Tuesday, February 11, 2014

த.அ.ம ஐயாவின் காமெடி பேட்டி

 ஆனந்த விகடனில் வரும்  ஜாலி பேட்டி போல 
ஒரு  காமெடி பேட்டி கொடுத்துள்ளார் நமது
தரகுப்புயல் ஐயா.

முரண்பாடுகளின் மூட்டையாக உள்ள இந்த
பேட்டியை படியுங்கள்.

பாவம் அவரே கன்ப்யூஸ் ஆயிட்டாரு.

நன்றி
தோழர் ப.கவிதா குமார்




பாஜக மதவாத அமைப்பு என்பதை
100 சதவீதம் ஏற்கிறேன்
தமிழருவி மணியனின் பகீர் பேட்டி
********************************
பாஜக மதவாத அமைப்பு என்பதை 100 சதவீதம் ஏற்கிறேன் என்று காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

காந்திய மக்கள் இயக்கத்தை, காந்திய மக்கள் கட்சியாக மாற்றி தமிழருவி மணியன் திங்களன்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் என்ற 18 நெறிமுறைக்கோட்பாடுகளுடன் இந்த கட்சி துவங்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக பொதுத்தளத்தில் சமூகப்பிரச்சனைகளுக்காக, சாதி,மதவாத அமைப்புகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்த எங்கள் அமைப்பு கட்சியாக பதிவு செய்யப்படுகிறது. தமிழக அரசியல் களம் முற்றாக சீரழிந்துள்ளது. அராஜகம், ஊழல், வாரிசு அரசியலுக்கு எதிரான அரசியலை உருவாக்கப்பாடுபடுவோம்.மகாத்மா காந்தி விரும்பிய தேசத்தை அமைப்போம்.மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கோரிக்கையை முன் நிறுத்துவோம்.

ஊழலுக்கு எதிராக மாநாடு நடத்திய விஜயகாந்த் போல உதட்டளவில் இல்லாமல் தொடர்ந்து யுத்தம் செய்வோம். ஆம் ஆத்மி கட்சியைப் பார்த்து தான் எங்கள் கட்சி துவங்கப்பட்டுள்ளது என்பது பெரும் பிழை. அந்த கட்சியிடமிருந்து பாலபாடம் நான் கற்கத்தேவையில்லை. இந்தியாவின் ஒரே பிரச்சனை ஊழல் மட்டும் தானா? வெறும் ஊழலை மட்டும் ஒழித்தால் போதுமா? மது ஒழிப்பில் ஆம் ஆத்மிக்கு பெரிய கொள்கைகள் எதுவும் கிடையாது. இளைய சமுதாயத்தினரிடம் மதுவை அறிமுகப்படுத்திய ஜெயலலிதாவும், கருணாநிதியும் சமுதாயக் குற்றவாளிகளாவார்கள். 2016 சட்டமன்றத்தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்ற மூடநம்பிக்கை எனக்கில்லை. 2016 ல் கூட்டணி ஆட்சி அமையும். சாகும்வரை நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். டாக்டர் ராமதாஸ் போல, இருசொல் பேச்சாளன் அல்ல நான்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியிடமிருந்தும், தமிழகத்தில் அதிமுக,திமுக ஆகிய இரண்டு கட்சிகளிடமிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்பதற்காக பாஜக கூட்டணியில் சில கட்சிகளைச் சேர்க்க முயற்சி செய்தேன். மதிமுக,தேமுதிக,பாமக போன்ற கட்சித்தலைவர்களுடன் பேசினேன். மதிமுக ஏற்கனவே,பாஜக கூட்டணியில் சேர முடிவு செய்து விட்டது. ஆனால், பாமகவும், தேமுதிகவும் இதுவரை முடிவைச் சொல்லவில்லை. விஜயகாந்திடம் இன்றுவரை முயற்சி செய்யப்பட்டும் நிலைமை சரியில்லை. பாஜக தலைவர்கள் இன்றும் பேசினார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்போகிறார்கள்.

அரசியல் நடவடிக்கைகளை வெளிப்படையாக வைக்காமல் விஜயகாந்த், தரகுவேலையில் ஈடுபடுவது துரதிஷ்வசமானது. அவருக்கான கூட்டணி என்பது பாஜக தான். இல்லாவிட்டால் அவர் தனித்து போட்டியிட வேண்டும். அதே போல், பாமக சாதியவாதத்தை கைவிட வேண்டும். வன்னியர் ஆட்சி எனக்கூறிக்கொண்டிருந்தால் 100 ஆண்டு ஆனாலும் பாமக ஆட்சிக்கு வர முடியாது. பாமகவின் வேலை அபாயகரமானது. ஜனநாயகத்தை சவக்குழியில் தள்ளக்கூடியது.

