Sunday, November 17, 2013

சுஜாதாவின் ப்ரியாவும் ரஜனிகாந்தின் ப்ரியாவும்




சமீபத்தில் சென்னை சென்ற போது அவசரத்தில் பயணத்தின் போது படிக்க புத்தகம் எதுவும் எடுத்துச் செல்லவில்லை. வாலாஜாவில் உள்ள ஒரு உணவகத்தில் காலை உணவு சாப்பிடும்போது அங்கே சுஜாதாவின் ஏராளமான நூல்களை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். படிக்காத சில புத்தகங்களை வாங்கிக் கொண்டேன்.

அதிலே ஒன்று ப்ரியா

அந்த புத்தகத்தை படித்து முடித்த பின்புதான் ஒரு நாவலை இந்த அளவிற்குக் கூட கொலை செய்ய முடியும் என்பதை புரிந்து கொண்டேன். இதை எழுதுவதற்கு முன்பாக திரைப்படத்தையும் ஒரு முறை பார்த்துக் கொண்டேன்.

ரஜனிகாந்தின் சூப்பர் ஸ்டார் இமேஜிற்கு பலி கொடுக்கப்பட்ட ஒரு கதை ப்ரியா.

நாவலின்படி நடிகை ப்ரியா திருமணமானவர். அவர் லண்டனுக்கு ஷூட்டிங் செல்லும் போது பரத் குமார் என்ற இன்னொரு நடிகனோடு ஓடி விடுவாளோ என்ற அச்சத்தில் அவளை கண்காணிக்க புத்திசாலி வழக்கறிஞர் கணேஷை அவளது கணவர் ஜனார்த்தன் லண்டன் அனுப்புகிறார். அங்கே அவள் கடத்தப்படுகிறாள். ஸ்காட்லாண்டு யார்டால் கணேஷ் தரும் துப்புக்களின் துணையோடு மீட்கப் படுகிறாள். இதுதான் கதை. சுஜாதா எழுதியதையே நல்ல சுவாரஸ்யத்தோடு படம் எடுத்திருக்க முடியும். ஆனால் ரஜனிகாந்தின் சாகசங்கள், சிங்கப்பூரின் அழகைக் காண்பிப்பது, டால்பின் மீன்களின்  திறமைகளைக் காண்பிப்பது போன்றவைதான் நோக்கமாக இருந்ததால் கொலைவெறியோடு செயல்பட்டு விட்டார்கள்.

ரஜனிகாந்தின் அறிமுகத்திற்காக ஒரு கடத்தல், சண்டை, அதற்குப் பிறகு மீசை வைத்த ஜூலியஸ் சீசர் நாடகம் என்று முதல் கோணலே முற்றிலும் கோணலாகிறது. அடுத்து திருமணமான ப்ரியா இன்னொரு நடிகரை காதலித்தால் தமிழ்ப் பண்பாடு என்ன ஆகும்? ஆகவே ப்ரியா ஜனார்த்தனுக்கு ஒப்பந்தம் எழுதிக் கொடுத்துள்ளதாக மாற்றி விட்டார்கள்.

அடுத்து லண்டன் செல்ல பட்ஜெட் இடம் கொடுக்கவில்லை போலும். அதனால் கதைக் களனை சிங்கப்பூராக மாற்றி விட்டார்கள். அது பரவாயில்லை.

ரஜனிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் போது அவருக்கு கதாநாயகி இல்லாவிட்டால் எப்படி? ஆகவே அவருக்கு ஜோடியாக ஒரு மலேயப் பெண்ணை கொண்டு வந்து விட்டார்கள். அவரை காப்பாற்றுவது, கராத்தே வீரரான அந்த பெண்ணின் அண்ணனோடு சினிமா கரேத்தே சண்டையிட்டு காதலில் வெல்வது, சிங்கப்பூர் பூங்காக்களில் சுற்றி டால்பின் சாகஸங்களைப் பார்ப்பது என்று ஒரு முக்கால் மணி நேரத்திற்கு ஒப்பேத்தி விட்டார்கள். அதிலும் டால்பின் சாகசம் காட்டும்போது ரஜனிகாந்தும் அந்த மலேயப் பெண்ணும் காட்டும் முகபாவனைகளில் மாற்றமே கிடையாது. ஒரே காட்சியை நான்கைந்து முறை ஒட்டி காண்பித்து விட்டார்கள்.

