Friday, December 6, 2013

உதிர்ந்த கறுப்பு ரோஜா



வதந்தியாய் போனதால்
மகிழ்ச்சி அளித்த
அச்செய்தி இப்போது
உண்மையாய் மாறி
வருத்தம் தருகிறது.

கருப்பு நிறத்தவரை
கறுப்பு இதயத்தினர்
வெறுத்து ஒதுக்கிய
கொடுமைக்கு முடிவு கட்ட
“குத்தீட்டி” யாய்
இயக்கம் கண்டவர்.

சூரியன் உதயமும்
சூரியன் மறைவும்
காண இயலா
கடுஞ்சிறையில்
இளமையை இழந்தவர்.

சிறைக் கம்பிகளை விட
மேலும் உறுதியாய்
உள்ளம்  கொண்டவர்.
உலகத்தோரின்
மதிப்பைப் பெற்றவர்.

எல்லைகளுக்கு அப்பாலும்
நேசிக்கப்பட்ட இன்னொரு
மனிதரும் இப்போது இல்லை.

இன வெறிக்கு
முற்றுப்புள்ளி வைத்த
மாமனிதனின் வரலாற்றுக்கு
முற்றுப்புள்ளி உண்டா என்ன?

கறுப்பு ரோஜா
உதிர்ந்தாலும் கூட
அதன் வாசம் மட்டும்
வீசிக் கொண்டே இருக்கும்.
மண் உள்ளவரை.

No comments:

Post a Comment