Friday, October 7, 2016

இவரும் தேசத்துரோகிதானா மிஸ்டர் மதி?

 06.10.2017 தீக்கதிர் நாளிதழில் வெளியான திரு கோபால கிருஷ்ண காந்தி அவர்களின் கட்டுரை இது. போர் வேண்டாம் என்று சொல்கிற இவரையும் தின மணி மதி தேசத்துரோகி என்றுதான் அழைப்பாரோ? அவர் மகாத்மா காந்தி மற்றும் ராஜாஜி ஆகியோரின் பேரனாக இருந்தாலும் . . .

போரும் அமைதியும்!
 
கோபாலகிருஷ்ண காந்தி





நம்முடைய அரசியல் சட்டத்துக்கும் லியோ டால்ஸ்டாய்க்கும் பொதுவான அம்சம் உள்ளது. அது ‘போரும் சமாதானமும்’. டால்ஸ்டாயின் உலகப் புகழ்பெற்ற நாவலின் தலைப்பு அது. தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழலில், எப்போதுபோரை அறிவிப்பது, எப்போது சமாதானத்துக்கு உடன்படுவது என்பதை அறிவித்துச்செயல்படும் சட்டப்பூர்வ உரிமை மத்திய அரசுக்கு மட்டுமே இருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தின் 15-வது பிரிவு அந்தஉரிமையை வழங்கியிருக்கிறது. டால்ஸ்டாயின் நாவல் தலைப்பே அந்தப் பிரிவுக்கும் குறுந்தலைப்பாக இருக்கிறது.இப்போது நாம், ‘கிட்டத்தட்ட’ போர்ச் சூழலில் இருக்கிறோம். கிட்டத்தட்ட என்றுகூறுவதற்குக் காரணம், போர் தொடங்கியிருப்பதாக மத்திய அரசும் அறிவிக்கவில்லை, முப்படைகளின் கூட்டுத் தளபதி என்று அரசியல் சட்டத்தால் அழைக்கப் படும் குடியரசுத்தலைவரும் அறிவிக்கவில்லை. முப்படைகளின் கூட்டுத் தளபதி என்ற பொறுப்புகுடியரசுத் தலைவருக்குத் தரப்பட்டிருந்தாலும், பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை யின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரிலேயே அவர் செயல்படுகிறார் என்பது முக்கியம்.போர் அறிவிக்கப்பட்டாலும் - அறிவிக்கப்படாமல் நடந்தாலும், இந்தியாவில் நடந்தாலும் - இந்தியாவால் நடத்தப்பட்டாலும் பதவியில் இருக்கும் பிரதமரால் நடத்தப்படுவதாகும். ‘இந்தியப் போர்’ என்று எதைக் குறிப்பிடுவதாக இருந்தாலும் இதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியப் போர்கள் குறு வரலாறு

இதற்கு முன்னால் 5 முறை போர் செய்திருக்கிறோம். இதில் 4 போர்கள், பாகிஸ்தான் என்ற ஒரே நாட்டுடன் நடந்தவை. 1947-48, 1965, 1971, 1999. இந்த 4 முறையும் போர் அறிவிக்கப்பட்டு நடந்ததா? 1947-48-ல் நேரு பிரதமராக இருந்தபோது, இந்தியா - பாகிஸ்தான் இடையே முதல் போர் நடந்தது.அப்போது அறிவிப்பதற்கு நேரமே இல்லை. அடுத்த முறை போர் நடந்தபோது லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தார். 1965ஆகஸ்ட் 5-ல் தொடங்கிய அந்தப் போரும்அறிவிக்கப்படாமலேயே தொடங்கிவிட்டது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நடந்த 13 நாள் போரும்கூட அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலேயே 1971 டிசம்பர் 3-ம் தேதி ஆரம்பித்தது. இந்தியாவின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள 13 விமான நிலையங்கள் மீது பாகிஸ்தான் விமானப் படை குண்டுவீச்சை நடத்தியது. ஆக்ராவும் அதில் ஒன்று. அன்று மாலை அகில இந்திய வானொலியில் உரையாற்றிய பிரதமர் இந்திரா காந்தி, ‘இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் விமானப் படைத் தாக்குதல் தொடுத்து போருக்கான அறைகூவலை விடுத்திருக்கிறது’ என்று அறிவித்தார். அன்றிரவே இந்திய விமானப் படைபதில் தாக்குதல்களைத் தொடுக்க ஆரம்பித்தது. கடைசியாக, 1999 மே முதல் ஜூலை வரையில் கார்கில் போர் நடந்தது. கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டைத் தாண்டி, பாகிஸ்தானியத் துருப்புகள் ஊடுருவி, இந்தியப் பகுதியில் இருந்த மலைமுகடுகளில் ஏறி ஆக்கிரமித்திருந்தது வியப்பாகவும் நம்ப முடியாமலும் இருந்தது. இந்த முறையும் அரசியல் சட்டப்படி அறிவிக்காமலேயே போரில் ஈடுபட நேர்ந்தது. ஆக, போர்கள் அன்றைக்குப் பதவியில் இருந்த பிரதமர்களுடன் தொடர்புள்ளதாகவே அமைந்துவிட்டது.நாம் இப்போது இன்னொரு போரின் தலைவாசலில் இருக்கிறோம். இது பிரதமர் மோடியின் போர். இந்தியக் குடிமக்களாகிய நாம், இது போராக மாறும்பட்சத்தில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும், நியாயப்படுத்திக்கொள்ள வேண்டும்.இவையெல்லாம் நடப்பதற்கு முன்னால், நேரம் இருக்கும்போதே சில கேள்விகளை நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். இதற்குமுன்னால் பாகிஸ்தானுடன் நடந்த 4 போர்களும் சாதித்தது என்ன?

