Wednesday, March 11, 2015

தொலைக்காட்சியை அடித்து நொறுக்கி விட்டால்?????????




புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலையத்தை அடித்து நொறுக்கி அயோக்கியத்தனம் செய்து விட்டால் "தாலி" பற்றிய விவாதத்தை தடுத்து விடலாம் என்று அராஜகத்தில் ஈடுபட்ட காவிக்கூட்டமே, இப்போது அழுத்தமான விவாதம் பொது வெளியில் நடைபெறுகிறதே, என்ன செய்யப் போகின்றீர்கள்?

ஒவ்வொரு வீடாகப் போய் பத்திரிக்கைகளை கைப்பற்றப் போகிறீர்களா? இல்லை ஒவ்வொரு முகநூல் முகவரிக்கும் போய் அடாவடி செய்யப் போகிறீர்களா?

ஒருவேளை நீங்கள் எல்லாம் அறிவு உடையவர்களாக இருந்தால், பண்பு, நாகரீகம் எல்லாம் உங்களிடம் ஒட்டிக் கொண்டிருந்தால் கீழேயுள்ள கட்டுரைக்கு பதில் சொல்லுங்கள்.

விவாதிக்க தயாரா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் தீக்கதிர் நாளிதழின் பொறுப்பாசிரியருமான தோழர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்களின் கட்டுரையை படியுங்கள்



தாலி-விவாதம் தொடங்கட்டும்...!
--------------------------
---------------------------

 
 மதுக்கூர் இராமலிங்கம்
--------------------------
-----------------

சர்வதேச மகளிர் தினத்தன்று `தாலி பெண்களை பெருமைப்படுத்துகிறதா? சிறுமைப்படுத்துகிறதா?’ என்ற தலைப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது. இதற்கான முன்னோட்டம் வெளியான நிலையில், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் பரிவாரத்தை சேர்ந்தவர்கள் அந்த தொலைக்காட்சி நிலையத்திற்கு படையெடுத்தனர். வாசலில் நின்றிருந்த ஒளிப்பதிவாளரை அடித்து நொறுக்கியதோடு, விலை உயர்ந்தஒளிப்பதிவு சாதனத்தையும் நாசம் செய்தனர்.

தாலி இந்துக்களின் அடையாளம் என்று கூறி இந்த விவாதத்தை நடத்தக்கூடாது என்று காலித்தனத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பெண் செய்தியாளர் ஒருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதுதான் இவர்களின் அடையாளம்.அந்த விவாதம் ஒளிபரப்பாவதற்கு முன்பே மதவெறி, சாதிவெறி தலைக்கேறி ருத்ரதாண்டவம் ஆடி முடித்துள்ளனர். கருத்துரிமைக்கு எதிராக இந்த வலதுசாரி பிற்போக்கு கும்பல் தொடர்ந்து கட்டாரி வீசி வருகிறது.

அதன் தொடர்ச்சியே இது.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தனது அறிக்கையில் பொருத்தமாக குறிப்பிட்டுள்ளதுபோல தாலி குறித்து விவாதிக்கவே கூடாது என்பதுதான் இவர்களது நிலை. விவாதித்தால் அதன் புனிதம் கெட்டுவிடுமாம். ‘எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்ற வள்ளுவ நெறியே முற்போக்கு தமிழ் மரபு. அதன்படி தாலி குறித்து கொஞ்சம் விசாரிக்கலாம்.தாக்குதல் நடத்திய மூடர்கள் நினைப்பது போல தாலி என்பது திருமணத்தின் போது மணமகன், மணமகள் கழுத்தில் கட்டுவது மட்டுமல்ல. தமிழ் இலக்கியங்களின் வழி சிந்தித்தால் தாலி என்பது ஒரு பொதுவான அணிகலனே ஆகும்.

