Thursday, May 31, 2012

இப்போதாவது மனம் வந்ததே !



ஒரு வழியாக எல்.ஐ.சி நிறுவனத்திற்கு  இன்று சேர்மன்
நியமிக்கப் பட்டு விட்டார்.

இது நாள் வரை  தற்காலிக சேர்மனாக பொறுப்பேற்றிருந்த
திரு டி.கே.மெஹ்ரோத்ரா, இன்று எல்.ஐ.சி யின் நிரந்தர
சேர்மனாகி விட்டார்.

இதிலே என்ன விஷயம் என்கிறீர்களா?

இந்தியாவின் மிகப் பெரிய நிதி நிறுவனம்,
பதினைந்து லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து
வைத்துள்ள மகத்தான நிறுவனம்,
இந்தியா முழுதும்  இரண்டாயிரம் கிளைகள்,
ஆயிரம் துணை அலுவலகங்கள், நூற்றுக்கும் 
மேற்பட்ட கோட்ட அலுவலகங்கள், என்று 
தேசம் முழுதும் விரிந்துள்ள ஒரு பிரம்மாண்டமான
நிறுவனம் எல்.ஐ.சி ஆப் இந்தியா.

மத்தியரசை பல முறை தாங்கிப் பிடிக்கும் 
சுமை தாங்கியாக எல்.ஐ.சி தான் உள்ளது.

ஆனால் இத்தனை சிறப்பு மிக்க எல்.ஐ.சி க்கு
பதிமூன்று மாதங்களாக சேர்மன் கிடையாது.

சேர்மனை நியமிப்பதில் மத்தியரசிற்கு அவ்வளவு
அலட்சியம்.

எல்.ஐ.சி என்று மட்டுமல்ல, ஏராளமான பொதுத்துறை
நிறுவனங்களுக்கு மத்தியரசு சேர்மனை நியமிப்பதில்
அலட்சியம் காண்பிக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களை சீரழிக்கும் கொள்கை
கொண்ட மன்மோகன்சிங்  அரசு, அவற்றுக்கு சரியான
தலைமையை அளிக்காமல், முடிவுகள் எடுக்க முடியாத
நிலையை உருவாக்கி அவற்றை நாசம் செய்கின்றன.


தனியார் கம்பெனிகளின் எடுபிடிகளாக விளங்கும்
மத்தியரசிற்கு இப்போது மனம் வந்து எல்.ஐ.சி க்கு
சேர்மனை நியமித்துள்ளது.


மற்ற பொதுத்துறை வங்கிகள் விஷயத்தில் 
என்று அதற்கு கருணை சுரக்குமோ?


அரசின் 

Wednesday, May 30, 2012

விலை உயர்வை திசை திருப்ப இப்படி ஒரு மோசடி நாடகம்

தமிழகத்தின் பல பகுதிகளில்  இப்போது பெட்ரோல்  டீசல்
தட்டுப்பாடு. பல மணி நேரம் பங்குகளில் காத்திருக்க
வேண்டிய அவசியம் உள்ளது.

விலை நூறு ரூபாயானாலும் பரவாயில்லை, பெட்ரோல் 
கிடைத்தால் போதும் என்ற மன நிலைக்கு மக்களைக்
கொண்டு வருகின்ற மலிவான உத்தி இது.

கிட்டத்தட்ட இந்த மனநிலைக்கு மக்களும் வந்து
கொண்டிருக்கிறார்கள். காத்திருக்கும் வேளையில்
கோபம் கொப்பளிக்கிறது. ஆத்திரத்துடன் வார்த்தைகள்
கொட்டுகிறது.

அரசின் மீது,  அதன் வரிகள் மீது, நிர்வாகத்தின் மீது
வர வேண்டிய கோபம் பெட்ரோல்  பங்க் ஊழியர்கள்
மீது வருகின்றது.

விலை உயர்வை திசை திருப்ப பற்றாக்குறை நாடகம்
நடத்தும் அரசின் மீது இந்த கோபத்தை நாம் எப்படி திருப்பப்
போகின்றோம்?
 

Tuesday, May 29, 2012

பெட்ரோல்: திசை திருப்பப்படும் கோபம்

 பெட்ரோல்  விலை உயர்வின் பின்னணியில் உள்ள
அரசியல் மோசடிகளை அம்பலப்படுத்தும் அற்புதக்
கட்டுரை. நீங்களும் படியுங்கள். எதிர்ப்பியக்கத்தில்
இணையுங்கள். ......



 

இ.எம். ஜோசப்,
முன்னாள்  துணைத்தலைவர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு


அண்மைக்கால வரலாற்றில் பெட் ரோல் விலை இந்த அளவிற்கு (தமிழகத் தில் லிட்டருக்கு ரூ. 7.98) ஏற்றப்பட்ட தில்லை. இது மக்களின் கோபத்தினைக் கிளறியிருப்பது இயல்பானது. விலை உயர்வினை எதிர்த்து இடதுசாரிக் கட்சி கள் களமிறங்கியிருக்கின்றன. அதுவும் இயல்பானது. ஆனால், தனது ஆட்சிக் காலத்தில் இதற்கு கொள்கை அடிப்படை யில் வழிவகுத்துத் துவக்கி வைத்த பி.ஜே.பி. இந்த விலையேற்றத்தினை எதிர்த்துக் களம் இறங்கியிருக்கிறது. 


கோபத்தைத் திசை மாற்றி


இந்தக் கொள்கையினைப் பொறுத்த ளவில் காங்கிரசுக்கும், பி.ஜே.பிக்கும் எவ் வித முரண்பாடும் கிடையாது. ஆனாலும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது மட்டும், விலையேற்றத்தினை எதிர்ப்பது மக்களை ஏமாற்றுவதற்கான அவர்களது தந்திரமாக மாறியுள்ளது. “ஏன் என்னை கலந்தா லோசிக்கவில்லை?” என்று கோபப் படும் மம்தா. “கொஞ்சமாவது குறைக்கக் கூடாதா? என்று கெஞ்சுகின்ற கருணா நிதி. அமைச்சரவையில் முடிவுகளுக்கு கை தூக்கிவிட்டு, தெருவில் முஷ்டி உயர்த்தும் பெரிய மனிதர்கள் இவர்கள். விலையேற்றத்தினைத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்திருப்பது இதில் கூடுதல் வேடிக்கை. அரசியலில் தார்மீகக் கூச்சங்களைக் கைவிடுவதின் அடுத்தக் கட்ட வளர்ச்சி போலும் இது! மொத்தத்தில், இந்த விலையேற்றத் தின் பின்னணியில் இருக்கும் நவீன தாராளவாதக் கொள்கைகளின் மீதும், அந்தக் கொள்கைகளைத் தூக்கிப் பிடித் திருக்கும் கட்சிகள் அவை ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந் தாலும் அவர்கள் மீதும் வரவேண்டிய நிரந் தரமான கோபத்தினை, அன்றைய அர சாங்கத்தின் மீதான தற்காலிக கோபமாக மாற்றும் முயற்சியே இது. உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள முதலாளித்துவக் கட் சிகளின் பொதுவான சாதுரியம் மட்டு மல்ல இது; அவர்களுக்கு இடையிலான எழுதப்படாத ஒப்பந்தமும் கூட. 


தோட்டத்தில் பாதி கிணறு!


