்கதிர்  


அசிங்கப்பட்டு நிற்கும் அரசியல் தலைவர்

ஊழலுக்கு  எதிராக  வீர சூர ரத யாத்திரை  புறப்பட்ட
சிங்கம் அத்வானி இப்போது  அசிங்கப்பட்டு நிற்கிறது.
ஊழல் இலஞ்சத்திற்கு  எதிரான  ரத யாத்திரையை 
நன்கு 'கவர்' செய்ய பத்திரிக்கையாளர்களுக்கு 
'பணக்கவர்கள்'  இலஞ்சமாக  அளிக்க  அதிலே  ஒரு
பத்திரிக்கையாளர்  மட்டும் அந்தப் பணத்தை திருப்பிக்
கொடுத்து விட்டு பத்திரிகையில்  போட்டும் தள்ளி 
விட்டார். 


லஞ்ச ஊழலுக்கு எதிரான ரத யாத்திரை  லஞ்ச ஊழல்
புகாரால் நிலை குலைந்து போய் விட்டது.


பின் குறிப்பு : கவர்கள்  இல்லாமல் பெரும்பாலான 
செய்திகள்  வருவதில்லை  என்பது சோகமான 
யதார்த்த. குறைந்தது ஐம்பது சதவிகித  நிருபர்கள்
கவர்களை, அன்பளிப்புக்களை  எதிர்பார்க்கின்றனர் 
என்பதும் அதில்தான்  அவர்களின் பிழைப்பு  
நடக்கிறது  என்பதும்  இன்னொரு  யதார்த்தம்.

   

Friday, October 14, 2011

நன்றியில்லாதவர்கள்



பாவம் நவீன உத்தமர் அண்ணா ஹசாரே! பாஜக 
நலனுக்காக  எவ்வளவு சிரமப்பட்டு உழைக்கின்றார்.
அது பற்றிய புரிதல்  சிறிதும் இல்லாமல் சங் பரிவாரக் 
கும்பலின்  கிளை அமைப்பு  ஒன்று அவரது 
ஆதரவாளர்களை  தாக்கியுள்ளது.

கொஞ்சம் கூட   
நன்றியில்லாதவர்கள்

Thursday, October 13, 2011

ஆள் மாறாட்ட மந்திரியை காணவில்லை.



பத்தாம் வகுப்பு தேர்வில்  ஆள் மாறாட்டம்  செய்த 
புதுவை கல்வி மந்திரியை  விசாரணைக்கு அழைக்கும்
நோட்டீசை  வழங்க முடியவில்லை. ஏனென்றால் 
அவரை காணவில்லையாம். எங்கே போனார் என்பது
தெரியவில்லையாம். 


ஒரு வேளை தொகுதிக்குள் ஒளிந்து  
கொண்டிருப்பாரோ! ஏனென்றால் பொதுவாக
மந்திரிகள் போகாத இடம்  அவர்களது 
தொகுதிகள்தானே! 


இன்னொரு சுவாரசியமான  விஷயம், மார்க்சிஸ்ட்
கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர்
புதுவை டி.முருகன்  சொன்னது.


அமைச்சரின் கல்யாண பத்திரிக்கைப்படி 
அவரது படிப்பு பி.ஏ, விசிடிங் கார்ட், லெட்டர் 
ஹெட் படி  பி.சி.ஏ , ஃ ப்ளெக்ஸ்  பேனர்களில் 
எம்.ஏ . 


அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!  

Wednesday, October 12, 2011

அராஜகத்திற்கு அளவில்லையா? ரத்தம் கொதிக்குதே!



இன்று காலை நாளிதழ் படிக்கும் போதே  ரத்தம்
கொதித்தது. 

நகரத்தில் 32  ரூபாயும்  கிராமத்தில் 26 ரூபாயும்  
சம்பாதிப்பவர்கள்   வறுமைக் கோட்டிற்கு மேலே
வசிப்பவர்கள்  என்று  மத்தியரசு கூறியதற்கு 
நாடெங்குமே  எதிர்ப்பு வந்துள்ள நிலையில் 
அதனை மெத்தப் படித்த மேதாவி, அமெரிக்க 
எடுபிடி  மாண்டேக் சிங் அலுவாலியா அதனை
நியாயப்படுத்தியுள்ளார். 
அவர்களது நிர்ணயம் சரிதானாம். இந்த தொகை
கொண்டு ஒரு குடும்பம் நிம்மதியாக வாழ
முடியுமாம்.