இன்னும் சொல்லப்போனால் பெண்களை விட ஆண்களோடு அதிகம் தொடர்பு டையதுதான் தாலி. பெற்றோர்கள் சிறுவர்களுக்கு ஐம்படைத் தாலி அணிவிக்கும் வழக்கம் இருந்துள்ளது. இதற்கான குறிப்புகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன. சங்கு, சக்கரம், வால், வில், தண்டு என ஐந்துவிதமான படைக்கருவிகளை செய்து அதை ஒரு கயிற்றில் தொடுத்து ஐம்படைத் தாலி என்ற பெயரில் சிறுவர்களுக்கு அணிவிக்கும் பழக்கம் இருந்ததாக புறநானூறு 77ம் பாட்டின் 7ம் வரியிலும், அகநானூறு 54ம் பாட்டின் 18ம் வரியிலும், திணைமாலைநூற்றி ஐம்பதில் 66ம் பாட்டில் 3வது வரியிலும், மணிமேகலையின் மூன்றாம் காதையில் 138ம் வரியிலும், கலிங்கத்துப்பரணி யில் 244வது பாட்டிலும் கூறப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்த ஐம்படைத் தாலி அகற்றப்பட்டது. புறநானூறு 77வது பாட்டில் போர்க்களத்திற்கு வந்தவனைப் பார்த்து இவன் இன்னும் ஐம்படைத் தாலியை அகற்றாத சிறுவனாக இருக்கிறானே என்று கூறப்பட் டுள்ளது. ஆனால் இன்றைக்கு இந்தப்பழக்கம் வழக்கொழிந்துவிட்டது.தாலி என்கிற சொல்லே பனை ஓலை என்கிற வார்த்தையிலிருந்துதான் வந்திருக்கிறது. தாலமாகிய பனை ஓலையினால் செய்யப்பட்டதே தாலி. இன்னார் மகனுக்கு இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நாளில் இந்த நேரத்தில் கல்யாணம் செய்து கொள்வதாக பனை ஓலையில் எழுதி அதை மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக குறிப்புகள் உள்ளன. இப்போதும் கூட முகூர்த்த ஓலைஎழுதுவது என்பது சில பகுதிகளில் உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தம் இப்போது தாளில்தான் எழுதப்படுகிறது.

பழம்பெருமையை பாதுகாப்பதாக கூறிக்கொள்பவர்கள் இப்போது பனை ஓலையையா கட்டிக் கொள்கிறார்கள். பல திருமணங்களில் பொன்னில் தாலி செய்யப்படுவதில்லை. ஒரு விரலி மஞ்சளை கயிற்றில் கட்டுகிற பழக்கமும் சிலரிடம் உள்ளது.பழந்தமிழர் மரபில் தாலிகட்டும் பழக்கம் உண்டா என்று 1954ம் ஆண்டில் ஒரு பெரிய விவாதமே நடந்துள்ளது. இதைத் துவக்கி வைத்தவர் கவிஞர்கண்ணதாசன். இந்த விவாதத்தில் ம.பொ.சி. மட்டும்தான் பழங்காலத்திலேயே தமிழர்களிடம் தாலி கட்டும் பழக்கம் இருந்தது என்று கூறினார்.வரலாற்று அறிஞர் அப்பாதுரையார், கி.பி.10ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தாலி குறித்த பேச்சே இல்லை என்றும், பெரும் புலவர் மா.ராஜமாணிக்கனார் பழந்தமிழர்களிடம் தாலி என்ற வழக்கு இல்லவே இல்லை என்றும் உறுதிபடக் கூறினர்.