முடிவுகளும் கேள்விகளும்

1947-48-ல் நடந்த முதல் போரின்போது இந்தியத் தரப்பில் 1,500 பேர் இறந்தனர், 3,500 பேர் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில்6,000 பேர் இறந்தனர், 14,000 பேர் காயம் அடைந்தனர். நேருவின் ராணுவம் பாகிஸ்தானுக்கு நன்றாகப் பாடம் புகட்டியது. போரை நிறுத்துமாறு சர்வதேச நெருக்கடி அதிகரித்தது. கவர்னர் ஜெனரலாகப் பதவிவகித்த மவுன்ட்பேட்டன் சர்வதேசியவாதியாக மாறினார். நேரு போர் ஓய்வுக்கு ஒப்புக்கொண்டார். ஜம்மு-காஷ்மீரத்தின் மூன்றில் ஒரு பகுதி நிலத்தை பாகிஸ்தான் கைப்பற்றிக்கொண்டது. பாகிஸ்தான் எடுத்துக்கொண்டது போக மிச்சமிருந்த காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக் பகுதிகளை இந்தியா தக்க வைத்துக்கொண்டது. இந்தப் போரில் வென்றது யார், தோற்றது யார்?இரண்டாவது போரில் 3,000 இந்திய வீரர்களும் 3,800 பாகிஸ்தானிய வீரர்களும் இறந்தனர். பாகிஸ்தானின் நிலப்பரப்பில் கணிசமானவை இந்தியப் படைகளால் கைப்பற்றப்பட்டன. கிட்டத்தட்ட லாகூர் வரையில் இந்தியத் துருப்புகள் சென்றுவிட்டன. ரஷ்யாவின் தலையீட்டால் ஏற்பட்ட தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கானும் கையெழுத்திட்டனர். போருக்கு முந்தைய நிலைகளுக்கு இரு நாடுகளின் படைகளும் பின்வாங்கிச் செல்ல வேண்டும் என்பது ஒப்பந்தத்தில் முக்கிய அம்சம். இந்தப் போரில்வென்றது யார், தோற்றது யார்?1971 போரில் இந்தியாவுக்குக் கிடைத்தது என்ன, பாகிஸ்தான் இழந்தது என்ன? இந்தியா தன்னம்பிக்கையைப் பெற்றது. பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என்ற பெரும் பகுதியை இழந்தது. புதிதாக உருவான நாடான வங்கதேசத்தின் பாராட்டை இந்தியா பெற்றது. பாகிஸ்தான் தனது நட்பை இழந்தது. பாகிஸ்தான் தரப்பில் 8,000 பேர் இறந்தனர், 25,000பேர் காயம் அடைந்தனர். வெற்றி பெற்றஇந்திய ராணுவத்திலும் 3,000 பேர் இறந்தனர்,12,000 பேர் காயம் அடைந்தனர். பிறகு, சிம்லாவில் நடந்த சமாதானப் பேச்சுகளுக்குப் பிறகுவங்கதேசத்தை சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாக அன்றைய பாகிஸ்தான் அதிபர் சுல்பிகர் அலி புட்டோ ஒப்புக்கொண்டார். 13 நாள் போரில் சிறைக் கைதிகளாகப் பிடித்த90,000 பாகிஸ்தானியத் துருப்புகளை அவர்களுடைய நாட்டுக்கே திருப்பி அனுப்ப இந்திரா காந்தி சம்மதித்தார். வங்கதேசம் இப்போது இந்தியாவுக்கு நட்பு நாடு. வங்கதேசம் எப்போதுமே பாகிஸ்தானுக்கு எதிரியாகவே இருந்துவிடும் என்று கூற முடியாது. இந்தப் போரில் யார் வென்றது, யார் தோற்றது?கார்கில் போரில் பாகிஸ்தான் தரப்பில் 1,000 பேர் இறந்தனர், இந்தியத் தரப்பில் 550 பேர்.அவர்களில் பலர் மூத்த அதிகாரிகள். இந்தியாவுக்குள் வந்து பிடித்த பல நிலைகளை விட்டு பாகிஸ்தான் வெளியேற நேர்ந்தது.