எவ்வளவு அராஜகமான  செயல் இது?
இந்த பொருளாதார மேதைகளால் இந்த
தொகை கொண்டு ஒரு நிமிடம் கூட 
வாழ முடியாது.


சாதாரண மக்கள் யாருக்கும் அரசு  எதுவும்
செய்யாது. அவர்கள் தற்கொலை செய்து கொண்டு
சாகட்டும்  என்று மட்டும் இவர்கள் நேரடியாக
சொல்லவில்லை. 
 

Tuesday, October 11, 2011

கலைஞருக்கு ஒரு சூடான கேள்வி



வேலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும்  
தோழர் ஜி.லதா (குடியாத்தம் தொகுதியின் முன்னாள் 
சட்ட மன்ற உறுப்பினர்) அவர்களுக்கு ஆதரவாக 
இன்று  வேலூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில்
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் 
தோழர் ஜி.ராமகிருஷ்ணன்  அவர்கள்  கலைஞரிடம்
கேட்ட  ஒரு கேள்வி.
" நில அபகரிப்பு வழக்கு  என்று மாநில அரசு முன்னாள்
அமைச்சர்களை கைது செய்வது பழி வாங்கும் நடவடிக்கை
என்றால், உங்கள் கட்சி பங்கேற்றுள்ள, உங்கள் மகன் 
அழகிரி அமைச்சராக உள்ள மத்தியரசு, உங்கள் மகள் 
கனிமொழியை கைது செய்து டெல்லி சிறையில்  
அடைத்துள்ளது. உங்கள் கட்சியின் முன்னாள் மத்திய
அமைச்சர் ஆ. ராசாவையும் டெல்லி சிறையில் 
அடைத்துள்ளது. உங்கள் பேரன்கள்  வீட்டில்  சி.பி.ஐ
சோதனை செய்துள்ளது. 


இதையெல்லாம் ஏன் மத்திய  அரசின்  பழி வாங்கல் 
நடவடிக்கை என்று  கூறுவதில்லை. அப்படியானால் 
அவை எல்லாம் நியாயமானது  என்று 
ஒப்புக் கொள்கின்றீர்களா? 


இதற்கு கலைஞர்  என்ன பதில் சொல்லப் போகின்றார்?

Monday, October 10, 2011

திமுகவை நாங்கள்தான் அழிப்போம் - கலைஞர் சபதம்


திருச்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்  கலைஞர் 
சொன்னது  - திமுகவை யாராலும் அழிக்க முடியாது.
யாருக்கும்  அந்த சக்தி கிடையாது. 


அவர் சொல்லாதது 
திமுகவை  எங்கள் குடும்பத்தை தவிர  வேறு யாராலும்
அழிக்க முடியாது. திமுகவை  அழிக்கும் சக்தி 
எங்களுக்கு மட்டும்தான்  இருக்கிறது.


தொண்டர்கள்  மனதிற்குள்   நினைத்ததும்  
அதைத்தான்.   

Sunday, October 9, 2011

அம்பலப்பட்டு நிற்கும் அண்ணா ஹசாரே

ஹரியானா மாநிலம் ஹிஸ்ஸார் நாடாளுமன்றத் 
தொகுதி  இடைத்தேர்தலில்  காங்கிரஸ் கட்சிக்கு 
எதிராக பிரச்சாரம்  செய்ய அண்ணா ஹசாரே 
கூட்டம்  களம் இறங்கி விட்டது.
உண்ணா விரத நாடகம் முடிந்து அடுத்த 
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்னும்  
தொடங்கவேயில்லை. அதற்குள்  இவர்கள்
ஏன்  தேர்தல் களத்தில்?
காங்கிரஸ் கூடாது, பன்சிலால் கட்சி கூடாது,
சௌதாலா  கட்சி கூடாது என்றால் இருப்பது
பாஜக தானே! அதை இந்த உத்தமர்கள் 
வெளிப்படையாகவே  சொல்ல வேண்டியதுதானே! 