தமிழ்நாட்டில் கிடைத்த தொல்பொருள்களில் தாலி இல்லவே இல்லை. சங்க இலக்கிய பாடல்களில் பெண்கள் கழுத்தில் கட்டும் தாலி குறித்தகுறிப்பு எதுவும் இல்லை. சிலப்பதிகாரத்தில்தான் இதற்கான குறிப்பு வருகிறது. சிலப்பதிகாரத்தின் மங்கல வாழ்த்துப் பாடலில் மங்கல அணி என்கிற வார்த்தைவருகிறது. தாலி ஒருபுறமிருக்கட்டும் திருமண முறை காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட மக்கள் ஒருகாலத்தில் இரவில்தான் திருமணம் செய்துவந்தனர். இன்னமும்கூட இந்த வழக்கம் சில பகுதிகளில் உள்ளது. பழங்குடி மக்களாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற திராவிட தொல்குடி மக்களிடையே தாலிகட்டும் பழக்கம் இப்போதும் கூட இல்லை.

ஆனால் ஆர்எஸ்எஸ் கணக்குப்படி இவர்களும் இந்துக்கள்தான். நீலகிரி மாவட்டத்தில் வாழும் தொதவர், கோட்டர் இன மக்களிடையே தாலி கட்டும் பழக்கம் இல்லை. தெலுங்குபேசும் தொல்குடி மக்களான ஏட்டர், ஏனாதிகள், ஏறக்கொல்லர், மலையாளம் பேசும் தொல்குடி மக்களான செருமார், முக்குருவர், பலியர், அருணடர் போன்றோரிடத்தும், கன்னடம் பேசும் காப்பிலியர், கொரகர், காடுகுரும்பர், மொகயர் போன்ற மக்களிடமும் தாலிகட்டும் வழக்கம் இல்லை. தமிழ் மக்கள் ஒரு காலத்தில் திருமணம் கூட செய்துகொள்ளாமல் குடும்பமாக வாழ்ந்துள்ளனர். “பொய்யும், வழுவும்தோன்றிய பின்னர், ஐயர் யாத்தனர் கரணம் என்ப” என்பது தொல்காப்பிய சூத்திரம்.

இதன் பொருள் என்னவென்றால், ஆணும், பெண்ணும் களவு அறத்தின்படி குடும்பமாக வாழ்ந்து வந்தனர். ஆடவர்கள் பெண்களை கைவிட்டு அந்தத் திருமணத்திற்கு சான்று ஏதுமில்லை என்று கூறிய நிலையில்தான் திருமணம் என்ற ஒரு ஏற்பாட்டை செய்தனர் என்பது இதன் எளிய பொருள். கணவன் இறந்துவிட்டால் இளம் மனைவி வேறொருவரை திருமணம் செய்து கொள்வது இயல்பாகவே இருந்துவந்தது. வருணாச்சிரம ஆதிக்கம் கெட்டிப்பட்ட பிறகுதான் விதவைத் திருமணம் என்பது தடை செய்யப்பட்டு, இயல்பாக மறுதிருமணம் செய்து கொள்பவர்களை அறுத்துக்கட்டுபவர்கள் என்று இழிவுபடுத்தும் போக்கு தோன்றியது. தாலி மீது புனிதத்தை ஏற்றியதில் சில தமிழ்ச்சினிமாக்களுக்கும் பெரும் பங்கு உண்டு. அது இன்றுவரை தொடர்கிறது.

பி.வாசு இயக்கத்தில் வெளிவந்த ‘சின்னத்தம்பி’ என்ற திரைப்படத்தில் கதாநாயகன், தூளியிலே ஆடவந்த வானத்து வெண்ணிலவே, ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆனிமுத்தே... என்றெல்லாம் பாட்டுக்கட்டி பாடுவான். ஆனால் அவனுக்கு தாலி என்றால் என்னவென்றே தெரியாதாம். கதாநாயகி நிர்ப்பந்தமாக அவன் மூலம் தாலிகட்டிக்கொள்ள அவன் அப்பாவியாக தனது தாயிடம் வந்து தாலிக்குவிளக்கம் கேட்பது போல அந்தப்படம் செல்லும். அறியாமல் தாலி கட்டிவிட்டால்கூட அவள் உனக்கு மனைவியாகி விட்டாள் என்பதாக அந்தப்படம் பேசும். கே.பாக்யராஜ் இயக்கத்தில் ‘அந்த ஏழு நாட்கள்’ என்றொரு படம். காதலனிடமிருந்து காதலியைப் பிரித்து வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள்.

