Tuesday, December 1, 2015

யார் பேசியிருப்பினும் அது அராஜகமே….





நேற்றைய மக்களவையில் அனல் பறந்தது. மோடி பிரதமராக பதவியேற்ற பின்பு நடைபெற்ற ஒரு ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் “ முகலாயர் காலத்திற்குப் பின்பு எண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவை ஆள வந்த முதல் ஹிந்து ஆட்சியாளர் மோடிதான்” என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் தோழர் முகமது சலீம் குற்றம் சுமத்தினார்.

மக்களவை அதிர்ந்து போனது. ராஜ்நாத்சிங் நடுங்கிப் போய் விட்டார். பாஜக உறுப்பினர்கள் திடுக்கிட்டுப் போனார்கள். தான் அவ்வாறு சொல்லவில்லை, அவ்வாறு சொல்பவர் உள்துறை அமைச்சராக இருக்கவே லாயக்கற்றவர் என்றும் முகமது சலீம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் புலம்பினார்.

தோழர் முகமது சலீம் அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. குற்றச்சாட்டு தன்னுடையது கிடையாது என்றும் அவுட்லுக் பத்திரிக்கையில் வந்ததைத்தான் தான் கூறினேன் என்றும் அப்படி அமைச்சர் தான் நிரபராதி என்று நிரூபிக்க விரும்பினால் அப்பத்திரிக்கை மீது வழக்கு தொடுக்கட்டும் என்று ஆணித்தரமாக கூறி விட்டார்.

பிறகு இல்லையில்லை அப்படி சொன்னது ராஜ்நாத்சிங் கிடையாது, சமீபத்தில் இறந்து போன அசோக் சிங்கால் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து சமாளித்தார்கள். இறந்து போனவர் வந்து பதில் சொல்லப் போவதில்லையே!

சொன்னது ராஜ்நாத் சிங்கா இல்லை அசோக் சிங்காலா என்பது மட்டுமல்ல பிரச்சினை. இப்படி சொல்லுவதற்கான தைரியம் எங்கே இருந்து வருகிறது? சொல், செயல், சிந்தனை எல்லாவற்றிலும் மத வெறி ஊறிப் போயுள்ள ஒரே காரணத்தாலேதான் இவ்வாறு பேச முடிகிறது! அப்படி இருப்பதுதானே இன்றைய சகிப்பின்மை பிரச்சினைக்கான மூல காரணம்! தங்களின் ஆட்சி என்ற திமிர் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

யார் பேசியிருந்தாலும் அது அராஜகத்தின் வெளிப்பாடன்றி வேறன்ன?

பின் குறிப்பு : இந்த பிரச்சினையின் மூலம் இன்னொரு கேள்வியும் எழுந்துள்ளது. அது அடுத்த பதிவில்
 

No comments:

Post a Comment