ஒவ்வொரு முறையும் விலையேற்றத் தின் போதும் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வினைக் காரணமாகக் கூறும் அரசாங்கம், இம் முறை அதைக் கூற முடியவில்லை. கார ணம், சர்வதேசச் சந்தையில் பீப்பாயின் விலை 124 டாலரிலிருந்து 117 டாலராகக் குறைந்திருக்கிறது. ஆனால் அதற்காக விலையை ஏற்றாமல் விட முடியுமா? ரூபாயின் மதிப்பு டாலருக்கு 55.37 எனக் குறைந்து விட்டது. எனவே எண்ணெய் விற்பனைக் கம்பெனிகள் நஷ்டமடைகின் றன. இது இன்று சொல்லப்படும் காரணம். கச்சா எண்ணெய் விலையேற்றம் அல்லது ரூபாயின் மதிப்பு குறைவு, இப்படி எதுவாக இருந்தாலும், பெட்ரோல் விலையில் வரிகளின் பங்கு கணிசமாக இருக்கிறதே, இது நியாயமா? தமிழகத்தில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.54. இதில் வரியின் பங்கு ரூ.34.97 என்றால், அது 45 சத வீதத்திற்குச் சற்று அதிகம். இது சரியா? கச்சா எண்ணெய் விலையேற்றம், ரூபாய் மதிப்புக் குறைவு - நம்மைப் பொறுத்த வரை, இவை இரண்டுமே நெருக்கடியின் வடிவங்களே. ஆனால், இந்த இரண்டு நெருக்கடிகளையும் அரசு தனது வரு மானத்தினைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பாகத்தானே பார்க்கிறது? இது சரியா? இவையெல்லாம் நாம் எழுப்பும் கேள்விகள். 


உண்மையில் நஷ்டமா?


எண்ணெய்க் கம்பெனிகள் நஷ்ட மடைகின்றன என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்களே, அது உண்மையா? சரி யாகச் சொல்லப் போனால், ஆங்கில ஏடு களில் நஷ்டம் (டுடிளள) என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுவதில்லை. அது ‘குறை வசூல்’ (ருனேநச சுநஉடிஎநசல) என்றே அழைக் கப்படுகிறது. (தமிழ் ஊடகங்களில் பயன் படுத்தப்படும் ‘நஷ்டம்’ என்ற சொல், அத னுடைய தவறான அல்லது உள்நோக்கம் கொண்ட மொழிபெயர்ப்பு எனக் கருத இடமுண்டு.) அந்தக் ‘குறை வசூல்’ குறித் துப் பேசுவதற்கு முன்பாக, இங்கு ஒன் றைத் தெளிவுபடுத்த வேண்டும். நாம் பெட்ரோல், டீசல், கெரசின் போன்ற வற்றை இறக்குமதி செய்வதில்லை. கச்சா எண்ணெய்யினை மட்டுமே இறக்கு மதி செய்கிறோம். அதைச் சுத்திகரித்து பெட்ரோல், டீசல், கெரசின் இன்னும் பிற பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்து, உள்நாட்டில் விற்றது போக ஏற்று மதியும் செய்கிறோம். நமது நாட்டின் இறக் குமதியில் கச்சா எண்ணெய் முதலிடத் தினை வகிக்கிறது என்பது அனைவருக் கும் தெரியும். ஆனால், பெட்ரோலியப் பொருட்கள்தான் ஏற்றுமதியிலும் முத லிடம் வகிக்கின்றன என்பது பலருக்குத் தெரியாது. அது மட்டுமல்லாமல், உள் நாட்டு விலைகளுக்குத்தான் கட்டுப்பாடு, ஏற்றுமதி விலைகளுக்கு அதுவெல்லாம் இல்லை. நமது இறக்குமதிச் செலவு சென்ற ஆண்டு 141 பில்லியன் டாலர்; அதே வேளையில் ஏற்றுமதி வருமானம் 58 பில்லியன் டாலர். சுத்திகரிப்புத் தொழிலில் இந்தியா விற்கு இருக்கும் அனுகூலங்கள் குறித் தும் சற்றுக் கூறுவது அவசியம். நமது நாட் டின் சுத்திகரிப்பு ஆலைகள் மிகவும் திறம் படைத்தவை; நவீனமானவை. அமெ ரிக்கா, ஐரோப்பா நாடுகளின் ஆலை களை விட பெரியவை, நவீனமானவை. ஏனெனில், இவற்றில் பெரும்பான்மை ஆலைகள் 1990களுக்குப் பின்னர் உரு வானவை. உயர் கந்தகம் கொண்ட, அதே போன்று சலித்துப் போன கச்சா எண் ணெய்யைக் (ளுயஎடிரச ஊசரனந) கூட சுத்தி கரிக்கும் திறன் கொண்டவை. உள்நாட் டுத் தேவையின் அளவுகளுக்கு அதிக மாகவே, அதாவது சுமார் 215 மில்லியன் டன் சுத்திகரிக்கும் அளவிற்கு அத் தொழில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இது இன்று மேலும் வளர்ச்சி பெற்று வரு கிறது. எனவே, உலகத் தரத்தில் தொழில் திறமையும் குறைவான உற்பத்திச் செல வும் இருப்பதனால், இத்தொழில் லாபகர மாக இயங்கி வருகிறது. குறிப்பாக ஏற்று மதியில் பெருமளவு லாபத்தினை ஈட்டி வருகிறது. சிங்கப்பூர், ராட்டர்டாம் (நெதர் லாந்து) ஆலைகளின் தரத்தில் இவைகள் இயங்குகின்றன. இன்றைக்கு அமெரிக் காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இங்கிருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே இயல்பாகவே எண்ணெய்க் கம் பெனிகள் இந்நாட்டில் நஷ்டமடைவ தில்லை. மாறாக நல்ல லாபம் அடை கின்றன. அப்படியென்றால் குறை வசூல் குறித்து அதிகம் பேசப்படுகிறதே, ஏன்? 


இழப்பு கற்பனையே!


ஏற்கனவே குறிப்பிட்டபடி, பெட்ரோ லையும் டீசலையும் நாம் நேரடியாக இறக் குமதி செய்வதில்லை. ஆனால், இந்த எண்ணெய் விற்பனைக் கம்பெனிகள் என்ன சொல்கிறார்கள் என்றால், தாங்கள் அதை இறக்குமதி செய்யாவிட்டாலும் கூட, அதை இறக்குமதி செய்ததாகப் பாவித்து அதன் விலையினை நிர்ண யிக்க வேண்டும் எனக் கோருகிறார்கள். அதாவது சர்வதேசச் சந்தையில் வாங்கா விட்டாலும் அதை அந்த விலையில் வாங்கியதாகக் கொள்ள வேண்டும். அதைக் கப்பலில் ஏற்றிக் கொண்டு வருவதாகப் பாவிக்க வேண்டும். இங்கு இறக்குமதி செய்வதற்கு எதுவெல்லாம் தேவையோ, அதையெல்லாம் செய்யா விட்டாலும் கூட, அதையெல்லாம் செய்த தாகக் கருதி அதற்கான அனைத்துச் செல வுகளையும் உள்ளடக்கிய ஒரு விலையில், அதாவது சர்வதேச வர்த்தக விலைக்குச் சமமான விலையில் (கூசயனந ஞயசவைல ஞசiஉந) விற்க அனுமதிக்க வேண்டும். என்ன தலை சுற்றுகிறதா? இதுதான் அவர்களது கோரிக்கை. ஆனால், இங்கு அதை விடக் குறைந்த விலையில் விற்க வேண்டியுள் ளது. இப்படி தாங்கள் கோரும் கற்பனை விலைக்கும், அனுமதிக்கப் பட்டிருக்கும் விலைக்கும் இடையிலான இடைவெளி தான் குறை வசூல் அல்லது நஷ்டம் என்று ஒப்பாரி வைக்கப் படுகிறது.


அவர்களின் ஆதங்கம்!