உத்தமர் வேடம் போட்டு பாஜக விற்கு ஆதாயம் 
தேடும்  அண்ணா ஹசாரே போன்ற 
புனிதர்களை விட ஊழல் பேர்வழிகள் 
எவ்வளோ மேல். 


இவர்கள் நடிப்புச் சுதேசிகள்.  

Saturday, October 8, 2011

ராமபிரான் பெயரில் ஒரு குழந்தையின் மரணம்





தமிழகத்தில்  கந்த சஷ்டி அன்று பல ஊர்களில் சூர சம்ஹார
விழா நடக்கும். முருகன் வேடம் போட்ட மனிதன் பொம்மை
சூர பத்மனை கொல்வது  என்பது அந்நிகழ்வு. 


அது போல ராவணனின் பொம்மை அல்லது கொடும்பாவியை
ராமன் வேடமிட்டவர்கள்  கொல்வது என்ற விழா வட இந்தியாவில்
விஜய தசமி அன்று நடைபெறும்.




இயக்குனர் வசந்த், தனது ஆசை பட க்ளைமாக்ஸ் காட்சியில் 
மிகவும் பொருத்தமாக  இதனை பயன்படுத்தியிருப்பார். 
அதே போல கமலின் ஹேராம் திரைப்படத்திலும்  இவ்விழா
வரும்.


புராணத்துக் கதையை மீண்டும் மீண்டும் நிகழ்த்தி  
ஒருவனை ஒவ்வொரு ஆண்டும் கொள்வதில்  என்ன
சிறப்பு இருக்கின்றது  என தெரியவில்லை. துரியோதனன்
படுகளம்  என்று  வேலூர் மாவட்டத்திலும்  இப்படி 
ஒரு நிகழ்வு நடக்கும்.


மனிதனுக்குள்  ஒளிந்திருக்கிற கொலை வெறி தான் 
இப்படி கடவுளின் பெயரால்  வெளிப்படுகின்றதோ 
என எனக்கு எப்போதும்  தோன்றும். இந்த நிகழ்விற்கு
பிரதமரும் சோனியா காந்தியும் வேறு  ஒவ்வொரு 
ஆண்டும் வந்து செல்வார்கள். எல்லாம் ஓட்டுக்கள் 
படுத்தும் பாடு. 


இந்த பதிவில் நான் சொல்ல வந்த முக்கிய விஷயம்
வேறு. 

நேற்று முன் தினம் டெல்லியில் நடந்த  தசரா 
விழாவில்  ராமன், ராவணனை தீயிட்டதும்  
இருபது அடி உயர கொடும்பாவியின்  ஒரு 
எரியும் மூங்கில் கம்பு கீழே  விழுந்தது. 


அந்த எரியும் மூங்கில் பவ்யா என்ற ஆறு 
வயது  சிறுமியின்  மேல்  விழ அந்த  சிறுமி
மருத்துவமனையில்  இறந்து போனாள்.
எவ்வளவு பெரிய துயரம்  இது? 


கடவுளின் அருள் பெறச் சென்றவர்கள் 
கடவுளின்  பெயரால் மரிப்பது  என்பது 
எவ்வளவு பெரிய கொடுமை! கடந்தாண்டு
சபரி மலையில் பலருக்கு  நடந்தது
இந்த ஆண்டு பவ்யாவிற்கு  நிகழ்ந்தது.


மொத்தத்தில் ராமன் விட்ட அம்பு 
பவ்யாவின்  உயிரைப் பறித்து விட்டது.
கடவுளை நம்பினோர்  கைவிடப் படுவார்.



 



  

Friday, October 7, 2011

அழகான ஆபத்து


மேலே உள்ள படத்தை பார்த்தீகளா, எவ்வளவு 
அழகாகவும்  மினுமினுப்போடும்  உள்ளது!



அதற்காக இதனை செல்லப் பிராணியாக 
வளர்க்க முடியாதே!



தோற்றத்தை நம்பி  ஏமாற வேண்டாம்  என்பதுதான்
இது தரும் செய்தியோ!

