Wednesday, January 20, 2016

விஷம் அல்லது தூக்குக் கயிறு

 


தலித் மாணவர்கள் அனைவருக்கும் விஷம் கொடுத்து விடுங்கள்..!
ரோஹித் எழுதிய மற்றொரு கடிதம்



ஹைதராபாத், ஜன. 19 -
தலித் மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலையும், முன்னதாக அவர் எழுதியிருந்த உருக்கமான கடிதமும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக எழுதிய மற்றொரு கடிதமும் தற்போது வெளியாகியுள்ளது.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பி. அப்பா ராவிற்கு, தனது கைப்பட ரோஹித் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். அதில் “மாணவர்கள் சேர்க்கைக்காக பல்கலைக்கழகத்திற்கு வரும் போதே, நீங்கள் அம்பேத்கரை படிப்பதாக இருந்தால் இதை உபயோகியுங்கள் என்ற வழிகாட்டுதலுடன் தயவு செய்து 10 மில்லி கிராம் சோடியம் அசைட்டை (கொடிய விஷம்) கொடுத்து விடுங்கள்.

இதேபோல் கல்லூரி விடுதியில் தங்கும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் (பல்கலைக்கழக நிர்வாகம்) உற்ற துணையான தலைமை வார்டனிடமிருந்து நல்ல தாம்புக்கயிறையும் கொடுத்து விடுங்கள்” என்று மிகுந்த மன வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.தானும் தன்னுடைய நண்பர்களும் ஏற்கனவே தலித் சுயமரியாதை இயக்கத்தில் உறுப்பினர்களாக இருப்பதால், தங்களை அவ்வளவு எளிதாக அதிலிருந்து வெளியேற இயலாதென்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ள ரோஹித், “மேன்மை பொருந்தியவரே, தயவு செய்து என்னைப் போன்ற மாணவர்களைக் கருணைக் கொலை செய்து விடுங்கள்” என்றும் மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தை எழுதிய மூன்று நாட்களுக்கு பிறகு, டிசம்பர் 21-ஆம் தேதி ரோஹித் உள்ளிட்ட அம்பேத்கர் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 5 மாணவர்களையும் விடுதி, உணவகம், நூலகம் என்று மாணவர்கள் பயன்படுத்தும் பொதுவெளி எதையும் பயன்படுத்தக் கூடாது என்று பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - தீக்கதிர் 20.01.2016

No comments:

Post a Comment