இந்த எண்ணெய்க் கம்பெனிகளுக் கும் ஒரு ஆதங்கம் உண்டு. அது கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் கம்பெனிக ளுடன் செய்யும் ஒப்பீட்டால் உருவானது. நமது கச்சா எண்ணெய்த் தேவையில் 30 சதவீதம் நம் நாட்டிலேயே உற்பத்தி செய் கிறோம் அல்லவா, அந்த உற்பத்தியாளர் கள் குறித்த அதாவது ஓ.என்.ஜி.சி, ரிலை யன்ஸ், எஸ்ஸார், கெயிர்ன்ஸ் குரூப் போன்ற இந்திய மற்றும் வெளிநாட்டுக் கம் பெனிகள் குறித்த விஷயம் இது. உற்பத்தி நடப்பது இந்தியாவில்தான் எனினும், இவர்களுக்குக் கிடைப்பது சர்வ தேச விலை. உற்பத்திச் செலவுகளில் எந்த உயர்வும் இல்லாத போதும், சர்வ தேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டால், இவர்களுக்கும் அந்த விலை தானாகவே கைக்கு வந்து விடும். ஒரு சிறிய உதாரணம்: ராஜஸ் தானில் இயங்கும் பிரிட்டிஷ் நிறுவனமான கெயிர்ன்ஸ் குரூப்பிற்கு சென்ற 2010-2011முதல் காலாண்டில் கிடைத்த லாபம் ரூ.245 கோடி, 2011-2012 முதல் காலாண் டில் கிடைத்த லாபம் ரூ.2457 கோடி. அதா வது ஒரே ஆண்டில் 10 மடங்கு அல்லது 1000 சதவீத லாபம். ரிலையன்ஸ் கம்பெனி யின் எண்ணெய் வருமானம் இந்திய நாட் டின் ஜிடிபி மதிப்பில் 3.5 சதவீதம். இந்திய தேசத்திற்குச் சொந்தமான எண்ணெய் வளம் இன்று இவ்வாறு உள்நாட்டு, வெளி நாட்டு முதலாளிகளுக்கு கொழுத்த லாப மாக மாறி வருகிறது. தொலைத் தொடர்பு அலைக்கற்றை, கனிமச் சுரங்கங்கள் என நாட்டின் இயற்கை வளங்கள் தனியாருக் குத் தாரை வார்க்கப்படும் நவீன தாராள வாதக் கொள்கைகளின் பகுதியான ஒரு அம்சமே இது. அனைவரும் எதிர்த்துப் போராட வேண்டிய இந்தச் சுரண்டல், இன்று சுரண்டுபவர்களுக்கு இடையி லான போட்டி பொறாமையாகவும், அர சாங்கம் சிலருக்கு அதீத ஆதரவு காட்டும் சலுகை சார் முதலாளித்துவமாகவும் மாறி நிற்கிறது. எரிவாயு விலைப் பிரச்சனை யில் இன்றைக்கு ரிலையன்ஸ் கம்பெனிக் குக் காட்டப்படுவது அத்தகைய சலுகை யேயாகும். 


கறவைப் பசு!


உண்மையில் இவர்களுக்கு நஷ்டம் எங்கே வந்தது? பெட்ரோல், டீசல் விலை களில் கச்சா எண்ணெய் விலையின் பங்கு 90 சதவீதம், சுத்திகரிப்புச் செலவு கள் உள்ளிட்ட செலவுகளின் பங்கு 10 சத வீதம் மட்டுமே எனும்போது நஷ்டம் எப் படி வரும்? இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனை எடுத்துக் கொள்வோம். அந்தப் பொதுத்துறை நிறுவனம் மார்ச் 2008ல் தொடங்கி மார்ச் 2011ல் முடிந்த நான்கு ஆண்டுகளில் ஈட்டிய லாபம் முறையே, ரூ.6962 கோடி, ரூ.2949 கோடி, ரூ.10,220 கோடி, ரூ. 7445 கோடி. 2010-11ல் குறை வசூல் ரூ.72,000 கோடி என உரத்துப் பேசும் பெட்ரோலிய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, மறுபுறத்தில் அவ்வாண்டு மத்திய அரசுக்கு ரூ.92,000 கோடி, மாநில அரசுகளுக்கு ரூ.78,000 கோடி என்று அரசாங்கங்களுக்குக் கிடைத்த வரி வருமானம் குறித்து மௌ னம் காக்கிறார். 2011வரையிலான நான்கு ஆண்டுகளில் அரசாங்கங்களுக்குக் கிடைத்த வரி வருமானம் மத்திய அர சுக்கு ரூ.4,10,842, மாநில அரசுகளுக்கு ரூ.2,63, 766 கோடி. ஆனால் இவ்வாண்டு களில் மத்திய அரசு மானியமாகக் கொடுத்தது ரூ.23,220 கோடி மட்டுமே. வெல்லத்தை பிள்ளையாராகப் பிடித்து வைத்துக் கொண்டு, அதன் பின்னர் அந்த வெல்லப் பிள்ளையாரையே கொஞ்சம் சுரண்டி அவருக்கு நைவேத்தியம் செய்யும் பக்தனுக்கும், மத்திய அரசின் மானியம் குறித்த நடவடிக்கைக்கும் என்ன வேற்பாடு? மத்திய அரசின் வரி வருமானத்தில் 40 சதவீதத்திற்கு மேல் எண்ணெய் உற்பத் தித் துறையிலிருந்து எனும் போது, இங்கு கறவைப் பசுக்களாக பயன்படுபவர்கள் சாமானிய மக்களே. உண்மை இவ்வாறு இருக்கும் போது, அதை மறைத்து அரசும், எண்ணெய்க் கம்பெனிகளும் பல மாய் மாலங்களில் ஈடுபட்டு வருகின்றன. நஷ் டம் என்று நம்ப வைப்பதில், இவர்களுக்கு ஊடகங்கள் செய்யும் உதவியும் கொஞ்ச நஞ்சமல்ல. 


குறியிலக்கை நோக்கி …


ஐ.மு.கூட்டணி அரசு தனது பதவிக் காலத்தில் இது வரை 39 முறை பெட் ரோல்- டீசல் விலையினை உயர்த்தியி ருக்கிறது. இடது சாரிக் கட்சிகளின் ஆதர வில் இருந்த காலம் வரை இது கணிச மாகக் கட்டுப்பட்டிருந்தது. அதன் பின்னர் தட்டிக் கேட்க ஆளில்லாத நிலையில், ஐ.மு.கூட்டணியின் சண்டப்பிரசண்டம் உச்சத்திற்குச் சென்று விட்டது. பெட்ரோ லில் தொடங்கி அடுத்த கட்டத்தில் டீச லுக்கும் கெரசினுக்கும் செல்லும் காலம் நெருங்கி விட்டது. தமிழ்நாடு உட்பட மாநி லங்களுக்கான கெரசின் ஒதுக்கீடு தற் போது பாதியாகக் குறைக்கப்பட்டு விட்டது. மின் கட்டணங்களைக் கூட சர்வ தேச அளவிற்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு சிந்தித்து வருகிறது. மின் சக்திக்கான எரிபொருட்களின் சர்வ தேசச் சந்தை விலை உயர்ந்து விட்டால் மின் கட்டணம் உயரும் என்பது அதன் பொருள். மின்சக்தி உற்பத்தியில் நிலக்கரி, பெட்ரோல், டீசல், யுரேனியம் என எதுவும் எரிபொருளாக இருக்க முடியும். இவற்றின் சர்வதேசச் சந்தை விலை உயரும் போதெல்லாம் மின் கட்டணம் உயரும் என்றால் என்ன ஆகும் என்பது குறித்து சிந்திப்பது அவசியம். எனவே பெட்ரோல் விலையேற்றத்தினை ஐ.மு.கூட்டணி அரசின் ஒரு தவறான நடவடிக்கையாக மட்டும் பார்க்காமல், தொடரும் நவீன தாராளவாதக் கொள்கைகளைக் குறி இலக்காக வைத்து அவற்றிற்கு எதிரான மக்களின் கோபமாக, போராட்டமாக இதை மாற்ற வேண்டும். நமது போராட் டத்தின் குறி இலக்கு மாறி விட்டால், இந்த விலையேற்றம் அரசின் மற்றுமொரு மாமுல் நடவடிக்கைக்கு எதிரான போராட் டமாக மட்டுமே இருக்க முடியும். மே 31 எதிர்ப்பு நாள் இந்த உணர்வினை உயர்த் திப் பிடிக்க வேண்டும்.