Thursday, October 6, 2011

உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட குரலாய்



செப்டம்பர் மாதம் ஏழாம் நாள்  புது டெல்லியில்  நடைபெற்ற அனைத்து
தொழிற்சங்கங்களின்  மாநாடு பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. 
மாநாட்டில்  வெளியிடப்பட்ட பிரகடனம் மிகவும் முக்கியமானது. 
அப்பிரகடனத்தின்  முக்கிய அம்சங்கள் 

23  பிப்ரவரி 2011  அன்று  அனைத்து தொழிற்சங்கங்கள்  நாடாளுமன்றம்
நோக்கி பேரணி நடத்தி அளித்த மனு மீது மத்தியரசு எவ்வித 
நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக உழைக்கும் மக்கள் மீது
மேலும் பல தாக்குதல்களைத்தான்  நடத்தியுள்ளது. பெட்ரோல் 
விலை உயர்வு மூலம் விலைவாசி உயர வழி வகுத்துள்ளது. 
பொதுத்துறை நிறுவனப் பங்குகளை பல்வேறு முறைகள் மூலம்
விர்கப்பார்க்கிறது. தொழிலாளர் நலச்சட்டங்கள் மற்றும் 
தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை  பாதிக்கப்படுகின்றது. 

அனைத்து தொழிற்சங்கங்கள் முன் வைக்கும் ஐந்து முக்கிய
கோரிக்கைகள்.

விலைவாசி  உயர்வு கட்டுப்படுத்தப் படவேண்டும்

முதலாளிகளுக்கு மானியம் அல்லது சலுகைகள் வழங்கும் 
அரசுகள், அத்தொகையை  வழங்க வேலை வாய்ப்பு உருவாக்கம்,
பணிப்பாதுகாப்பு  ஆகியவற்றை நிபந்தனையாகக வேண்டும்.

தொழிலாளர் நலச்சட்டங்கள் கடுமையாக அமுலாக்கப் 
படவேண்டும். மீறும் நிறுவனங்கள் தண்டிக்கப்படவேண்டும். 

ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களுக்கான  சமூகப்
பாதுகாப்பு நிதி உருவாக்கப்பட வேண்டும். பயனளிக்கும் 
விதத்தில் செயல்பட வேண்டும். 

பொதுத்துறை பங்கு விற்பனை நிறுத்தப்பட வேண்டும்.   

இவற்றைத்தவிர  

அரசு உடனடியாக எடுக்க வேண்டிய ஐந்து விஷயங்கள் 
பற்றியும் பட்டியல் அளித்துள்ளது.  

ஒப்பந்த / தற்காலிக ஊழியர் முறை ஒழித்துக் கட்டப்படவேண்டும்.

குறைந்த பட்ச ஊதியம் 10000  ரூபாய் என குறைந்தபட்ச
ஊதியச்சட்டம் திருத்தப்பட வேண்டும். 
பென்ஷன், பணிக்கொடை என எதற்கும் உச்சவரம்பு கூடாது.

உறுதி செய்யப்பட பென்ஷன் அனைவருக்கும் தரப்படவேண்டும். 

தொழிற்சங்கங்களை  45 நாட்களுக்குள் பதிவு செய்திட வேண்டும். 
தொழிற்சங்க அங்கீகாரம் குறித்த சர்வதேச தொழிலாளர் 
அமைப்பின் தீர்மானங்கள் 87  மற்றும் 98  ஏற்றுக் கொள்ளப்பட்டு
அமுலாக்கப்பட வேண்டும். 
வரும் 8 நவம்பர் அன்று  சிறை நிரப்புப் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள்
ஆகியவை நடத்துவது  என்று ஜனவரி மாதம் வேலை நிறுத்தம்
செய்வது என இம்மாநாடு முடிவெடுத்துள்ளது. 

மக்களின் உண்மையான பிரச்சினைகள் என்ற புரிதலோடு
தொழிற்சங்க இயக்கம்  ஒன்றுபட்டு போராட முன் வந்துள்ளது. 
மத்திய சங்கங்கள், துறைவாரி  சங்கங்கள் பங்கேற்ற இம்மாநாட்டில்
காங்கிரஸ் கட்சியின் ஐ.என்.டி.யு.சி சங்கங்கமும் பாஜகவின் 
பி.எம்.எஸ் சங்கமும் திமுகவின் தொ.மு.ச. வும் பங்கேற்றது 
என்பது சிறப்பானது. 

அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து தொடர்ந்து 
இயக்கங்கள் மேற்கொள்வது நம்பிக்கையளிக்கிற ஒன்றாகும்.

 
   

டி.ராஜேந்தரின் முன்னோடி சிவாஜி கணேசன்.


அடுக்கு மொழி அபத்த வசனம் பேசுவதில்  டி. ராஜேந்தர் தான்
முன்னோடி  என்று  நினைத்திருந்தேன். காப்டன் டி.வி யில் 
சிறிது நேரம் கந்தன் கருணை பார்த்த பிறகுதான் 
தெரிந்தது  அவரது முன்னோடி  சிவாஜி கணேசன் என்று.




சிவாஜி கணேசன் வீர பாகுவாக சூர பத்மன் அசோகனிடம் 
தூது  சென்று பேசும் அத்தனை  வசனங்களும்  அத்தனை
அடுக்கு மொழி, அத்தனை அபத்தம்.



எத்தனையோ  திரைப்படங்களில்  அழகு தமிழ் வசனம் 
எழுதிய ஏ.பி.நாகராஜன், கந்தன் கருணை க்கு மட்டும் 
என் இப்படி  ஓர வஞ்சனை செய்தார்  என தெரியவில்லை.
சீரியசான  அந்த காட்சி  அடுக்கு மொழி வசனங்களால்
பாவம் காமெடிக் காட்சியாகி விட்டது.



பின் குறிப்பு : நான் பார்த்த முதல் திரைப்படம் கந்தன் கருணை
என்று  என் வீட்டில் சொல்வார்கள். எனது முதல் வயது 
பிறந்த நாளில் என்னைக் கூட்டிச் சென்று எல்லோரும் 
பார்த்த திரைப்படமாம் அது.

 

Wednesday, October 5, 2011

அண்ணா ஹசாரே எனும் தாமரை முகம்

 
ஊழலுக்கு எதிராக இந்திய மக்களை உய்விக்க வந்த
புதிய உத்தம புருஷன், நவீன ரட்சகன் அண்ணா 
ஹசாரே   உதித்துள்ள  புதிய முத்துக்களை 
படித்தீர்களா?
  

ஜன லோக்பால் மசோதாவை  கொண்டு வரவில்லை
என்றால்  காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் 
என்று  விரைவில்  நடக்கவுள்ள  மாநில சட்ட மன்ற
தேர்தல்களில்  என்று  பிரச்சாரம் செய்வேன். முதல்
கட்டமாக ஹரியானா மாநிலத்தில் நடக்கவுள்ள
ஹிசார்  எம்.பி  தொகுதி   இடைத்தேர்தலில் 
பிரச்சாரம் செய்வேன்  என்று கூறுகின்ற  
இந்த  உத்தம புருஷன் பாஜக தனது மசோதாவை
ஆதரிப்பதாக வேறு சொல்கின்றார்.


காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் ஊழல் 
குற்றங்களைப் பொறுத்தவரை  ஒன்றுக்கு
ஒன்று சளைத்ததல்ல. 
ஆனால் இந்த புண்ணியாத்மாவிற்கு  பாஜக
கால ஊழல்கள் பற்றி தெரியாது போலும். 
கர்நாடகாவில் எட்டியூரப்பாவை  காலி
செய்தது பற்றி இவரது  பக்கத்திலேயே 
இருக்கும் சந்தோஷ் ஹெக்டே எதுவும் 
சொல்லவில்லை போலும்! 


ஆக அண்ணாவின் முகமும் தாமரை
முகம்தான் என்பது  வெளிப்படையாக 
தெரிந்து விட்டது. 


இவ்வளவு தூரம் வந்து விட்ட மிஸ்டர்
பரிசுத்தம் அவர்களே, முகமுடியை 
வீசி எறிந்து  விட்டு நேரடியாகவே 
ஜோதியில் ஐக்கியமாகி விடுங்களேன்.


ஆக லால் கிருஷ்ண அத்வானிக்கு 
அடுத்த போட்டியாளரும்  தயாராகி
விட்டார்!
 

