Friday, July 10, 2015

வேலூர் கோட்டையில் உயர்ந்த புலிக்கொடி.



வெல்ல முடியாதவர்கள் என எவருமில்லை


இந்திய வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள். இருநூற்று ஒன்பது ஆண்டுகள் முன்பு இந்த நாளில்தான் வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில் முதல் சுதந்திரப் போர் நடந்தது. வெயிலூர் என இன்று சிலர் கிண்டல் செய்கின்றனரே, அந்த வேலூர்தான் இந்திய சுதந்திரத்தின் முதல் முழக்கம் எழுப்பப்பட்டது என்பதை எத்தனை பேர் அறிவார்?

இந்த நாளில் ஆம் ஜூலை மாதம் பத்தாம் தேதி,

இருநூற்று ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆம் 1806 ம் வருடம்,

நடந்த சம்பவம் அது. இந்தியராய்ப் பிறந்தவர், தமிழராய் வாழ்பவர் கண்டிப்பாய் அறிந்து கொள்ள வேண்டிய உணர்வூட்டும் நிகழ்வு அது.

வாருங்கள், கொஞ்சம் வேலூர் கோட்டை வரை சென்று வரலாம்.

பிரிட்டிஷ் ராணுவத்தின் நான்கு படைப் பிரிவுகள் வேலூரில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்திய வீரர்களும் பிரிட்டிஷ் வீரர்களும் இணைந்த படை அது. சம வேலைக்கு சம ஊதியம் என்பது இப்போதே இல்லாத போது அந்தக் காலத்தில் எப்படி இருக்கும்! பிரிட்டிஷ் வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே ஊதியத்தில், சலுகைகளில், உரிமைகளில் என எல்லாவற்றிலும் ஏராளமான வேறுபாடுகள் இருந்தன. இழிவாக நடத்தப்பட்டார்கள். காரணங்கள் தேடித் தேடி தண்டனை கொடுக்கப்பட்டார்கள்.

எத்தனை நாட்கள் குமுறல்கள் மனதிற்குள்ளேயே அடங்கிக் கிடக்கும்? உணர்வுள்ள வீரர்கள் அடிமைத்தளையை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்? பிரிட்டிஷ் படையிலிருந்த இந்திய வீரர்கள் இந்து முஸ்லீம் என்ற வேறுபாடு இல்லாமல் ஒன்றுபட்டார்கள். நம்மை அடக்கியாளும் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு பாடம் கற்றுக் கொடுப்பது என்று முடிவு செய்தார்கள். வேலூர் கோட்டையில் ராணுவமும் இருந்தது. ஒரு மாளிகையும் சிறையாக மாற்றப்பட்டு அங்கேதான் பிரிட்டிஷாரை அச்சுறுத்திய மாவீரன்  திப்பு சுல்தானின் வாரிசுகளும் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள்.

சிறைக்குள்ளேயே திப்பு சுல்தானின் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தனர். நாள் குறிக்கப்பட்டது. தாக்குதலுக்கு தயாராக இருந்தார்கள். ஒற்றனோ இல்லை உள்ளேயே இருந்து காட்டிக் கொடுத்த துரோகியோ, யார் மூலமாகவோ செய்தி பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குச் சென்று விட்டது.

அதனால் திட்டமிட்ட நாளுக்கு முதல் நாளே இந்திய வீரர்கள் பிரிட்டிஷ் வீரர்களையும் தாக்கத் தொடங்கினர். யாருக்கு இத்தனை நாள் சல்யூட் அடித்துக் கொண்டிருந்தார்களோ, யாருடைய உத்தரவுக்கு அடிபணிந்து அடிமைச் சேவகம் செய்து கொண்டிருந்தார்களோ, அவர்களை அந்த பிரிட்டிஷ் அதிகாரிகளை தாக்கினார்கள். முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே வெட்டிக்கொள்ளும் என்று சொன்னார் மாமேதை காரல் மார்க்ஸ். பிரிட்டிஷ் படையின் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் அவர்களையே குறி பார்த்து சுட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட வெள்ளை அதிகாரிகளும் சிப்பாய்களும் இறந்து போயினர். வேலூர் கோட்டை இந்திய வீரர்களின் கைகளுக்கு, கட்டுப்பாட்டிற்கு வந்தது.

இங்கிலாந்து சாம்ராஜ்யத்தின் யூனியன் ஜாக் கொடி வேலூர் கோட்டையின் கொத்தளத்திலிருந்து கீழே இறக்கப்பட்டது. இந்திய சிப்பாய்கள் அடைந்த வெற்றியின் அடையாளமாக திப்பு சுல்தானின் புலிக் கொடி அங்கே ஏற்றப் பட்டது. நினைவில் கொள்ளுங்கள். சூரிய அஸ்தமனமே கண்டிராத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்று வர்ணிக்கப்பட்ட இங்கிலாந்து ஏகாதிபத்தியத்தின் கொடி முதலில் கீழிறக்கப்பட்டது வேலூரில்தான். காலனியாதிக்கத்தின் அஸ்தமனத்திற்கு தொடக்கவுரை எழுதப்பட்டது வேலூர் கோட்டையில்தான்.