நன்றி - தீக்கதிர் நாளிதழ்    29/05/2012
 

Monday, May 28, 2012

இமயத்தின் உச்சியில், பனி மலையிலே .... உயர்ந்தது செங்கொடி




சிம்லா மாநகராட்சித் தேர்தலில் மேயர் மற்றும்
துணை மேயர் பொறுப்புக்களை மார்க்சிஸ்ட்
கட்சி கைப்பற்றியுள்ளது.

மேயராக தோழர் சஞ்சய் சவுகானும் 
துணை மேயராக தோழர் திகேந்தர் பன்வாரும்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் மாறி மாறி
ஆட்சியைப் பிடிக்கும் இமாச்சலப் பிரதேசத்தின்
மாற்று அரசியல் சக்தியாக மார்க்சிஸ்ட் கட்சி
மலர்ந்து வருவதன் அடையாளம் இது.

மாற்றத்தை மக்கள் விரும்புகின்றார்கள். அந்த
மாற்றம் மார்க்சிஸ்ட் கட்சியாகத்தான் 
இருக்க முடியும் என்பதை உணர்ந்துள்ளனர்.

ராஜஸ்தானுக்குப் பிறகு இந்தி பேசும்
மாநிலமான ஹிமாசலம் செங்கொடிக்கு
பச்சைக் கொடி காட்டியுள்ளது. 

தமிழக மக்கள் கவனம் கொள்ள வேண்டிய
முக்கிய செய்தி இது.
 

Sunday, May 27, 2012

மன்மோகன்சிங் - ஒரிஜினல் ரத்தக்காட்டேரி



வேலூர் மாவட்டத்தில்  இரண்டு மாதங்களாக உலாவிக் 
கொண்டிருக்கும் வதந்தி ரத்தக்காட்டேரி  பற்றியது. 

இரவுகளில் ரத்தக்காட்டேரி வருவதாகவும் கன்னிப் பெண்,
தலைச்சன் பிள்ளை ஆகியோரை அடித்து ரத்தத்தை 
குடித்து செல்வதாக வதந்தி பரவியது. உடனடியாக 
அதற்கு பரிகாரம் செய்ய ஜோசியர்களும் புறப்பட்டனர்.

கோழியைஅறுத்து  ரத்தத்தை  தெளித்து விட்டு, வீட்டுக்
கதவில் இன்று போய் நாளை வா என சிவப்பு பெயிண்டால்
எழுதினால் ரத்தக் காட்டேரி போய் விடும் என்ற நம்பிக்கையில்
அங்கங்கே வீடுகள் ராமாயணத்தின் பிரபல டயலாக்கான 
" இன்று போய் நாளை வா" வை இன்னும் பிரபலப் படுத்தி
வருகின்றன.


ரத்தக்காட்டேரி இதுவரை யாருடைய ரத்தத்தை குடித்து
பார்த்த சாட்சி கிடையாது. 


ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக நம் ரத்தத்தை, உழைப்பை,
வியர்வையை ஒவ்வொரு நாளும் மத்தியரசு உறிஞ்சிக் 
கொண்டிருக்கிறது. 


கொஞ்சம் கொஞ்சமாக எதற்கு, ஒரேயடியாக மனிதன்
உடலில் உள்ள அத்தனை ரத்ததையும் குடிக்கும்  முயற்சிதான்
சமீபத்திய பெட்ரோல்  விலை உயர்வு.

எனக்கென்னமோ மன்மோகன்சிங்தான் ஒரிஜினல்
ரத்தக்காட்டேரியாக தெரிகின்றார். 

இந்த ரத்தக் காட்டேரிக்கு நாம் எழுதி வைக்க வேண்டிய
வாசகம்

இன்று போ, என்றும்  வராதே

Saturday, May 26, 2012

பெட்ரோல் விலை உயர்வு முதுகில் தெரியும் வரிகள்

பொருளியல் அரங்கம்
 
                                                         க.சுவாமிநாதன்,

                                                         பொதுச்செயலாளர்,
                                                         தென் மண்டல இன்சூரன்ஸ்
                                                         ஊழியர் கூட்டமைப்பு
 
பெட்ரோல் விலை உயர்வு
முதுகில் தெரியும் வரிகள்

சென்னையில் ஒரு லிட்டர் பெட் ரோல் ரூ.77.54 ஐ தொட்டுவிட்டது. இதில் வரிகள் மட்டும் ரூ.34.97 ஆகும்.பெட்ரோலின் அடக்க விலை பங்க்கிற்கு வரும்போது ரூ.42.57 மட்டுமே ஆகும். இந்த வரிகளில் மத்திய அரசும், மாநில அரசும் ஆள்மாற்றி மாற்றி அடிக்கிற கஸ்டம்ஸ், எக்ஸைஸ், வாட் ஆகியன அடங்கும். தமிழக அரசின் விற்பனை வரி 27 சதவீதம் மூலம் நுகர்வோரிடமிருந்து கிடைப்பது ரூ.16.56 ஆகும். வரிகள் தவிர டீலர் கமிசன் ரூ.1.50ம் இதற்குள் இருக் கிறது.

என்னிடம் பிடுங்கிஎனக்கே தானமா

அரசு எண்ணெய் வணிக நிறுவ னங்களுக்கு 2010-11ல் குறை வசூ லாக (ருசூனுநுசு சுநுஊடீஏநுசுலு) ஆன தொகை ரூ.72000 கோடிகள். இது தான் அமைச்சர் ஜெயபால் ரெட்டி தொடுக்கிற வாதம் ஆகும். ஆனால் இன்னொரு தகவலை அவர் தருவ தில்லை. 2010-11 ல் பெட்ரோல் மீதான கஸ்டம்ஸ், எக்சைஸ் மூலம் மத் திய அரசுக்கு கிடைத்தது எவ்வளவு ? ரூ.92000 கோடிகள். அதே வருடம் மாநில அரசுக்கு பெட்ரோல் விற்பனை வரிகள் வாயிலாகக் கிடைத்தது எவ் வளவு? ரூ.78000 கோடிகள். நாய் எலும்பை எடுத்து நாய்க்கும் போட்டு மீதத்தை விருந்தும் வைக்கிறார்.


அரசாங்கமாஆலமர ஜோஸ்யமா

அடுத்த மாதம் விலை குறையலாம் என ஆலமரத்தடி ஜோசியர் போல ஆரூடம் சொல்கிறது மத்திய அரசு. சர்வதேசக் கச்சா எண்ணெய் விலை கள் குறைவதால் ரூ.1.50 லிருந்து ரூ.1.80 வரை குறையலாமாம். ஆனால் வணிக இதழ்கள் இன்னொரு குண் டைப் போடுகின்றன. ரூபாய் மதிப்பு சரிவது பெட்ரோல் விலை உயர்வதற் கான அழுத்தத்தைத் தரும் என்பதே. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 100 பைசா விழுந்தால் பெட்ரோல் ஒரு லிட்டர் 77 பைசா கூடுமாம். உலகச் சந் தையின் கருணைதான் என கை விரிக் கிறது மத்திய அரசு. ஆண்டவன் சொல் றான்…. அருணாச்சலம் செய்றான்கிற மாதிரி.


