Monday, March 16, 2015

ஒரு பெண் முதல்வரின் ஆட்சியில்தான் இப்படி

சூஸெட்டின் கதை

 




கடந்த 2012 பிப்ரவரியில் கொல்கத்தாவிலுள்ள பூங்கா தெருவில் ஓடும்கார் ஒன்றில் வைத்து சூஸெட் ஜோர்டான் என்ற பெண் 5 பேரால் கும்பல்பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார்.இதுபோன்று ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று அன்றைக்கு திரிணாமுல்லும், அதன் முதல்வர் மம்தா பானர்ஜியும் மறுப்பு அறிக்கை விடுத்தனர். 

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சூஸெட், வெளிப்படையாகவே, தான்கும்பல் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, தனக்கு நீதி வேண்டும்என்று போராடினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து சூஸெட் ஜோர்டானுக்கு நீதி கோரி பேரணிகள் - ஆர்ப்பாட்டங்கள் நடத்தின.இதனால் நெருக்கடிக்குள்ளான திரிணாமுல் அரசு, 5 குற்றவாளிகளில் 3 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. மீதி 2 பேர் தலைமறைவாகியுள்ளனர்.இந்நிலையில் சூஸெட் ஜோர்டான், உடல்நிலை பாதிக்கப்பட்டு மூளைக்காய்ச்சலும் சேர்ந்து கொண்டதால் அவர் கடந்த 13ம்தேதியன்று மரணமடைந்துவிட்டார்.

இதற்குப் பின்னரும் தலைமறைவாகியுள்ள 2 பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை.இது தொடர்பாக ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்தது.“கொல்கத்தாவில் பூங்கா தெருவில் நடந்த கும்பல் பாலியல் வல்லுறவு குற்றச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரே சூஸெட் ஜோர்டான். அந்த நேரத்தில் மேற்குவங்க முதல்வர் ஒரு மோசமான அறிக்கை அளித்தார். இந்த சம்பவமே இட்டுகட்டப்பட்ட கதை என்றார். அந்தக் குற்றம் குறித்து விசாரணை நடத்தி வந்த ஒரு பெண் போலீஸ் அதிகாரியை இடமாற்றம் செய்தார்.
அந்த அதிகாரி தைரியமாக மம்தாவை எதிர்த்து கேள்வி கேட்டார் என்பதற்காகவே அவரின் இடமாற்றம் நிகழ்ந்தது. இன்னொரு திரிணாமுல் எம்.பி., வெளிப்படையாகவும் கீழ்த்தரமான முறையிலும், “இது பாலியல் வல்லுறவு அல்ல; அந்தப் பெண்ணுக்கும் அவரது வாடிக்கையாளருக்கும் இடையில் ஏற்பட்ட புரிதல் பிரச்சனை” என்றார். பெண்கள் இயக்கத்தின் ஆர்ப்பாட்டங்கள் நடந்தும் அரசு திட்டமிட்ட செயல்பாடுகள் மூலம் இந்த விசாரணையை சீர்குலைக்கவும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியை மறுக்கவும் முயற்சித்தது. தன்னை இழிவுபடுத்தும் கீழ்த்தரமானமுயற்சிகள் மற்றும் குற்றவாளிகளை பாதுகாப்பதற்கான முயற்சிகள் ஆகியவற்றை எதிர்த்து சூஸெட் ஊக்கத்துடன் நின்றார்.

அவர் வெளிப்படையாகவே தன்னை கீழ்க்கண்ட வார்த்தைகளைக் கூறி அடையாளப்படுத்திக் கொண்டார்.“பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்பட்ட பெண் என்ற முறையில் நான் ஏன்வெட்கப்பட வேண்டும்? குற்றவாளிகள்தான் தங்களது முகங்களை மறைத்துக் கொள்ள வேண்டும்.”இப்படி பேசியது மட்டுமல்ல... செயலிலும் தனது ஊக்கத்தை காட்டினார் சூஸெட். மேற்குவங்கத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளை எதிர்த்து நடைபெற்ற பேரணிகள், ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டார்.

பெண்கள் இயக்கத்தில் அவர் ஒரு போராளியாக மிளிர்ந்தார். இத்தகைய மிகத் துணிச்சலான பெண், கடந்த 13ம்தேதியன்று மூளைக் காய்ச்சலினால் ஏற்பட்ட கடும் உடல்நல பாதிப்பால் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டுவிட்டார். அவர் நீதி கிடைக்காமலேயே மறைந்துவிட்டார். இன்னும் அரசு முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை. நீதிமன்ற விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. சூஸெட் எனும் இளம் பெண் போராளியின் காலப்பொருத்தமற்ற மரணத்திற்காக இரங்கல் தெரிவிக்கும் அதே வேளையில், பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் நமக்கு அவர் ஒரு முன்னுதாரணமாக இருந்ததற்காக அவரைப் பாராட்டுகிறோம். குற்றவாளிகள் பிடிபடவும் அவர்கள் தண்டிக்கப்படுவதற்கும் உறுதி ஏற்கிறோம் என மாதர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் மாலினி பட்டாச்சார்யா, பொதுச் செயலாளர் ஜக்மதி சங்வான் ஆகியோர் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

நன்றி - தீக்கதிர் 16.03.2015

No comments:

Post a Comment