Tuesday, October 4, 2011

முறைகேட்டில் முளைத்த மாருதி

ஊழல்களின்  ஊர்வலம் - நான்காம்  பகுதி

                                        
இந்தியாவினுடைய  முதன்மையான  கார்  தயாரிப்பு  நிறுவனமாக
மாருதி உத்யோக் நிறுவனம்  உள்ளது  என்பது  நமக்கெல்லாம்
தெரிந்ததுதான்.  ஜப்பான் நிறுவனம்  சுசுகியோடு  கூட்டு  நிறுவனமாக
 மாருதி  உள்ளது  என்பதும் அனைவருக்கும்  தெரிந்ததுதான்.
 பொதுத்துறை  நிறுவனம்  என்று  மாருதி நிறுவனம்
சொல்லப்பட்டாலும், அதன்  பெரும்பான்மை  பங்குகள்
சுசுகி நிறுவனத்தின்  கைவசமே  உள்ளது என்பதும்
நிர்வாகத்தின்  கட்டுப்பாடு  அதன் கைகளில்தான்  உள்ளது
என்பது  சிலர்  மட்டுமே  அறிந்தது.


மாருதி நிறுவனத்தின்  தோற்றத்தை  ஆராய்ந்தால்  அது
 ஊழல்  முடை நாற்றம்  அடிப்பதாகவே  இருக்கும்,
அதிகாரத்தை  இப்படியெல்லாம் கூட  தவறாகப்
பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்ற ஆத்திரம் கூட
வரும். அந்தக்கதையை  இந்த மாதம்  பார்ப்போம். 


புதிய நிறுவனங்களுக்கு அனுமதி கொடுப்பதற்கு மிகக் கடுமையான
வழிமுறைகள் இருந்த காலம்  அது. இந்திரா காந்தி அரசு குறைவான
விலையில் நடுத்தரப் பிரிவினரும் பயன்படுத்த  "மக்கள் கார்"
தயாரிக்கப்போவதாக  அறிவித்தது.


மக்கள் கார் தயாரிப்பதற்கான அனுமதி இந்திரா காந்தியின் இளைய
மகன் சஞ்சய் காந்திக்கு வழங்கப்பட்டது. மாருதி கார் நிறுவனம்
துவக்கப்பட்டது. அதன் மேலாண்மை இயக்குனரும் சஞ்சய் காந்திதான்.
ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனத்தில் சில மாதங்கள்  அப்ரெண்டிஸாக
பணியாற்றியதைத் தவிர சஞ்சய் காந்திக்கு வேறு எந்த அனுபவமோ
தொழில் நுட்ப அறிவோ  கிடையாது.


இதே போல் இன்னொரு நிறுவனமும் துவக்கப்பட்டது. அதிலே
சஞ்சய் காந்தியும் சோனியா காந்தியும் மட்டுமே  பங்குதாரர்கள்,
இயக்குனர்கள், சோனியா காந்தி மேலாண்மை இயக்குனர். இந்த
மாருதி தொழில் நுட்ப சேவை நிறுவனம், மாருதி கார் தயாரிக்க
அனைத்து ஆலோசனைகளையும் தரும். இதற்காக மாருதி கார்
நிறுவனம் சஞ்சய் காந்திக்கு வருடத்திற்கு ஐந்து லட்ச ரூபாய்
தரும். இவையெல்லாம் 1970 களில், முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு
முன்பு.


ஆனாலும் நடுத்தர மக்களை பணக்காரர்களுக்கு இணையான வசதியினை
அனுபவிக்க வைக்கப் போகும் மேதை  என காங்கிரஸ்காரர்கள்
புகழ்ந்து  தள்ளினார்கள். மாருதி காருக்கு பணம் வந்ததே தவிர
தொழிற்சாலையும் வரவில்லை, அதனால் காரும் வரவில்லை.
மாருதி நிறுவனம் நொடித்தும் போய் விட்டது. 


மாருதி கார் மோசடி பற்றி ஜனதா கட்சி ஆட்சியில் போடப்பட்ட
நீதிபதி ஏ.சி. குப்தா கமிஷன், தனது அறிக்கையில் அனைத்து
முறைகேடுகள் பற்றியும் தெரிவித்திருந்தாலும் எவ்வித நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை. ஏனென்றால் 1980 ல் ஜனதா ஆட்சி கவிழ்ந்து
போய் இந்திரா காந்தி மீண்டும் பிரதமராகி விட்டார்.