ஈரத் துணியும், சொகுசு காரும்


பெட்ரோல் விலை கூடினால் பல சரக்கு, காய்கறி விலையெல்லாம் கூடி விடுமே என வயிற்றில் கட்டுவதற்கு ஈரத் துணியைத் தேடிக் கொண்டிருக் கிறார்கள் சாமானிய மக்கள். ஆனால் பெட்ரோல் விலை கூடியதால் உடனடி யாக விலைக் குறைப்பிற்கு ஆளாகி யுள்ள சரக்கு எது தெரியுமா? மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மோட்டார் ஆகியன ரூ.50000 வரை பெட்ரோல் மாடல் கார்களுக்கு தள் ளுபடி அறிவித்திருக்கின்றன. பொரு ளாதாரப் பாதையின் சூட்சுமம் பாருங் கள்.

மால்களுக்கும்’ மானியம்

அடுத்து டீசலைக் குறி வைக்கி றார்கள். இந்தியாவில் நுகரப்படும் 6.5 கோடி மெட்ரிக் டன் டீசலில் 65 சதவீதம் கார்கள் உள்ளிட்ட சொகுசு வாகனங் களால் நுகரப்படுவதேயாகும். பெரிய பெரிய மால்களில்- தொலைத் தொடர் பிற்கான கோபுரங்களில் பயன்படுத்தப் படும் டவர்களிலும் டீசல் பயன்படுத் தப்படுகிறது.இப்பயன்பாட்டிற்கும் ஒரு லிட் டருக்கு ரூ.15.35 மானியம் தரப்படு கிறது. பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ.922 கோடிகளுக்கு குவால்காம் ஏசியா பசிபிக் நிறுவனத்தின் 49 சதவீதப் பங்குகளை வாங்கி தில்லி, மும்பை, அரியானா, கேரளாவிற்கான 4ஜி தக வல் சேவையைக் கைப்பற்றியுள்ளது என்பது இன்றைய ’சூடான செய்தி’.


பற்றாக்குறைக்குஎங்கே போவது?

பெட்ரோல் விலையை உயர்த்தா விட்டால் நிதிப்பற்றாக்குறையைக் கட் டுப்படுத்த முடியாது என கண்ணீர் வடிக் கிறார்கள். ஆனால் 2012-13 ல் வரிச்சலுகைகளால் அரசுக்கு ஏற்படுகிற இழப்பு ரூ.5 லட்சம் கோடிகள் ஆகும். அதில் விலை மதிப்பற்ற ஆபரணங்கள், தங்கத்திற்கு தரப்பட்டுள்ள சலுகை மட் டுமே ரூ.57000 கோடிகள்.


கொசுறு


சிரிப்பதா? அழுவதா? தெரிய வில்லை. ஒரு ஆங்கில நாளிதழ் இரண்டு பத்திச் செய்தியொன்றை அரைக்கால் பக்கத்திற்குப் போட்டு ’இரக்கமற்ற ஆட்டோ டிரைவர்கள்’ என்று தலைப்பு போட்டுள்ளது. சென்னை நங்கநல்லுhரில் குறைந்த பட்சக் கட்டணத்தை ரூ.40லிருந்து 50 ஆக ஏற்றிவிட்டார்களாம்.


நன்றி - தீக்கதிர் நாளிதழ்

Friday, May 25, 2012

பேச்சே கிடையாது, செவிட்டில் அடி ........................ அடி

அயோக்கியத்தனமான பெட்ரோல்  விலை உயர்வைக்
கண்டித்து செவிட்டில் அடித்ததது போல, செருப்பால்
அடித்தது போல வெளி வந்துள்ள கேலிச்சித்திரங்கள்.

 

வெல்வெட் ஓவியங்கள் - இந்திய கலைஞர்களின் அற்புதப் படைப்புக்கள்

இந்தியக்  கலைஞர்கள் வெல்வெட் துணியில் படைத்துள்ள
அற்புத ஓவியங்கள், உங்களின் பார்வைக்காக












Thursday, May 24, 2012

நில அபகரிப்பு - திமுக செய்தால் ஜெயில், அதிமுக செய்தால் பாதுகாப்பு



அதிமுக ஆட்சிக் காலத்தில் ஓரளவாவது மக்களிடமிருந்து
பாராட்டு பெற்ற விஷயம் என்று ஏதாவது இருந்தால்  அது 
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நில அபகரிப்பு செய்யப்
பட்ட  திமுக காரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்தான்.

நில அபகரிப்பாளர்கள் திமுகவினராக இருந்தால் மட்டும்தான்
ஜெ அரசு நடவடிக்கை எடுக்கும் போல. அதிமுக வைச் 
சேர்ந்த மாபியா கும்பல்கள் செய்தால்  அப்படிப்பட்ட 
ஆளும்கட்சி குண்டர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு
அளிக்கிறது. யார் புகார் தருகின்றார்கள் என்று குற்றவாளிகளுக்கு
தகவல் அளிக்கிறது. 

நில அபகரிப்பு செய்த அதிமுக வினருக்கு எதிராக புகார் செய்த
காரணத்தால் திருவண்ணாமலை மாவட்ட மார்க்சிஸ்ட் 
கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் வீரபத்ரன் மீது 
கொலை வெறித் தாக்குதல் நடந்துள்ளது. 

முழமையான தகவலை இதோ தீக்கதிர் நாளிதழில்
படியுங்கள்.

 சிபிஎம் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் வீரபத்திரனை கொலை செய்ய முயற்சி
 
ஜி.ராமகிருஷ்ணன் கடும் கண்டனம்


சென்னை, மே 23 -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வண்ணாமலை மாவட்டச் செயலாளர் வீரபத் திரனை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. அவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் எம்.வீரபத்திரன் 22.5.2012 அன்று இரவு 9.15 மணியளவில் வீட் டிற்கு சென்றுகொண்டிருந்தபோது, திரு வண்ணாமலை நகர்மன்ற உறுப்பினர் வெங்க டேசன், அவரது சகோதரர் செல்வம், மைத்து னர் துரைமுருகன் ஆகியோர் வீரபத்திரனின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித் துள்ளனர். இந்த கொலைவெறிச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. திருவண்ணாமலையில் வைரக்குன்று என்னும் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை நகர்மன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் அவரது சகோதரர் செல்வம் ஆகியோர் அபகரித்தது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் புகார் அடிப்படையில், அரசு நிர்வாகம் ஆக்கிர மிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டது. இத னால் வெங்கடேசன், செல்வம் ஆகியோர் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலை வரும், கட்சியின் மாவட்டத்தலைவர்களில் ஒருவரான பலராமனை பிப்ரவரி 5, 2012 அன்று தாக்கியுள்ளனர். இது குறித்து அவர்கள் மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால், காவல்துறை சட்டரீதி யாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெங்கடேசன் மீது 2 கொலை வழக்குகள் உள்ளிட்ட பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர் கள்ளச்சாராய வியாபாரத்தோடு தொடர் புடையவர். இத்தகைய சமூக விரோத குற்றச் செயல் பின்னணி கொண்ட வெங்கடேசனை கைது செய்து காவல்துறை சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. இதனைத் தொடர்ந்தே மேற்கண்ட நேற்றைய(22.5.2012) கொலைவெறிச் சம்பவம் நடந்துள்ளது. எனவே, கட்சியின் மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்டத் தலைவர்களில் ஒருவரான பலராமன் ஆகியோரைத் தாக்கி கொலைசெய்ய முயன்ற சமூக விரோதிகளான நகர்மன்ற உறுப் பினர் வெங்கடேசன் அவரது சகோதரர் செல் வம், மைத்துனர் துரைமுருகன் ஆகியோர் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்து, உடனடியாக அவர்களைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

கண்டன ஆர்ப்பாட்டம்

இத்தாக்குதலை கண்டித்து புதனன்று போளூர், கலசப்பாக்கம், செய்யாறு, ஆரணி, வந்தவாசி ஆகிய இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சியினர் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். கலசப்பாக்கத்தில் மாநிலக்குழு உறுப்பி னர் கே.சாமுவேல் ராஜ் பங்கேற்றார். முன்ன தாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள வீரபத்திரனை சந்தித்து நலம் விசா ரித்தார்.