இந்த 4 போர்களுக்குப் பிறகு கிடைத்த நிகரலாபம் ஆக்கப்பூர்வமானது. முதலாவதாக, சர்வதேச எல்லையையோ கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டையோ தாண்டினால், இந்திய ராணுவம் துடிப்பாக வந்து பதில்நடவடிக்கை எடுக்கும் என்பதை பாகிஸ்தான்புரிந்துகொண்டிருக்கிறது. அடுத்து, இந்தியாவின் துடிப்பான பதில் நடவடிக்கை காரணமாக, தெற்காசிய வரைபடத்தில் வங்கதேசம் என்ற புதிய நாடு உருவாகியிருக்கிறது. மத அடிப்படையில் இந்தியாவைப் பிரித்தே தீர வேண்டும் என்று கேட்டவர்களுக்கும் இது நல்ல பதிலடி. அப்புறம், தாஷ்கண்ட் உடன்படிக்கையும் (1966), சிம்லா ஒப்பந்தமும் (1972) வெளிப்படையாகத் தெரிவிப்பது என்னவென்றால், ‘போர் என்பது தவறான முடிவு, சமாதானம்தான் இரு நாடுகளும் சேர்ந்து வாழவும் முன்னேறவும் ஒரே வழி’. கார்கில் போருக்கு முன்பும் பின்பும் பாகிஸ் தானுடன் பேச வாஜ்பாய் தயாராக இருந்தார். பிரதமர்கள் குஜ்ரால், மன்மோகன் சிங் ஆகியோர் தாஷ்கண்ட், சிம்லா ஒப்பந்தங்களால் உந்தப்பட்டு விரோதப் போக்கை பரஸ்பரம் கைவிட வேண்டும் என்றுபாடுபட்டனர். சிம்லா ஒப்பந்தம் இரு நாடுகளாலும் கையெழுத்திடப்பட்டதுடன், இருநாடாளுமன்றங்களாலும் ஏற்கப்பட்டிருப்பதால் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது.சரி, கடந்த 4 போர்களால் கிடைத்த இந்தமுடிவுகள் இந்திய - பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் மனங்களில் இப்போது நினைவில் இருக்கின்றனவா? நிச்சயம் இல்லை.

எல்லாமே மாறிவிட்டது

லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி என்ற இரு தலைவர்களுமே அஞ்சா நெஞ்சினர். இவ்விருவரும் கையெழுத்திட்ட தாஷ்கண்ட், சிம்லா ஒப்பந்தங்களின் சாரம்என்னவென்று பார்ப்போம். ‘ஐக்கிய நாடுகள்சபையின் சட்டங்களுக்கு ஏற்ப, இரு நாடுகளுக்கும் இடையில் சுமுகமான உறவுகளை வளர்க்க இந்தியப் பிரதமரும் பாகிஸ்தான் அதிபரும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள ஒப்புக்கொள் கின்றனர். தங்களுக்கு இடையிலான பூசல்களைத் தீர்த்துக்கொள்ள படை பலத்தைப் பயன்படுத் தாமல், அமைதியான வழிகளிலேயே தீர்த்துக்கொள்வோம் என்ற உறுதிமொழியை அளிக்கின்றனர்.’ (தாஷ்கண்ட் அறிவிக்கை, ஜனவரி 10, 1966).‘இரு நாடுகளுக்கும் இடையில் நட்புணர்வையும் ஒற்றுமையையும் வளர்க்கத் தடையாக இருந்தவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மோதல்களையும் பிணக்குகளையும் கைவிடுவதென்று இந்திய அரசும் பாகிஸ்தான் அரசும் உறுதிகூறுகின்றன. இரு நாடுகளின் பிரதேச ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் மதிப்பதுடன், மற்றவர்களின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று உறுதியளிக்கிறோம்.’ (சிம்லா ஒப்பந்தம், ஜூலை 2, 1972).கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள பிரதமர் வாஜ்பாய் 2003-ல் ஒப்புக்கொண்டபோது தாஷ்கண்ட், சிம்லா ஒப்பந்த உணர்வுகளை முன்னெடுத்துச் சென்றார். அப்போதுதான் இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் முறையாக சர்வதேச எல்லை, கட்டுப்பாட்டு எல்லைக் கோடு மற்றும்ஜம்மு-காஷ்மீரில் உள்ள சியாச்சின் பனி முகடு என்ற மூன்றையும் உள்ளடக்கிய போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன.

