Friday, January 30, 2015

காந்திகளை உருவாக்குவோம்



 
ஆயிரமாயிரம் அரக்கர்கள்
ஒரு துளி ரத்தத்திலிருந்து
முளைத்துக் கொண்டேயிருக்கும்
புராணக்கதைகள் போல
எண்ணற்ற கோட்சேக்கள்
உதித்துக் கொண்டிருக்கிறார்கள்,
காந்தியடிகளை மீண்டும் மீண்டும்
கொன்று கொண்டே இருக்க.

கொடியவர்களின் தோட்டாக்களால்
நெஞ்சை மட்டும்தான் பிளக்க முடியும்.
நெஞ்சின் உறுதியை அல்ல.

வறியவர்களின் தேசமாய்
இந்தியா இருக்கலாம்,
வெறியர்களின் தேசமாய் அல்ல.

காந்தி சாம்பலாய்
காற்றில் கறைந்து
ஆண்டுகள் பல ஆன பின்பும்
அவர் உரைத்த
மதச் சார்பின்மை
ஆட்சியாளர்களின்
தொண்டையில் சிக்கிய
நெருஞ்சி முள்ளாய்
உறுத்திக் கொண்டே இருக்கிறது.

கோட்சேக்கள் உலவும்
தேசத்தில் எண்ணற்ற
காந்திகளையும் படைப்போம் நாம்.

1 comment:

  1. எண்ணற்ற
    காந்திகளையும் படைப்போம் நாம்.

    ReplyDelete