நில அபகரிப்பை அனுமதிக்க மாட்டோம்  என்று வீர வசனம் பேசிய
ஜெயலலிதா என்ன செய்யப் போகிறார் ?

திமுகவினர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதும் என்று
இருந்து விடப் போகின்றாரா? இல்லை சட்டம் ஒழுங்கைப் 
பாதுகாக்கப் போகின்றாரா?
 

Tuesday, May 22, 2012

சபாஷ் முருகன், சபாஷ் பேரரறிவாளன், வாழ்த்துக்கள்



ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி தூக்கு தண்டனையை
எதிர் நோக்கும் முருகன் மற்றும் பேரரறிவாளன் ஆகியோர்
பனிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் மிகச் சிறப்பான 
மதிப்பெண்களோடு  தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முருகன் 983 மதிப்பெண்களும் பேரரறிவாளன் 1096 
மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இதிலே முருகன் காமர்ஸ்
பாடத்தில் இருநூறுக்கு இருநூறு. பேரரறிவாளன் எல்லா
பாடங்களிலும் தொன்னூறு சதவிகிதத்திற்கு மேலும்
பெற்றுள்ளார்.

பள்ளிகளின்  தொடர்  பயிற்சி, தொடர் தேர்வுகள்,
பெற்றோரின் கவனம், முழுமையான வசதிகள்,
நிம்மதியான சூழல், ட்யூஷன் வசதிகள் இதுவெல்லாம்
இருந்தும் கூட எல்லா மாணவர்களும் எதிர்பார்க்கும்
மதிப்பெண்கள் பெறுவதில்லை.

இருபது வருட சிறை வாசம், இறப்பை உறுதி செய்துள்ள
தூக்கு தண்டனை, முடிவு என்னாகுமோ என்று தெரியாத
மேல் முறையீடு, பெற்றோர், உறவினரின் கண்ணீர்,
இதற்கு மத்தியில் இவர்கள் இருவரும் பெற்றுள்ள
மதிப்பெண்கள், மாநிலத்தின்  முதல் மாணவராக
தேர்ச்சி பெற்றதற்கு சமமாகும். 

சபாஷ் முருகன், சபாஷ் பேரரறிவாளன். 

வாழ்த்துக்கள். இது உங்களுக்குக் கிடைத்த
முதல் வெற்றி.

மரண தண்டனைக்கு எதிரான உங்களது 
போராட்டமும் வெற்றி பெறட்டும்.

 

Monday, May 21, 2012

மாவோயிஸ்ட் என முத்திரை சுமத்தப்பட்ட மாணவி மம்தாவிற்கு திறந்த மடல்




கடந்த 18.05.2012 அன்று சி.என்.என் - ஐ.பி.என் தொலைக்காட்சி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஒரு பேட்டியை ஏற்பாடு செய்திருந்தது. பிரசிடென்ஸி மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் கேள்வி கேட்டனர். சீர்கெட்டு வரும் மேற்கு வங்க நிலை குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத மம்தா பானர்ஜி, இந்த மாணவர்களெல்லாம் சி.பி.ஐ(எம்) ஆட்கள், மாவோயிஸ்டுகள், நீங்களெல்லாம் காட்டுக்கே செல்லுங்கள் என்று வெடித்து பேட்டியையும் பாதியிலேயே முடித்துக் கொண்டார். கேள்வி கேட்டவர்களை புகைப்படம் எடுத்து நடவடிக்கை எடுங்கள் என்று காவல்துறைக்கும் உத்தரவிட்டார்.

சகிப்புத்தன்மையற்ற நிலைதான் பாசிஸத்தின் முதல் கட்டம். மேற்கு வங்கம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு சோற்றுப்பதம் இது.

மம்தா பானர்ஜி கொந்தளிக்கும் வகையில் கேள்வி கேட்ட அந்த மாணவி டானியா பரத்வாஜ், மம்தா பானர்ஜிக்கு ஒரு திறந்த மடல் எழுதியுள்ளார். மாற்றம் என்ற முழக்கத்தை நம்பிய மேற்கு வங்க மக்களுக்கு கிடைத்த பரிசு என்ன என்பதை இக்கடிதம் உணர்த்துகின்றது.

அக்கடிதம் இங்கே கீழே.

அன்புள்ள “ எளிமையான ஆண்மகனே “

ஒரு சாதாரண வினா எழுப்பியதனால் தாங்கள் ஒரு சிக்கலான அவதாரம் மேற்கொண்டீர்கள். ஒரு காரசாரமான விவாதம் இருக்கும் என்று எதிர்பார்த்தே நாங்கள் நகர அரங்கில் நடைபெற்ற சிஎன்என் ஐ.பி.என்  கேள்வி பதில்  நிகழ்ச்சிக்கு  நாங்கள் அனைவரும் சென்றிருந்தோம். ஆனால் அது சமாளிக்க முடியாத அளவிற்கு சூடாகி விட்டது.

மேற்கு வங்கத்தின் மிக முக்கியமான நபரான தாங்கள் என்னையும் மற்ற அனைத்து பார்வையாளர்களையும் “ மாவோயிஸ்டுகள், சி.பி.எம் ஊழியர்கள் என முத்திரை குத்தினீர்கள். இந்த கௌரவத்தைப் பெற அப்படி நாங்கள் என்னதான் செய்து விட்டோம். உங்களை நாங்கள் கேள்வி கேட்டோம். அதிகாரத்தை கையில் வைத்துள்ள உங்கள் கட்சியின் அமைச்சர்கள் அதிலும் குறிப்பாக மதன் மித்ரா மற்றும் எம்.பி அரபுல் இஸ்லாம் ஆகியோர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் அல்லது இன்னும் கொஞ்சம் பொறுப்பாக நடந்து கொள்ளக்கூடாதா என்ற கேள்வியைத்தான் நான் கேட்டேன்.

பாலியல் வன்கொடுமைக்கு  உள்ளான ஒரு பெண்ணைப் பற்றி காவல்துறை விசாரணை தொடங்கும் முன்பே மதன் மித்ரா தனது சொந்த தீர்ப்பை உதிர்த்ததனால் ஏராளமானவர்களைப் போல நானும் மிகவும் எரிச்சலுற்றேன். நற்பெயர் களங்கப்படுத்தப்பட்ட அந்த பெண், சிறுபான்மை ஆங்கிலோ இந்திய இனத்தைச் சேர்ந்தவர். சற்றும் பொறுப்பற்ற அவரது இந்த நடத்தையை நாம் பொருட்படுத்த வேண்டாம் என்றாலும் அவர் நடவடிக்கை குறித்து அரசியல் ரீதியாக கேள்வி எழுப்பித்தான் ஆக வேண்டும்.  