கடத்தப்பட்ட ப்ரியாவை சுஜாதாவின் கதையில் லண்டன் போலீசும் கணேஷும் இணைந்து மீட்பார்கள். சினிமாவிலோ அது ரஜனிகாந்தின் சாகஸம் மட்டுமே. அதற்காக கல் தோன்றி மண் தோன்றா காலத்து தமிழ் சினிமா பாரம்பரியப்படி மாறு வேடமணிந்த கதாநாயகன் பாட்டு பாடி மீட்பார். சுஜாதாவின் கதைப்படி ப்ரியா அடைத்து வைக்கப்பட்ட வீட்டிலிருந்து மீட்கப்படுவதோடு கதை முடிந்து விடும்.

சிங்கப்பூர் வரை சென்று அங்கே உள்ள சாலைகளில் கார் ரேஸ் நடத்தாவிட்டால் அது தமிழ்த் திரைப்பட இலக்கணப்படி தவறல்லவா? அதனால் ஒரு பரபரப்பான கார் சேஸிங் காட்சியும் உண்டு. ரஜனிகாந்தும் ஸ்ரீதேவியும் நடிக்கும் படத்தில் அவர்கள் டூயட் பாடாவிட்டால் எப்படி? அதனால் திரைப்படத்தில் வரும் திரைப்படத்தில் ரஜனிகாந்தை கதாநாயகனாக்கி ஸ்ரீதேவியோடு “ ஹேய் பாடல் ஒன்று” என்று டூயட் பாட விட்டார்கள். கதையின்படி ப்ரியாவின் சடலம் கிடைத்ததாக மெழுகு பொம்மையை போலீஸ் காண்பிக்கும். அதனால் கதையில் திருப்பங்கள் வரும். மூலக்கதையில் வருவதால் திரைப்படத்திலும் மெழுகு பொம்மையை காண்பித்து அத்தோடு அதை உருக்கி விட்டார்கள். மொத்தப்படமே நகைச்சுவையாக போய்க் கொண்டிருந்தாலும் தேங்காய் ஸ்ரீனிவாசனை வேறு இயக்குனராக்கி அவருக்கு மசாஜ் செய்தும் உங்க பாஸ்போர்ட் என் கையில் என்று அவரை நொடிக்கொரு முறை செய்ய வைத்தும் நம்மை சோதித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனாலும் ப்ரியா எனக்கு பிடித்த படம்தான். ஒளிப்பதிவு அற்புதமாக இருக்கும். சிங்கப்பூருக்கு நம்மை பாபு கை பிடித்துக் கூட்டிக் கொண்டு போயிருப்பார். பின்னணி இசையிலும் பாடல்களிலும் இளையராஜாவின் மேதமையை நம்மால் உணர முடியும். ஸ்டீரியோவில் வந்த முதல் படமான ப்ரியா வின் பாடல்கள் இன்னும் புதிதாய் புத்துணர்வை அளித்துக் கொண்டே இருக்கிறது.

இதற்குப் பிறகும் தன் நாவல்களை திரைப்படமாக்க அனுமதித்த சுஜாதாவின் தைரியத்தை பாராட்டியே தீர வேண்டும். ரொம்ப ரொம்ப நல்ல மனிதர் அவர்.

நல்ல வேளை, எனக்கு மிகவும் பிடித்த நாவலை அதே பெயரில் எடுக்கப்பட்ட  “கரையெல்லாம் செண்பகப் பூ” திரைப்படத்தை நான் பார்க்கவில்லை.

9 comments:

  1. YOU ARE ESCAPED BY NOT SEEING KARAIYELLAM SHENBAGAPOO.

    ReplyDelete
  2. கரை எல்லாம் சென்பகப்பப் பூ காயத்ரி போன்ற படங்களை சுஜாதா கதை என்று பார்க்காதீர்கள்.