துரதிர்ஷடவசமாக இந்த வெற்றியும் மகிழ்ச்சியும் நீடித்தது ஒன்பது மணி நேரம்தான். அருகிலிருந்த ஆற்காட்டிலே குவிக்கப்பட்டிருந்த பெரும்படை வேலூர் நோக்கி விரைந்தது. கர்னல் கில்லஸ்பி என்ற தளபதியின் தலைமையில் வந்த படையின் முன்னே இந்திய சிப்பாய்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. நானூறுக்கும் மேற்பட்ட இந்திய சிப்பாய்கள் கொல்லப்பட்டார்கள். பிடிபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய சிப்பாய்களை பீரங்கிகளின் வாயில் கட்டி வெடிக்கச் செய்து சிதறடித்துக் கொன்றான் கில்லஸ்பி. வேலூர் கோட்டையைச் சுற்றி ஓடும் அகழி முழுதும் இந்திய வீரர்களின் குருதியால் சிவப்பானது. ரத்த ஆறுதான் ஓடியது.

பிரிட்டிஷ் அரசு எழுதிய வரலாறு இத்தியாகத்தை “வேலூர் சிப்பாய் கலகம்” என்றுதான் பதிவு செய்திருந்தது. சுதந்திர இந்தியாவின் அரசும் தனது ஆவணங்களில் கலகம் என்றே குறிப்பிட்டு வந்தது. “வேலூர் சிப்பாய் புரட்சி” என்றே அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்ததே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். 2006 ம் ஆண்டு வேலூர் சிப்பாய்கள் புரட்சியின் இருநூறாவது ஆண்டின் போதுதான் தமிழக அரசு அக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.

வேலூர் சிப்பாய்ப் புரட்சி இரண்டு முக்கியமான படிப்பினைகளைத் தருகிறது.

இந்திய வீரர்களின் முயற்சி தோற்றுப் போயிருக்கலாம். ஆனால் பின்னாளில் உருவான எழுச்சிக்கு இவர்கள்தான் உரமாய் இருந்தார்கள். எவராலும் தோற்கடிக்க முடியாதவர்கள் என்று கருதப்பட்ட இங்கிலாந்து ராணுவத்தையும் வெல்ல முடியும் என்று நிரூபித்தவர்கள் வேலூர் சிப்பாய்கள். இந்து சிப்பாய்களும் முஸ்லீம் சிப்பாய்களும் ஒற்றுமையாய் போராடி மத நல்லிணக்கத்திற்கு உதாரணம் படைத்தார்கள்.

இன்றுள்ள சூழலில் இந்திய சுதந்திரமும் கேள்விக்குறியாக மாற்றப்பட்டு வருகிறது. ஒரு கிழக்கிந்திய கம்பெனியின் இடத்தில் பல பன்னாட்டுக் கொள்ளைக் கம்பெனிகள். விளைவுகள் என்னவென்று தெரியாமல் கிழக்கிந்திய கம்பெனியை வணிகம் செய்ய முகலாய அரசர் ஜஹாங்கீர் அனுமதித்தார். கடைசியில் அவரது வம்சத்தின் இறுதி வாரிசு “பகதூர் ஷா” வை வெள்ளையர்கள் ரங்கூனுக்கு நாடு கடத்தினார்கள்.

ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் தெரிந்தே செய்கிறார்கள். ஆனால் அவர்கள் நாடு கடத்தப்பட மாட்டார்கள். சொந்த நாட்டிலேயே அடிமைகளாக நாம்தான் மாற்றப்படுவோம்.

மத நல்லிணக்கத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலும் இப்போது உருவாகி உள்ளது. ஒற்றுமையை சிதைப்பதற்கென்றே பல விரியன் பாம்புகள் அங்கங்கே விஷம் கக்கி வருகின்றன.

சுதந்திரத்தையும் மத நல்லிணக்கத்தையும் பாதுகாப்போம். அதற்கு எதிரான சக்திகள் யாராக இருந்தாலும் அவர்களை முறியடிப்போம் என்று நாம் ஒவ்வொருவரும் சபதமெடுப்பதே இந்திய சுதந்திரத்திற்காக தங்கள் இன்னியிரை ஈந்த வேலூர் சிப்பாய்களுக்கு நாம் செய்யும் மரியாதை.

வேலூர் சிப்பாய்ப் புரட்சி வீரர்களுக்கு வீர வணக்கம்


3 comments:

  1. .வேலூர் சிப்பாய்ப் புரட்சி வீரர்களுக்கு வீர வணக்கம்

    ReplyDelete
  2. அருமையான நினைவூட்டல். புரட்சிவீரர்களுக்கு வீர வணக்கம்.

    ReplyDelete
  3. நல்ல தகவல்கள். இப்போ ஜாதி பாதுகாப்பு பேரவைகளும், இனவாதிகளும் புலி கொடி வைத்திருக்கிறார்கள்.

    ReplyDelete