சில மாதங்கள் முன்புதான் இதே மனிதன் கிழக்கு மெட்ரோபாலிடன் பைபாஸ் சாலையில் வழக்கமான சோதனைக்காக, இவரது காரை நிறுத்தியதால் காவலர்களோடு தகாத முறையில் நடந்து கொண்டார். அரபுல் இஸ்லாம் பிரச்சினையைப் பற்றி சொல்வதென்றால், அது இன்னமும் தலைப்புச்செய்திகளில் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

பரிபர்த்தன் (மாற்றம் ) வேண்டும் என வாக்களித்த, என்னைச் சுற்றியுள்ள ஏராளமானவர்களின் மனதில் அலை மோதிக் கொண்டிருந்த கேள்வியைத்தான் நான் கேட்டேன். மக்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும், அவர்கள் பின்பற்றுகின்ற நம்முடைய தலைவர்களிடமிருந்து இதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோமா? ஆனால் இறுதியில்  நான் அறிந்து கொண்டது என்னவோ “ மேற்கு வங்கத்தில் கேள்வி கேட்பது என்பது மாவோயிஸ்டாக இருப்பதற்கு இணையானது”  என்பதைத்தான்.

நான் ஒரு பெண்ணியவாதி அல்ல, எளிமையான ஆண் மகன் என்று தாங்கள் மேடையில் பெருமிதத்துடன் பிரகடனம் செய்து கொண்டீர்கள்.

தங்களின் இந்த பிரகடனம் எங்களுக்கு வியப்பளிக்கவில்லை. அதிலும் குறிப்பாக கட்வா மற்றும் பார்க் வீதி சம்பவங்களுக்குப் பிறகு நிச்சயம் வியப்பளிக்கவில்லை. ஜனநாயகம் குறித்தும் தாங்கள் பேசினீர்கள். என்னுடைய கேள்விக்கு முன்பு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களில் தாங்கள், ‘ மக்கள்’ ஜனநாயகம், வங்கம் ஆகிய வார்த்தைகளை அள்ளித் தெளித்திருந்தீர்கள்.

அரசியல் விஞ்ஞான மாணவியான நான் படித்தவரை உண்மையான ஜனநாயகத்தின் மிக முக்கியமான அடிப்படை அம்சம் என்பது கருத்து சொல்லும் சுதந்திரம் ஆகும். ஒரு தனி மனிதன் தான் சொல்ல விரும்புகிற கருத்துக்களை யாருடைய அதிகாரத்திற்கும் அஞ்சாமல் தெரிவிக்கும் உரிமையாகும். பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள முக்கியப் பிரமுகர்கள் பற்றிய கேலிச்சித்திரங்களை பார்த்து சிரிப்பது கூட அதில் அடங்கும்.

ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் இந்த ஜனநாயக அம்சம் தொடர்ச்சியாக பறி போய்க்கொண்டிருக்கிறது  என்பது மிகவும் வருத்தமானது. நீங்கள் என்னை  என்று அழைத்ததாலேயே நான்  மாவோயிஸ்ட் ஆகப் போவதில்லை. அனைத்து அம்சங்களிலும் உண்மை இல்லையென்றால் இந்த மாநிலத்தில் ஜனநாயகம் நிலவுகின்றதாக சொல்ல முடியாது. அவசர கதியில் நீங்கள் செய்தது என் மீது வெளிச்சம் பரவ வழி வகுத்து விட்டது. கோபத்துடன் வெளியேறியதால் நீங்கள்  இயல்பாகவே நாசகர சக்தி என்ற இடத்தை எடுத்துக் கொண்டு விட்டீர்கள்.

என்னுடைய கேள்விக்கு நீங்கள் எளிமையாக பதில் சொல்லியிருந்தாலோ அல்லது கருத்து கூற விரும்பவில்லை எனச் சொல்லி அடுத்த கேள்விக்கு சென்றிருந்தாலோ நிலைமையில் சிக்கல் ஏற்பட்டிருக்காது. நீங்கள் முக்கியமாக்க விரும்பியதால் இக்கேள்வி முக்கியத்துவம் பெற்று விட்டது.

அறிவு வெளியேற்றம் ( Brain Drain ) பற்றி நீங்கள் பலமுறை பேசியுள்ளீர்கள். லண்டன் பல்கலைக் கழகக் கல்லூரி, ஆப்பிரிக்க, ஓரியண்டல் கல்லூரி ஆகியவற்றில் வளர்ச்சி மற்றும் நிர்வாகம் பற்றி படிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. நானும் கூட வெளிநாட்டிற்கு புறப்பட்டு விடுவேன். அதற்கான காரணம் என்ன என்பது பற்றி இப்போது உங்களுக்குப் புரியும்.

நீங்கள் நிகழ்ச்சியில் தொடர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நியாயமான முறையிலேயே நீங்கள் “ வித்தியாசமான முதல்வராக “ இருந்திருப்பீர்கள். உங்களுடைய முதலமைச்சர் என்ற பொறுப்பின் தன்மைகளுக்கேற்பவாவது நீங்கள் நாங்கள் சொல்வதை எல்லாம் செவிமடுத்திருக்க வேண்டும்.

பொதுவாக எல்லா மனிதர்களும் நல்லவர்களாகத்தான் இருப்பார்கள், ஆனால் ஒரு மனிதனின் குணாதிசயத்தை சோதனை செய்ய வேண்டுமென்றால் அவனிடம் அதிகாரத்தை வழங்கு என்று ஆப்ரஹாம் லிங்கன் கூறியுள்ளார்.

அன்புடன்.
ஒரு எளிமையான பெண்மணி
டானியா பரத்வாஜ்

Sunday, May 20, 2012

வேலூரை வெயிலூர் என கிண்டலடிப்பவர்களே, இதைக் கொஞ்சம் கேளுங்கள் ....

எங்கள்  வேலூரை வெயிலூர் என கிண்டலடிப்பவர்களே,
இதைக் கொஞ்சம் கேளுங்கள்.

உச்சகட்ட வெயிலுக்கு புகழ் பெற்ற எங்கள் வேலூரில்
இன்று மாலை அரைமணி நேரம்  ஐஸ்கட்டி மழை
பெய்தது. அனலடிக்கும் வெப்ப நிலை மாறி 
ஊட்டிக்கு சவால் விடுக்கும் வண்ணம் மிகவும்
இனிமையாக நிலைமை மாறிவிட்டது.

நான்கு நாட்களாக குறைந்த பட்சம் 106 டிகிரிக்கு
மேல் வெப்பம்  நிலவி அவதிப்பட்ட வேலூர்
மக்களுக்கு இன்றைய ஐஸ்கட்டி  மழை 
ஒரு வரமாக வந்திருந்தது.

இன்று இப்படி ! நாளை எப்படியோ ?
 

டைரக்டர் ஷங்கர் கற்பனை, மம்தா ஒரிஜினல்



முதல்வன்  திரைப்படத்தின் முக்கியமான காட்சி ரகுவரனை
அர்ஜூன் பேட்டியெடுப்பது. நிழலில் தோன்றியது நேற்று 
நிஜத்தில் நடந்தது. மம்தா எனும் அராஜகப் பேர்வழியின்
அடாவடித்தனத்தை  மேலும் ஒரு முறை வெளிச்சம் போட்டுக்
காட்டியது.

ஒரு தொலைக்காட்சிப் பேட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதிலே ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் மம்தாவை
கேள்வி கேட்டார்கள்.

