Tuesday, January 27, 2015

டீ மட்டுமா கொடுத்தாரு மோடி? ஒபாமா கையை கழுவி விட்டாரே!

ஒபாமாவிற்கு மோடி டீ கலந்து கொடுத்ததைப் பற்றி பலரும் புளகாகிங்கதம்  அடைந்துள்ளனர். ஆனால் ஒபாமாவின் கையை கழுவி விட்டதைப் பற்றி பெரும்பாலானவர்கள் கவலைப்படவில்லை.

 

ஆம்.

அமெரிக்க அணு மின் உலைக் கம்பெனிகள் இந்தியாவில் அமைக்கவுள்ள அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு தர வேண்டியதில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளாரே, அதை வேறு எப்படிச் சொல்வது.

இருபது வருடங்களாக அமெரிக்காவில் எந்த அணு உலையும் அமைக்காத நிறுவனங்களின் தொழில் நுட்பம் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பது ஊரறிந்த ரகசியம். ஆகவேதான் இழப்பீடு தொடர்பான ஷரத்தை நீக்க வேண்டும் என்பதில் அவர்கள் அவ்வளவு கறாராக இருந்தார்கள். மோடிக்கு ஒபாமா தன்னை புகழ்ந்தால் போதும், மக்களைப் பற்றி என்ன கவலை?

இதிலே இன்னொரு கொடுமையும் இருக்கிறது.

இழப்பீடு தருவது பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் தலையில் விடியப் போகிறது. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அன்னிய நேரடி முதலீட்டு அளவை உயர்த்தினால் கோடிக்கணக்கான பில்லியன் டாலர் குவியும், காப்பீட்டுத் துறையே அடியோடு மாறிப் போகும் என்று  ஜனநாயக விரோதமாக அவசரச் சட்டம் கொண்டு வந்தார்களே, அதில் ஏதாவது ஒரு பன்னாட்டு இன்சூரன்ஸ் கம்பெனி இந்த சுமையை ஏற்க வேண்டியதுதானே?

ஒவ்வொரு நட்வடிக்கையிலும் தேசத்திற்கு துரோகம் செய்வது என்பது மோடியால் மட்டுமே முடியும்.

டீ விற்பது ஒரு தொழில். அது சட்ட பூர்வமானது. உழைப்பின் ஒரு பகுதி.

ஆனால்  தேசத்தை விற்பதை என்னவென்று சொல்வது?
 

1 comment:

  1. இந்த அழகில், மோடி பேசினார். தடை நீங்கியது.. என்று தலைப்பு செய்திகள் போடும் லட்சணத்தை எங்கு போய் சொல்வது!

    ReplyDelete