சஞ்சய் காந்தியின் மரணத்திற்குப் பிறகு மத்தியரசு மாருதி
கார் நிறுவனத்தை எடுத்துக் கொண்டது. பொதுத்துறை நிறுவனமாக
மாற்றி ஜப்பானின் சுசுகி நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டது.
மாருதி கார்களின் உற்பத்தியும் தொடங்கியது.

Sunday, October 2, 2011

பாவம் நாய்கள் - இன்று காந்தி ஜெயந்தி


ஆரவாரக் குரல்கள், 
பகிர்தலில் பிரச்சினைகள்,
பாட்டில்கள் திறக்கும் ஓசைகள்,
பிளாஸ்டிக் த்ம்பள்ர்களில்
நிரம்பும் மது வகைகள்,
மசாலாவின் மணம்
எதுவுமே இன்றி 
அமைதியாய் இருந்தது
அந்தப் பகுதி,
டாஸ்மாக்கின் அருகில் 
இருந்த அரசாங்க சாலை
எனும் வெட்ட வெளி பார்.


தன் வீட்டிற்கு 
 எடுத்துச் செல்ல
எதுவும் இல்லாத 
இந்தியக் குடிமகன்
குபேரனாய்  பகிர்ந்து 
கொண்ட மிச்சம் மீதியில்
உயிர் வளர்த்த 
நாய்கள் மட்டும் 
சோர்விலே சுருண்டு போய்
ஓரமாய் கிடக்கின்றது,
ஆதரவளிக்கும் 
வள்ளல்களின் வருகை இன்றி.


தேசத் தந்தையின் 
பிறந்த நாளில் 
பாவம் அந்த  நாய்களும்
இன்று உண்ணா விரதம்.


அவைதான் அறியுமா?
இன்று காந்தி ஜெயந்தி.
மதுக்கடைகள் 
விடுமுறை என்று?


( என் வீட்டுக்கு  வரும் ஒரு 
பிரதான சாலையில் அன்றாடம்
பார்க்கிற சூழல் இன்றி  போவோர்
வருவோர்  யாரேனும்  ஏதாவது 
உணவளிப்பார்களா என்று 
ஏக்கத்துடன் தலை நிமிர்த்துப்
பார்த்து சுருண்டு போய்க் கிடந்த
பத்து நாய்களின் நிலை உருவாக்கிய
தாக்கம், இந்த கவிதை போன்ற 
ஒரு வடிவம்)      

பத்தாம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த கல்வி அமைச்சர்




 புதுவை மாநில கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரம் 
பத்தாம் வகுப்பு தேர்வில் தனக்குப் பதிலாக 
வேறு ஒருவரை ஆள் மாறாட்டம்  செய்து 
எழுத வைத்ததாக புகார் வந்துள்ளது. 


அது பற்றி விசாரணை நடத்தப் போவதாக 
தமிழக கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
ஏனென்றால் சம்பவம் நடந்தது 
தமிழ்நாட்டில்தான். 


பத்தாவது கூட படிக்காதவர் 
கல்வித்துறை  அமைச்சரா  என்று 
யாரும்  கேள்வி கேட்காதீர்கள்.
அது முதல்வர் ரங்கசாமியின் 
உரிமை. 

நாளை திருட்டு வழக்கில்  
கைதானவரை காவல்துறை 
மந்திரியாக நியமிக்கும் 
உரிமை கூட அவருக்கு உண்டு.


கல்வி அமைச்சரான பின்பு 
பத்தாவது பாஸ்  செய்ய வேண்டும் 
என்று முடிவு செய்தாரே  அந்த 
நேர்மையை பாராட்டுங்கள்.


ஆள் மாறாட்டம் செய்தாவது 
பாஸ் செய்ய வேண்டும்  என்று
நினைத்தாரே, அந்த கொள்கை 
உறுதியை பாராட்டுங்கள். 


ஆள் மாறாட்டத்தை கண்டு 
கொள்ளாமல் இருந்திருந்தால் 
பதவி முடியும் முன்பாக 
டாக்ரடேட்  முடித்திருப்பாரே,
அந்த வாய்ப்பை கெடுத்து 
வீட்டீர்களே?