Monday, July 27, 2015

ரத்த வங்கியில் இன்று




http://www.newmansu.org/uploads/1/2/8/4/12841948/9902996_orig.jpg
இன்று வெற்றிகரமாக ஐம்பத்தி நான்காவது முறையாக ரத்த தானம் செய்தேன். கடந்த முறை ரத்த தானம் செய்த போது எழுதிய பதிவு இது. இன்றும் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் அமைதியாகவே இருந்தனர். நானும் கூட. ஏனென்றால் இம்முறை என் கையிலும் ஸ்மார்ட் போன் இருந்தது.

மருத்துவரின் அழைப்பிற்காக காத்திருந்த நேரத்தில் அருகே அமர்ந்திருந்த ஒரு மாணவனோடு பேசிக் கொண்டிருந்தேன்.வேலூர் ஊரிஸ் கல்லூரியில் படிக்கும் அந்த மாணவன் பகிர்ந்து கொண்ட செய்தி மிகவும் மகிழ்ச்சியளித்தது. நண்பர்களாக ஒரு ஐம்பது மாணவர்கள் சேர்ந்து ஒரு குழுவாக செயல்படுவதாகவும் அந்த மாணவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை தவறாமல் ரத்த தானம் செய்து கொண்டு வருவதாகச் சொன்னார்.

வாரம் ஒரு முறை மருத்துவமனைக்கு வந்து ரத்தம் தேவைப்படும் நோயாளிகள் யாராவது இருக்கிறார்களா  என்று கண்டறிந்து ரத்த தானம் செய்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லி தன்னுடைய அலைபேசி எண்ணையும் கொடுத்து உங்களுக்கு தேவைப்பட்டாலும் தயங்காமல் என்னை அழையுங்கள் என்றார்.

உண்மையிலேயே மனம் மிகவும் மகிழ்ந்து போனது. நம்பிக்கையளிக்கும் அந்த இளைஞர்களுக்கு எனது பாராட்டுக்களை கைகொடுத்து தெரிவித்துக் கொண்டேன்.

இன்று கண்ட இன்னொரு காட்சி இந்தியாவின் வேலையின்மைப் பிரச்சினையை உணர்த்துவதாக இருந்தது. இரு இளம் பெண் ரத்த தானம் செய்ய வந்திருந்தார். ஏதோ ஒரு வட கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தோற்றத்திலேயே தெரிந்தது.

அந்தப் பெண்ணிற்கு அந்த மாணவர் படிவத்தை நிரப்பிக் கொடுத்தார். டார்ஜிலிங்கைச் சேர்ந்தவர் அந்தப் பெண். இங்கே யாராவது நோயாளியோடு வந்துள்ளீர்களா என்று கேட்டதற்கு "இல்லை, இங்கே "நேச்சுரல்ஸ்" கிளையில் வேலை செய்வதாகச் சொன்னார்.

பல்லாயிரம் ரூபாய் ஊதியம் பெறும் ஐ.டி வேலை அல்ல. பத்தாயிரத்துக்கும் குறைவான ஊதியத்திற்கு பல மாநிலங்கள் தாண்டி மொழி தெரியாத ஊருக்கு வேலைக்கு வந்திருக்கிறார், கட்டுமானப் பணிக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருவது போல.

வேலைக்கு வந்த இடத்திலும் யாருக்காவது உதவலாமே என்று ரத்த தானம் செய்ய முன்வந்தது பாராட்டுக்குரிய ஒன்று.

 

 

1 comment:

  1. இன்று வெற்றிகரமாக ஐம்பத்தி நான்காவது முறையாக ரத்த தானம் செய்தேன்.///


    paarattukkal sir.

    54 en paarthathum koncham athirchiyaakathaan irukkirathu.

    ithanaal udalirkku entha thingkum erpadaatha sir?


    maanavarkalukkum antha yosanai vanthatharkku paarattukal.

    ReplyDelete