அவர் ஆட்சியின் அலங்கோலங்கள், அத்து மீறல்கள்,
பெண்கள் மீதான தாக்குதல்கள், சீர் கெட்டுப் போயிருக்கும்
சட்டம் ஒழுங்கு, தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள்,
கார்ட்டூனுக்காக கைது ஆகியவை பற்றியெல்லாம்
கேள்வி வந்ததும் அம்மையாரால் தாங்க முடியவில்லை.
பொங்கியெழுந்து விட்டார். 

உடனே மாணவர்களைப் பார்த்து நீங்கள் எல்லாம் 
சி.பி.எம், மாவோயிஸ்டுகள். உங்கள் கேள்விக்கெல்லாம்
பதில் சொல்ல முடியாது. நீங்கள் காட்டுக்கு செல்லுங்கள்
என்றெல்லாம் சத்தம் போட்டு விட்டு காவல்துறையைப்
பார்த்து அத்தனை பேரையும் புகைப்படம் எடுத்து 
நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவு போட்டுள்ளார்.

அவரால் பதில் சொல்ல முடியாததனால் மாணவர்கள்
சி.பி.எம், மாவோயிஸ்டுகள் ஆகி விட்டார்கள். பேட்டி 
எடுத்த பெண்மணி அவர்களெல்லாம் மாணவர்கள் என்று
சொன்னதற்கு மாவோயிஸ்டுகளாவதற்காக தேர்ந்தெடுக்கப்
பட்டவர்கள் என்று மீண்டும் திட்டியுள்ளார்.

பேட்டி பாதியில் நின்று விட்டது. சகிப்புத்தன்மை சிறிது
கூட இல்லாதவர், ஜனநாயகத்தின் மீது சிறிதும் 
நம்பிக்கை இல்லாதவர் என்பது நிகழ்ச்சியில் பங்கேற்ற
மாணவர்கள் முன்வைத்த விமர்சனம். அதை தங்கள் 
பெயரோடுச் சொல்ல அவர்களுக்கு பயம். உயிரைப்
பாதுகாத்துக் கொள்ள வேண்டுமல்லவா?

ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திலியே இந்தக் கூத்து.
இன்னும் நான்காண்டு காலம் மேற்கு வங்க மக்கள்
என்னவெல்லாம் அனுபவிக்கப் போகின்றார்களோ?

Friday, May 18, 2012

முடிவுகள் இரண்டு, உண்மை ஒன்று




உலகம் முழுதும் உள்ளவர்களின் கவனத்தை ஐரோப்பாவில் நடைபெற்ற இரண்டு நாடுகளின் தேர்தல் முடிவுகள் ஈர்த்துள்ளன. அம்முடிவுகள் சொல்லும் செய்திகளும் மிக முக்கியமானவை.

பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி தேர்தலில் வலதுசாரி அடிப்படைவாதக் கட்சியின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான நிக்கோலஸ் சர்கோஸ்கி தோற்றுப் போயுள்ளார். சோஷலிஸ்ட் கட்சியின் ஹாலன்டே புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

கிரீஸ் நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஒரு கூட்டணி அரசை உருவாக்கும் முயற்சி தோற்றுப்போய் வரும் ஜீன் மாதம்  மீண்டும் தேர்தல் நடைபெறப் போகின்றது.

இந்த தேர்தல்கள் உணர்த்தும் உண்மை என்ன?

சர்வதேச நிதி மூலதனத்தின் அளவு கடந்த லாப வெறி சர்வதேச பொருளாதர நெருக்கடியாக உருவெடுத்தது. பெரும் நிறுவனங்கள் திவாலாகின. திவாலின் விளிம்பிற்குச் சென்றன. நிறுவனங்களைப் பாதுகாக்க அரசுகள் தங்கள் கஜானாவை திறந்து விட்டன. அதனால் நாடுகளே திவாலாகும் நிலைக்குச் சென்றன.

நாடுகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, தங்களின் முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்க மக்கள் மீது தாக்குதல் தொடுத்தனர், உழைப்பாளிகள் மீது தாக்குதல் தொடுத்தனர். நலத் திட்டங்கள் வெட்டி சுருக்கப்பட்டன. சலுகைகள் பறிக்கப்பட்டன. தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக அவர்கள் வீதிக்கு வந்தனர்.

முதலாளித்துவத்தின் அடையாளமான அமெரிக்கப் பங்குச்சந்தை அமைந்திருக்கும்  “வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்” என்ற முழக்கத்தோடு தொடங்கிய போராட்டம் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கிறது. அப்போராட்டம் தேர்தல் முடிவுகளிலும் எதிரொலித்துள்ளது.

அடிப்படைவாத வெறியைத் தூண்டி மிகப் பெரிய ஆரவாரத்தோடு ஆட்சிக்கு வந்த சர்கோஸிக்கு பிரஞ்சு மக்கள் ஐந்தே ஆண்டுகளில் வீட்டிற்குப் போகும் வழியைக் காண்பித்து விட்டார்கள். தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதன் அடையாளம் இந்த முடிவு. ஆட்சிக்கு வந்த ஹாலண்டே லத்தீன் அமெரிக்க சோஷலிஸ ஆட்சியாளர்களைப் போல அமைப்பு முறையை மாற்றியமைப்பார், பறிக்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் மீண்டும் தானே வழங்கிடுவார் என்ற பிரமை நமக்கு இருக்க வேண்டியதில்லை.

அதே நேரம் சர்கோஸி வழியில் சென்றால் மக்கள் சர்கோஸி போலவே தன்னையும் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள்  என்ற எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

கிரீஸின் நிலைமை மாறுபட்டது. அங்கே பொருளாதாரம் அதள பாதாளத்தில் உள்ளது. அதனை கைதூக்கி விட ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளது. ஆனால் அதற்கான விலையை அந்நாட்டு மக்கள்தான் ஏற்றாக வேண்டு. ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றால் ஏற்கனவே கடுமையான தாக்குதல்களைச் சந்தித்து போராட்ட களத்தில் நிற்கும் மக்கள் மீது இன்னும் கூடுதல் சுமையினை சுமத்த வேண்டியிருக்கும்.

தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் கூட்டணி அரசு அமைக்க தடையாக இருப்பது ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்பதில் கருத்தொற்றுமை வராததுதான். அதனால்தான் அந்த நாடு மீண்டும் தேர்தலை எதிர் நோக்கியுள்ளது. மீண்டும் தேர்தலுக்காக அங்கே உள்ள அரசியல் கட்சிகள் மக்களை சந்திக்கையில் ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகள் குறித்து தங்களின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்திட வேண்டிய கட்டாயம் உள்ளது.

கட்சிகள் மேற்கொள்ளும் நிலைதான் கிரீஸின் எதிர்காலத்தை மட்டுமல்ல, அக்கட்சிகளின் எதிர்காலத்தையும் நிர்ணயம் செய்யப் போகின்றது. முதலாளிகளின் நலனுக்காக மக்களின் எதிர்காலமா அல்லது மக்களின் நலனுக்காக முதலாளிகளின் எதிர்காலமா, யார் எதை காவு கொடுக்கப் போவதாகச் சொல்லுகின்றார்களே அதற்கேற்றார்போலத்தான் தேர்தல் முடிவும் அமையும்.

உலகமயமாக்கல் கொள்கைகளை அமுலாக்குவதை இனியும் நாங்கள் 

அனுமதிக்க மாட்டோம் என்பதுதான் பிரான்ஸ் மற்றும் கிரீஸ் மக்கள் 

தெரிவித்துள்ள திட்டவட்டமான செய்தி. இதை எல்லா நாட்டு 

ஆட்சியாளர்களுமே புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக இந்திய 

ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்