Friday, July 19, 2013

மருத்துவர்தான் செய்த பாவத்திற்கு சிலுவை சுமக்க வேண்டும்

 மருத்துவர் ஐயாவின் இரக்கமற்ற அறிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின்
தக்க பதிலடி


நாகராஜன் மரணமும் இளவரசன் மரணமும் கௌரவக் கொலையே!

பாமகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பதிலடி

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு 18.07.2013 அன்று தாங்கள் ஏதோ தவறாக சிலுவையில் அறையப்பட்டதாகவும் அதற்காக தமிழக கட்சிகள் பாவங்களை சுமப்பார்களா      என்றும் ஒரு பத்திரிக்கைச் செய்தி வெளியிட்டுள்ளார். குற்றம் செய்வதை விட குற்றம் நடந்த பிறகு அதைப் பற்றிய குற்ற உணர்வின்றி இருப்பது மிகவும் கொடூரமானது.

இளவரசன் மரணத்தைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 04.07.2013 அன்று வெளியிட்டிருந்த அறிக்கையில் தமிழக மக்கள் மத்தியில் தர்மபுரி இளவரசனின் மரணச் செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் ஒருங்கே உருவாக்கியுள்ளது. இது இளவரசன் திவ்யாவின் சாதி மறுப்புத் திருமணத்தை ஒட்டி நடந்துள்ள இரண்டாவது உயிர் பலியாகும். ஏற்கனவே திவ்யாவின் தந்தை இறந்ததும், அதைத் தொடர்ந்து 3 கிராமங்களைச் சேர்ந்த தலித் மக்கள் மிகக் கொடூரமான தாக்குதலுக்கும், வன்முறைக்கும் உள்ளாக்கப் பட்டதும் நீங்கா ரணமாகப் பதிந்துள்ளன. இளவரசனின் அகால மரணம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

அரசாங்கமும், காவல் துறையும் இது குறித்து தகுந்த விசாரணை மேற்கொண்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. அது கொலை என்றோ
தற்கொலை என்றோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவுக்கு வரவில்லை. இளவரசனின் கடிதத்திலுள்ள என் சாவுக்கு யாரும் காரணமல்ல என்பதைக் காட்டி மருத்துவர் இராமதாசு அவரும் அவர் கட்சியினரும் குற்றமற்றவர்கள் அவர்களை குற்றம் சுமத்தியவர்கள்தான் பாவிகள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இளவரசன் திவ்யா இருவரும் 2012 அக்டோபர் மாதத்திலேயே திருமணம் செய்து கொண்டனர். இது திவ்யாவின் தந்தை நாகராஜனுக்கும் தெரியும். ஆனால், அவர் அப்போது தற்கொலை செய்து கொள்ளவில்லை. சாதிவெறி கண்ணோட்டத்துடன் பாமக-வினர் இப்பிரச்சனையை
அணுகியதும் நிர்ப்பந்தித்ததும் தான் அவரது தற்கொலைக்குக் காரணம். இளவரசன் தற்கொலைக்கு அவருக்கு வேலை இல்லை என்றும் தற்கொலை மனோபாவத்துடன் தான்   இருந்தார் என்றும் மது அருந்தியிருந்தார் என்றெல்லாம் நியாயம் கற்பிக்க முயலும் மருத்துவர் ராமதாசு நாகராஜின் தற்கொலைக்கு என்ன காரணம் கற்பிப்பார்?