கோட்சே கும்பலுடன் நீங்கள் ஏன் கைகுலுக்குகிறீர்கள் என்று கேட்கிறார்கள். காந்தியை விமர்சனம் செய்தவர்கள் தான் இந்த விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். என்னை கோட்சே கும்பல்காரன் என்று சொன்னாலும், பாஜகவுக்குத்தான் ஆதரவு தருவேன் என்று தமிழருவி மணியன் கூறினார்.

காந்திய மக்கள் கட்சி எனப் பெயர் வைத்துக்கொண்டு, மதுரையில் நடைபெறும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்(ஏபிவிபி) கூட்டத்தில் எப்படி நீங்கள் கலந்து கொள்கிறீர்கள் என்று ஒரு செய்தியாளர் கேட்டதற்கு, ஏபிவிபி கூட்டத்திலா நானா? என்று கேள்வி எழுப்பிய போது, மேடையில் இருந்த ஒருவர் அது தான் 16 ம் தேதி கொடுத்துள்ளீர்களே என்று சொன்னதற்கு, ஓ, அந்தக்கூட்டமா? அது மதுவிற்கு எதிராக நடைபெறும் கூட்டம். மதுவிற்கு எதிராக கருணாநிதி,ஜெயலலிதா கூட்டம் நடத்தி கலந்து கொள்ளச்சொன்னாலும் கலந்து கொள்வேன் என்று தமிழருவி பதிலளித்தார். வர்ணாசிரமக்கோட்பாடுடைய ஏபிவிபி கூட்டத்தில் கலந்து கொள்வது சரிதானா என்ற கேள்விக்கு, காந்தியை நான் முழுமையாக ஏற்கவில்லை. அவரிடம் நான் முரண்படும் இடமும் உண்டு. ஆனால்,வர்ணாசிரமத்தை ஒருநாளும் ஏற்கமாட்டேன் என்று கூறினார்.

தந்தை பெரியாரை செருப்பால் அடிக்க வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த தலைவர் ஒருவர் பேசியதாக இணையதளங்களில் செய்தி பரவியுள்ளது. இதற்கு, நீங்கள் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு,அப்படியா, நான் இணையதளம் பார்க்கும் பழக்கமில்லாதவன் என்று பதிலளித்தார். தந்தை பெரியாரை இழிவாகப் பேசியதுடன், அதை இணையதளத்தில் வெளியிட்ட பாஜகவின் துணைத்தலைவர் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைவரிடம் மனுக்கொடுத்த செய்திகளைப் பார்க்கவில்லையா என்ற கேள்விக்கு, மனுக்கொடுத்தவர்களைப் பாராட்டுகிறேன். தந்தை பெரியாரை அப்படிப் பேசியிருந்தால், பேசிய நபர் மண்ணில் வாழத்தகுதியவற்றவர். பெரியார், 69 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கக்காரணமானவர். அவர் மீது காவல்துறை தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கிறேன் என்று தமிழருவி மணியன் பதிலளித்தார்.

காந்திய மக்கள் இயக்கத்தை துவக்கிய போது, தந்தை பெரியார் போல தேர்தல் அரசியலில் எங்கள் இயக்கம் பங்கேற்காது என்று உறுதிமொழியளித்து உறுப்பினர்களைச் சேர்த்தீர்கள். இன்று அந்த உறுதிமொழிக்கு எதிராக அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளீர்களே என்ற கேள்விக்கு, இந்த கட்சி துவங்க காரணம் நானல்ல. கட்சி துவங்குவதில் உடன்பாடில்லை என்று தான் கூறினேன். ஆனால்,நமது இயக்கத்தை சர்வோதயா சங்கம் போலப்பார்க்கிறார்கள். அரசியல் அதிகாரத்தின் சாவி இல்லாமல் வாழ முடியாது என்று அம்பேத்கர் சொன்னதை சுட்டிக்காட்டினார்கள். எனது இயக்கம் கட்சியாக மாறினாலும் பதவிக்காக, பணத்திற்காக தவறு செய்யமாட்டார்கள். நான் கண் மூடும் வரை ஊழல் நடக்காது. அப்படி செய்தால் அவர்களை எதிர்த்து போராட்டம் நடத்துவேன் என்று பதிலளித்தார்.

சாதிவாதம்,மதவாதத்தை எதிர்க்கிறேன் என்று கூறிக்கொண்டு மதவாத அமைப்பான பாஜகவின் நரேந்திரமோடியை ஏன் ஆதரிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, பாஜக வகுப்புவாதத்தில் இருந்து விலக வேண்டும் என்றும், இந்து கோஷத்தில் இருந்து இந்தியன் என்ற கோஷத்திற்கு மாறவேண்டும் என்று விரும்புகிறேன் என்று தமிழருவி மணியன் கூறினார்.
- ப.கவிதா குமார்

No comments:

Post a Comment