Tuesday, November 18, 2014

துரோகம் செய்த ஆர்.எஸ்.எஸ் – சு.சாமி குற்றச்சாட்டு





அவசர நிலை காலத்தின் இருபத்தி ஐந்தாவது ஆண்டை அனுசரிக்கும் விதத்தில் கூட்டங்கள் நடத்தப் போவதாக பாஜக சொல்லியிருப்பது கேலிக் கூத்து, நல்ல நகைச்சுவை நாடகம்.

1975-77 காலத்தில் பெரும்பாலான பாஜக/ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அவசர நிலைக்கு எதிரான போராட்டத்திற்கு துரோகம் செய்தார்கள்.

பூனா எறவாடா சிறையிலிருந்த அன்றைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாலாசாஹேப் தேவரஸ், இந்திரா காந்திக்கு ஏராளமான மன்னிப்புக் கடிதம் எழுதினார். ஆர்.எஸ்.எஸ் அரசுக்கு எதிரான எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாது, இருபது அம்சத் திட்டத்திற்கு ஆதரவாக பாடுபடும் என்றும் அவர் கடிதம் அனுப்பினார். ஆனால் இந்திரா காந்தி அக்கடிதங்களை கண்டு கொள்ளவில்லை.

அடல் பிஹாரி வாஜ்பாய் அனுப்பிய மன்னிப்புக் கடிதங்களை மட்டும் இந்திரா காந்தி ஏற்றுக் கொண்டார். அவசர நிலைக் காலத்தின் பெரும்பாலான நாட்களில் அவர் பரோலில் வெளியேதான் இருந்தார்.
அவசர நிலைக்கு எதிரான போராட்டம் எழுச்சியோடு நடக்க முக்கியமான காரணம் 78 வயதான மொரார்ஜி தேசாயும் பழுதடைந்த கிட்னியோடு ஜஸ்லோக் மருத்துவ மனையில் இருந்த ஜெயபிரகாஷ் நாராயணனுமே. தனிமைச் சிறையில் இருந்த மொரார்ஜி தேசாய் நன்னடைத்தைக்கு உறுதி கூறினால் அவரை விடுவிக்க தயார் என ஒரு தூதர் மூலம் இந்திரா தகவல் அனுப்பினார். சிறையிலிருந்து வெளிவந்தால் மறு கணமே அவசர நிலைக்கு எதிராக போராடுவேன் என அவர் சொன்னார். உங்கள் வயதை கணக்கில் கொள்ளுங்கள் என்று அவரது மருமகள் பத்மா கதறிய போது, “விடுதலையாவதை விட இறந்து போவது மேல்” என்றார் அவர்.

ஏராளமான அன்றைய ஜன சங்கத்து ஆட்களும் தாங்கள் ஒழுங்காக நடந்து கொள்வோம் என்று உறுதி மொழி அளித்து விட்டு வெளியே வந்தார்கள். ஆர்.எஸ்.எஸ் காரரான மாதவ்ராவ் மூலே மட்டும் என்னை ஆதரித்தார். நான் தலைமறைவாக இருக்க உதவிகள் செய்தார். ஒரு சரணாகதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆர்.எஸ்.எஸ் தயாராகி விட்டது என்று கண்ணீர் மல்கக் கூறிய அவர் என்னை வெளிநாட்டுக்கு தப்பி விடச் சொன்னார்.
1975 -77 காலகட்டத்தை விட இப்போதைய காலகட்டத்தில்தான் ஜனநாயகத்திற்கு ஆபத்து அதிகமாக இருக்கிறது. ஒரு பாசிஸ அமைப்பின் கையில் ஆட்சி இருக்கிறது. பாதுகாப்பற்ற மாற்று மதத்தினரை கொன்று குவிக்கக் கூடிய பொறுக்கிகளின் அமைப்புக்களை வைத்திருக்கிறார்கள்.

இது அரசியல் தரகர் சுப்ரமணிய சுவாமி 13.06.2000 அன்று ஹிந்து நாளிதழில் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள். அப்போது பிரதமராக இருந்தது அடல் பிஹாரி வாஜ்பாய் என்பதை நினைவில் கொள்க.

மொத்தத்தில் சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த ஆர்.எஸ்.எஸ் அவசர நிலைக் காலத்திலும் துரோகம் இழைத்திருக்கிறது. ஆனால் பாவம் மூளைச் சலவை செய்யப்பட்ட  சில அப்பாவித் தொண்டர்கள் ஆர்.எஸ்.எஸ் ஒரு தேச பக்த அமைப்பு என்று இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். 

அக்கட்டுரையை அனுப்பிய பத்திரிக்கையாளர் 
தோழர் விமலாவித்யா  அவர்களுக்கு நன்றி

No comments:

Post a Comment