திவ்யாவின் தந்தை நாகராஜன் மற்றும் திவ்யாவின் கணவர் இளவரசன் இருவருடைய மரணத்திற்கும் சாதி வெறியர்களின் நிர்ப்பந்தமும் துன்புறுத்தலும் தான் காரணம் என்பதை   யாரும் மறுக்க முடியாது. மிகப்பெரிய அளவிற்கு நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டாம்பட்டி கிராமங்களில் சாதி வெறியர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு கோரத்தாண்டவம் ஆடி கொக்கரித்துக் கொண்டு திரிந்த நிலைமையில் தான் தர்மபுரி நீதிமன்றத்தில் திவ்யா ஆஜரானார். சாதிய சக்திகள் கூட்டம் சூழ்ந்திருக்க உயிருக்கே ஆபத்தான நிலையிலும் கூட இளவரசன் தான் என் கணவர், அந்த வீட்டில் தான் வாழப் போகிறேன், என்னை அங்கே அனுப்பி வையுங்கள் என்று தைரியமாகச் சொன்னவர் திவ்யா. உயர்நீதிமன்றத்திலும் கூட இளவரசனுடன் தான் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் இளவரசனுடன் வாழ விரும்புவதாகவுமே முதலில் வாக்குமூலம் அளித்துள்ளார். நீதிமன்றம் அதோடு வழக்கை முடித்திருக்க வேண்டும் அல்லது தன்னுடைய பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டும்.

துரதிஷ்டவசமாக நீதிமன்றம் அந்த வழக்கை நீட்டித்துச் சென்றதும் அவர் தாயுடன் இருக்க அனுமதித்ததும் சாதி வெறியர்கள் அவர் மீது நிர்ப்பந்தம் செலுத்துவதற்கு வாய்ப்பை  ஏற்படுத்தியது. ஆட்கொணர்வு மனுவின் மீதான வழக்கில் வரம்பைத் தாண்டியதே திவ்யா - இளவரசன் பிரிவிற்கு காரணமாகியிருக்கிறது.

திவ்யாவின் தந்தை, கணவர் இருவருமே நிர்ப்பந்தத்தாலும் துன்புறுத்தலாலும்தான் மரணமடைந்துள்ளனர். இரண்டும் இயற்கை மரணமல்ல. நிர்ப்பந்தத்தின் காரணமாக ஏற்பட்ட கொடூர மரணம். சாதி வெறியர்கள் தூண்டிய கௌரவக் கொலைகள். இத்தகைய இரண்டு மரணங்களும் இயற்கையாக நிகழவில்லை என்கிறபோது அதற்குக் காரணமானவர்கள் தான் குற்றவாளிகள். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதால் விபத்து நிகழ்ந்து மரணம் ஏற்பட்டால் கூட ஓட்டுநருக்கு தண்டனை தரப்படுகிறது. ஆனால், திட்டமிட்டு சாதியின் பெயரால் ஒரு இளைஞனையும் ஒரு தந்தையையும் மரணத்திற்கு துரத்தியது குற்றமில்லையா?

தற்போது அதே தர்மபுரி மாவட்டத்தில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்டோர் ஊரிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார்கள். இங்கு ஆண் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். பெண் தலித் வகுப்பைச் சார்ந்தவர். திரு. இராமதாசு-வின் கூற்றுப்படி ஜீன்ஸ், டிசர்ட், கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு தலித் வாலிபன் வேறொரு சாதிப் பெண்ணை நாடகமாடி காதலித்தார் என்றோ பணம் பறித்தார் என்றோ சொல்ல முடியாது. இரண்டு பேரும் நீண்ட   நாட்களாக அந்த ஊரில் குடும்பம் நடத்தி குழந்தை பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திவ்யா - இளவரசன் நிகழ்வுகளுக்குப் பிறகு தைரியமடைந்துள்ள சாதி  வெறிக் கும்பல் இப்போது இந்த தம்பதியினரின் வாழ்க்கையிலும் விளையாட ஆரம்பித்திருக்கிறது. இதற்கு சாதி வெறியின்றி வேறு என்ன காரணம் இருக்க முடியும்? எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இளவரசன் மரணம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கௌரவக் கொலைகள் தடுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கென தனி சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

ஜி.ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்

2 comments:

  1. சரியான அறிக்கை.

    ReplyDelete
  2. உண்மையை இந்த இணைப்பில் தெரிந்துக்கொள்ளுங்கள் http://www.deccanchronicle.com/130712/news-current-affairs/article/dc-special-here-love-gets-fixed%E2%80%99?page=show

    ReplyDelete