எதிரி தோற்றத்தில் நண்பர்கள்

நேரு, சாஸ்திரி, இந்திரா மற்றும் வாஜ்பாய்காலத்தில் மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் உள்ள அறிவிப்பு செய்யும் முன்னுரிமை கொண்ட போர் என்பதற்கு அடுத்து வரும், சமாதானம் என்பதை ஏற்றுச் செயல்படுத்தினர். இப்போது என்ன நிலைமை? பயங்கரவாதம் என்பது அப்போதும் தெரிந்திருந்தது, இப்போதும் தெரிந்திருக்கிறது. முன்பைவிட புதுவகையிலும் கொடூரமாகவும் உருவெடுத்திருக்கிறது. இரு நாடுகளிலும் சகிப்பின்மை என்பது அவற்றுக்கு எண்ணெய் வார்ப்பதாக வளர்ந்துவருகிறது. சகிப்பின்மைக்குத் தீவிரவாதிகள் எண்ணெய் வார்த்து மக்களிடையே விசிறிவிடுகிறார்கள். போர் மூள்வதற்கு முன்னதாகவே அல்லது போர் என்றுஅரசால் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே போர் வெறியைப் பரப்புகிறார்கள். பாகிஸ்தான் ராணுவத்தில் உள்ள போர் வெறியர்களும், மதக் குழுக்களில் உள்ளவர்களும் பயங்கரவாதிகளுக்குத் தூபமிட்டுப்பயன்படுத்து கின்றனர். இந்துத்துவவாதிகளோ, பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதக் குழுக்களை, ‘எதிரி தோற்ற’த்தில் இருக்கும் நண்பர்களாகவே பார்க்கிறார்கள்!

வெறுப்புக்கு எண்ணெய் வார்ப்பு

பயங்கரவாதமும் இந்துத்துவாவும் பரஸ்பரம் மற்றத்துக்காக வேலை செய்கின்றன. எதிரி என்று அடையாளம் காண்போரைச் சந்தேகப்படவும், அடையாளம் காட்டுவோர் கூறும் எதையும் நம்பவும் இரு நாடுகளிலும் ஏராளமான மக்கள் தயாராக இருக்கின்றனர். பயங்கரவாதிகளும் இந்துத்துவவாதிகளும் ‘மாற்று தேசப் பற்’றை மக்கள் மனங்களில் விதைக்கின்றனர். அதாவது, ‘இன்னொரு நாட்டை வெறுக்கும் பற்று’ அந்நாட்டின் பெரும்பான்மை மதத்தை வெறுக்கும் போக்கு. பயங்கரவாதிகள், இந்துத்துவா ஆதரவாளர்கள் என்ற இரு குழுக்களுக்கும் பொதுவானஎதிரிகள் - மதச்சார்பின்மை, பன்மைத்துவம், மக்களிடையே ஒற்றுமை. இரு குழுக்களுக்கும் பொதுவான ஆயுதம் - தூண்டிவிடுவது. இருவரும் பயன்படுத்தும் பொது எரிபொருள் - வெறியூட்டுவது. இரு தரப்பினரும் மற்றவர் இல்லாவிடில் செல்லாக் காசாகிவிடுவர். இருவருமே தவறான, தவறாக வழிகாட்டப்பட்ட, தவறாகப் புரிந்துகொண்ட தேசியவாத உணர்வைக் கையாண்டு பரஸ்பரம் வளர்ச்சி பெற்றுவருகின்றனர்.போர் வந்தால் அதை எதிர்கொள்ளும் விதத்தில் இரு நாடுகளையும் இவர்கள் தயார்படுத்தவில்லை, போர் வேண்டும் என்றுதூண்டிவிடும் வகையிலேயே தயார்படுத்துகின்றனர். இதுதான் முக்கியமான வித்தியாசம்.
உணர முடியாத மனதின் ஆழம்