கணவனே முன்வந்து காதலனுடன் காதலியை சேர்த்துவைக்க முயலும் போது, கணவன் கட்டிய தாலியை கழற்றிக் கொடுத்துவிட்டு வருமாறு காதலன் கூறுவான். அவள் தாலியைக் கழற்ற முயலும்போது வானம் இடி இடிக்க, பூமி கிடுகிடுக்க கடைசியில் விரும்பிய காதலனைவிட கணவன் கட்டிய கயிறே பெரிதென்று கதாநாயகி முடிவெடுப்பதாக அந்தப்படம் முடியும்.இராம.நாராயணன் இயக்கிய படம் ஒன்று. அதில் கதாநாயகி தினந்தோறும் பாம்புக்கு பால் ஊற்றுவாள். அவரது கணவனோ சாராயம் குடித்துவிட்டு மனைவியை அடித்து நொறுக்குவார்.

இதை எப்படியோ தெரிந்துகொண்ட பாம்பு கணவனை கொத்த வரும். அப்போது மனைவி பால் கொண்டு வருவாள். குனியும் போது பாம்பு கண்ணில் கதாநாயகியின் தாலி தெரியும். உடனே யோசித்த பாம்பு தவறாக முடிவெடுத்துவிட்டோமே கணவனைக் கொன்றுவிட்டால் நம்முடைய பக்தை தாலியை இழந்துவிடுவாரே என்று நடுங்கி திரும்பச் சென்றுவிடும். இப்படி மனிதர்கள் மத்தியில் மட்டுமின்றி பாம்புக்கும் தாலியின் அருமையை உணர்த்தியிருப்பார் இயக்குநர். ஒரு படத்தில் கணவன் நீதிமன்றத்தில் விசாரணைக் கூண்டில் நிற்க மனைவி கோவிலில் ‘தாலி வரம் கேட்டுவந்தேன் தாயம்மா’ என்று உருக்கமாக பாடுவார். கடைசியில் அம்பாளின் அருளாள் அவரது தாலி தப்பிக்கும். தற்போது பெங்களூர் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையையும், தமிழகத்தில் ஆளும் கட்சியினர் நடத்திவரும் பல்வேறு வழிபாட்டையும் போட்டு இந்த இடத்தில் குழப்பிக்கொள்ளக்கூடாது. அண்மையில் காலமான ஆர்.சி.சக்தி, எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய கதை ஒன்றை அடிப்படையாக வைத்து‘சிறை’ என்ற படத்தை எடுத்திருந்தார். கயவன் ஒருவனால் சீரழிக்கப்பட்ட பெண்ணை கணவன் ஒதுக்கி வைத்துவிடுவான். ஆனால் அந்தப்பெண்ணை சீரழித்தவன் மனம் திருந்தி கணவனோடு மனைவியை சேர்த்துவைக்க துடிப்பான். இதனிடையே அவனுக்கு கைகால்கள் விளங்காமல் போய்விடும். மனைவி நிரபராதி என்று அறிந்து கணவன் திரும்ப வரும்போது அந்தப்பெண்ணை சீரழித்தவனின் இறுதி ஊர்வலம் சென்று கொண்டிருக்கும். அந்தப்படத்தின் இறுதிக்காட்சியில் என்னை அனாதையாக விட்டுவிட்டு ஓடிய உனக்கு தாலி கட்டிய மனைவியாக இருப்பதைவிட, என்னைக் காப்பாற்றிய அவனுக்கு விதவையாக இருந்துவிடுகிறேன் என்று அந்தப்பெண் தாலியை கழற்றி வீசுவாள். அந்தத் தாலி ஒரு துப்பாக்கியில் போய் விழும். இப்படி அபூர்வமாக ஒன்றிரண்டு படங்கள்தான் வந்துள்ளன. 
புரோகிதர் வைத்து, மந்திரம் ஓதி தாலி கட்டாமல் நடைபெறும் திருமணங்கள் சட்டப்பூர்வமாக செல்லாது என்று 1952ல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சுயமரியாதை திருமணம் செய்து கொண்டவர்கள் சட்டவிரோதமாக திருமணம் செய்து கொண்டவர்கள்தான். அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும் சட்டவிரோதமாக பிறந்தவைதான் என்பது அந்தத் தீர்ப்பின் சாரம். 1967ல் அண்ணா ஆட்சிக்கு வந்தபோது சுயமரியாதை திருமணம் சட்டப்பூர்வமாக செல்லும் என சட்டம் இயற்றினார். அந்த மசோதாவில் புரோகிதம் இல்லாமல் தாலி கட்டும் திருமணங்கள் செல்லும் என்று இருந்ததை, புரோகிதம் இல்லாமல் மட்டுமல்ல தாலி கட்டிக்கொள்ளாமலும் நடைபெறும் திருமணங்களும் செல்லத்தக்கவை என்று பெரியார் திருத்தம் கொடுத்தார். தாலி பெண்களின் அடையாளம் என்று ஆர்எஸ்எஸ் வகையறா கூறுகிறது. ஒரு காலத்தில் வாலிபர்கள் புலி மற்றும் சிங்கத்தை வேட்டையாடி அவற்றின் பல்லை எடுத்து கோர்த்துதான் தாலி கட்டியுள்ளனர்.

எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இதேபோன்று புலியை வேட்டையாடி அதன் பல்லை தாலியாக கட்டித்தான் திருமணம் செய்து கொள்வதற்கு இவர்கள் இப்போது கூரத்தாயாரா?உண்மையில் இவர்களுக்கு பெண்கள் மீது மரியாதை இல்லை. மாறாகமனுவின் பெயரால் பெண்களை கட்டிவைத்திருக்கும் முளைக்கயிறு அறுந்துவிடக்கூடாது என்பதுதான் இவர்களது பதைபதைப்பு.தாலிதான் பெண்களுக்கு வேலி என்று வாதிடும் இவர்களுக்காகவே 1960ம் ஆண்டிலேயே மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை ஒரு பாட்டு எழுதி வைத்திருக்கிறார். 

‘தாலி போட்டுக்கிட்டா இரண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும்- 
ஒலகம் புதுசா மாறும்போது, பழைய மொறையை மாத்திக்கணும்.’

நன்றி - தீக்கதிர் 11.03.2015


2 comments:

  1. நல்ல பதிவு தான் தோழர். ஆனால், ஒருவரின் நம்பிக்கைக்கு எதிராக பேசுவதில் பயன் என்ன? தற்போதய இந்துக்களுக்கு , கி மு கதையெல்லாம் தெரியாது. அதைபற்றிய பாடங்களும் இல்லை, சொல்லுவாரும் இல்லை. பிறந்த குழந்தை பால் குடிக்க மறக்கவைக்க பள்ளிக்கூடம் அனுப்பிவிடுகிறோம் . அதுவே 10 வருடத்தில் பீர் குடித்து பெத்த அம்மா அப்பாவ மறந்து உலகம் மறந்து தன்னை மறந்து வாழுது. எல்லா சேனலும் உருப்படியா எதனா பேசாம தாலி தேவையான்னு பேசி ரேட்டிங்க உயர்த்த பார்க்குது. நீங்க என்னன்னா இத சீரியஸ்ஸா எடுத்துகிட்டு வரலாறு சொல்றிங்க !

    ReplyDelete
  2. தாலி ஒரு வேலி(defensive wall) என்று சிலர் சொல்லிக்கொண்டு திரியும் நிலையில் திரு. ராமலிங்கம் அவர்களின் அருமையான தகவல்கள்.

    ReplyDelete