Sunday, September 9, 2012

பல் இல்லாவிட்டாலும் பக்கோடா சாப்பிடலாம் - நோபல் பரிசுக்கான கண்டுபிடிப்பு




காரசாரமான ஒரு பதிவு. இல்லை ஏதேனும் ஒரு பிரச்சினை
பற்றிய பதிவு என்று நினைத்தால் தயவு செய்து வேறு
உருப்படியான வேலை இருந்தால் அதை செய்யுங்கள்.

ஏனென்றால் மிகவும் மொக்கை என்று தெரிந்தே 
வேண்டுமென்றே எழுதும் பதிவு. இதற்குப் பிறகும் நீங்கள்
முழுமையாக படித்து விட்டு என்னை திட்டினால் நான்
நிச்சயம் அதற்கு பொறுப்பில்லை.

வெகு நாட்களாக என்னை அரித்துக் கொண்டிருந்த ஒரு
பின்னூட்டம் ஒன்று உண்டு.

துவக்க காலத்தில் சல்மான் கான் பங்களாவைப் பற்றி
ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதற்கு ஒரு நண்பர்
" பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான். உங்களுக்கு
என்ன? " என்று  எழுதியிருந்தார். 

நான் கூட பல் இல்லாதவனால் பக்கோடா சாப்பிட முடியாது
என்றுதான் நினைத்திருந்தேன், நேற்று வரை.

நேற்று ஒரு ஹோட்டலில் நானும் இன்னும் ஒருவரும்
பக்கோடா சாப்பிட்ட போது, பல் பிரச்சினையுள்ள ஒருவர்
இட்லி சாம்பார் சாப்பிட்டார். அவரைக் கிண்டல் செய்த
போது அவருக்கு கோபம் வந்து விட்டது. 

உடனே பக்கோடாவை எடுத்தார். சாம்பார் இட்லியில்
மூழ்க வைத்தார், சாப்பிட்டார்.

பல் உள்ளவன் மட்டுமே பக்கோடா சாப்பிடலாம்
என்ற தத்துவம் அங்கே தகர்ந்து கொண்டிருந்தது.
தேவைதான் அறிவியலின் தாயகம் என்பார்கள்.
சுய கௌரவமும் கண்டுபிடிப்புக்களின் தாயகம் என்பதை
அந்த மூத்தவர் நிரூபித்து விட்டார்.

இந்த அறிவியல் கண்டுபிடிப்பு பல் இல்லாதவர்களுக்கு
ஒரு வரப் பிரசாதம்.

நோபல் பரிசு எனக்கு வேண்டாம். அவருக்கே கொடுத்து
விடுங்கள்.

No comments:

Post a Comment