Friday, April 6, 2012

இறக்கும் போதும் இலட்சியத்தை மறவாது . . . .





ஒஞ்சியம் போராட்டம் கேரளக் குழந்தைகளுக்கு கதை, கதையாகச் சொல்லப்பட்டதாகும். உணவுப் பற்றாக்குறையை எதிர்த்தும் மற்றும் மக்களுக்கு நிலத்திற்காகவும் 1948 ஆம் ஆண்டில் கடுமையான போராட்டம் நடைபெற்றது. 

மண்டோட்டி கண்ணனின் தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராடி வந்தனர். இதற்கு எதிராக கடுமையான அடக்குமுறையை அரசு கட்டவிழ்த்து விடுகிறது.
ஏப்ரல் 30, 1948 அன்று எட்டு தோழர்கள் காவல்துறையின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகிறார்கள். 

மண்டோட்டி கண்ணன் சரணடைந்தால் பலிகளைத் தடுக்கலாம் என்று கூறியதால், இவர் சரணடைகிறார். ஆனால் சிறைக்குள் வைத்து கண்ணன் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகிறார். மண்டை பிளக்கிறது. சிறையில் ரத்தம் ஓடுகிறது. மார்ச் 4, 1949 அன்று இந்தத் தாக்குதல்கள் நடக்கிறது. இறந்துவிட்டார் என்று நினைத்து அவரை விட்டு நகர்கிறார்கள் தடியர்கள். காலையில் பார்த்தபோது அவர் உயிரோடு இருந்தது மட்டுமல்லாமல், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையிலும் தனது ரத்தத்தால் சிறைச் சுவரில் சுத்தியல், அரிவாளை வரைந்திருக்கிறார்.

இந்தக் காட்சி கோழிக்கோடு நகரில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கட்சி
அகில இந்திய மாநாட்டை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள
   கண்காட்சியில் இடம் பெற்றிருக்கிறது. பார்த்தவுடன் பலரின் கண்களில் குபுக் என்று கண்ணீர் வருவதைப் பார்க்க முடிந்தது. ஆனால், அந்த இடத்தை விட்டு நகரும்போது உறுதியான நடையுடன் திரும்புகிறார்கள்.


நன்றி -  தீக்கதிர்

1 comment:

  1. லட்சியவாதிகளின் பயணம் வலிகள் மிகுந்ததாகவே பதிவாகிறது.

    ReplyDelete