    ReplyDelete
  3. மற்ற தமிழ் படங்களில் காப்பி அடிப்பார்கள்.இந்த கார் சேஸ் (chase()-- அப்படியே ஆங்கிலப் படத்தில் இருந்து ஒரு ரீலை உருவி வைத்து இருந்தார்கள்.இடது பக்கம் தெருவில் கார் ஓட்டும் முறை நன்றாக தெரியும். படம் பெயர் Steve Mcquin நடித்த புல்லிட் என்று நினைக்கறேன். இல்லை Charles Bronson நடித்த படமோ நியாபகம் இல்லை
    ____________
    அது தமிழ்த் திரைப்பட இலக்கணப்படி தவறல்லவா? அதனால் ஒரு பரபரப்பான கார் சேஸிங் காட்சியும் உண்டு.

    ReplyDelete
  4. எழுதிய விதம் நல்ல நகைசுவையா ரசிக்கதக்கதாக இருந்தது.
    //கல் தோன்றி மண் தோன்றா காலத்து தமிழ் சினிமா பாரம்பரியப்படி மாறு வேடமணிந்த கதாநாயகன் பாட்டு பாடி மீட்பார் :) //

    ReplyDelete
  5. நண்பர் ராமன்.. ப்ரியா வெளியான போது சுஜாதா பேட்டி கொடுத்திருந்தார்.. அதாவது பஞ்சு அருணாச்சலம் சொன்னாராம்..”நீங்கள் எழுதியதைப் போல ப்ரியாவை எடுத்தால் 4 நாட்கள் கூட படம் ஓடாது” என்று.. மேலும் பாலச்சந்தர் எடுத்த நினைத்தாலும் இனிக்கும் கதையை கூட் சுஜாதா எனது கதை பேல் பூரியாக வெளிவ்ந்திருக்கிறது என்று பேட்டி கொடுத்து படித்த ஞாபகம் எனக்கு இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. நினைத்தாலே இனிக்கும் படத்தில் நம்ம உலக நாயகன் தானே "கீரோ"! ராமனுக்கு அதில் எதுவும் தப்புத் தெரியாது! :)))

      Delete
  6. இந்தப் படம் வெளியானபோது ரஜினி சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெறவில்லை. நன்றாக காட்சிகளைச் சொல்லி அலசி இருக்கிறீர்கள். நண்பர் பத்ரி சொல்லியிருப்பது போல நினைத்தாலே இனிக்கும் படத்தில் கடத்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை அமைத்திருந்தாராம் சுஜாதா. அதைக் கதையின் மிகச் சிறிய பகுதியாக்கி, காதலை மையப் படுத்தி எடுத்து இருந்தார் கேபி!

    தனது படைப்புகள் கெடக் கூடாது என்று ஜெயகாந்தன் தன் படங்களைத் தானே எடுத்துக் கொண்டார். அதுவும் நன்றாகத்தான் இருந்தது.

    அதே சமயம், விருது வாங்கி இருந்தாலும் திக்கற்ற பார்வதி எந்தத் திசையில் மறைந்தாள் என்பதும் நமக்குத் தெரியும்! :))))

    ReplyDelete
    Replies
    1. ராமனை விட்டால் அபூர்வ ராகங்கள்க்கும் இப்படித்தான் ஏதாவது ரஜினி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை தக்க வைப்பதற்காக கே பி எடுத்தார்னு எதையாவது எழுதுவார். ப்ரியா படம் மிகப்பெரிய வெற்றையடைந்ததுக்கு காரணம்.. ராமனுக்கு அது பிடிக்கவில்லை என்பதே..

      எல்லா இயக்குநர்களும் ராமனுக்கு ப்ரி வியூ போட்டுக்காட்டி அவருக்கு பிடிக்காத மாரி எடிட் பண்ணி வெளியிட்டால் படம் சூப்பர் ஹிட் ஆகிவிடும்! :)

      Delete
  7. ஈ மெயில் சப்ஸ்கிரைபிங் கேட்ஜெட் இணைக்கலாமே நண்பரே.. என் போன்றோர் தொடர வசதியாயிருக்குமே...

    ReplyDelete