வாஜ்பாய் சகாப்தத்தில் 2003-லேயேஜார்ஜ் பெர்கோவிச் கூறினார்; 
முஸ்லிம்களையும் பாகிஸ்தானையும் இந்துக்கள் அழித்துவிடுவார்கள் என்பதற்கு ஆதாரமாக ஆர்எஸ்எஸ், விசுவ இந்து பரிஷத் அமைப்பைச் சுட்டிக்காட்டுகிறார்கள் பாகிஸ்தானியர்கள். ‘முஸ்லிம்கள் ஆபத்தானவர்கள் என்று கூற பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அரசியல் கட்சிகளையும் பயங்கரவாதக் குழுக்களையும் உதாரணம் காட்டுகின்றனர் விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பினர். கலாச்சார தேசியத்துவத்தின் மூலம் அல்ல,பன்மைத்துவம் மிக்க சுதந்திர உணர்வால்தான் பாகிஸ்தானியர்களுக்கு நம்பிக்கைஊட்ட முடியும்; அப்போதுதான் பரஸ்பர சந்தேகம், பகையிலிருந்து இருவரும் மீண்டு வர முடியும்’ என்றார் பெர்கோவிச். அவர் அன்றுகூறியதையே இன்றைக்கு நமக்கு கூறிக்கொள்ள வேண்டும். அதற்கும் மேல் நாம் செய்தாக வேண்டும். நாம் பிரதமர் மீதுநம்பிக்கை வைக்க வேண்டும்; அவர் மனதின் ஆழத்தை நம்மால் உணர முடிவதில்லை. சாஸ்திரி, இந்திரா, வாஜ்பாய் முறையே 1965, 1971, 1999-ல் என்ன செய்தனர், அதன்பிறகு போருக்கு அவர்கள் எப்படி விடைகொடுத்தனர் என்பதைப் பார்க்க வேண்டும். பயங்கரவாதம் தவறல்ல என்று நான் வாதிடவில்லை. தேவைக்கும் மேல் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து நம்மை நாமே அழித்துக்கொள்ளக் கூடாது என்றே கூற விரும்புகிறேன்.இரு வாரங்களுக்கு முன்னால் எம்.கே.நாராயணன் கூறிய அறிவுரையை புது தில்லியில் உள்ளவர்கள் கேட்டு நடக்க வேண்டும்.அறிவித்த போரானாலும் அறிவிக்காமல் நடக்கும் போரானாலும் பல்லுக்குப் பல் என்றவிதத்தில் பதிலடி கொடுப்பது முக்கியம் அல்ல;அறுவை சிகிச்சையைப் போன்ற நுட்பமான தாக்குதல் என்றால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் இதர பாதிப்புகளும் பின்தொடரும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அந்த விளைவுகளை யார் ஏற்பது? தகுந்தபதிலடி வேண்டும் என்றார்களே அவர்களா? நிச்சயம் இல்லை. புதிய இந்தியா உதயமாகிறது என்றார்களே அவர்களா? வெகு நிச்சயமாக இல்லை.ஜவான்கள் நெஞ்சுரம் மிக்கவர்கள். போருக்கான பயிற்சிகளைப் பெற்று போர் வரும்போது தங்களுடைய  இன்னுயிரையும் பொருட்படுத்தாது போரிடுகிறவர்கள், போர் வரும்போது நிச்சயம் போரிடுவார்கள். நாமும்அவர்களைக் கெளரவிப்போம், அது நம்முடைய கடமையும்கூட. போர் மூலம் அவர்கள் தங்களுடைய கடமையைச் செய்வதைப் போல நாமும் சமாதான காலத்தில் நம்முடைய கடமையைச் செய்ய வேண்டும். 

போரும் சமாதானமும் நம்முடைய அரசியல்சட்டத்தின் ஒரே பிரிவில் இடம்பெற்றிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள், நான் மற்றும் நாம் இன்னொரு போரில் ஈடுபட்டாக வேண்டும். அது போரை நாடும் மனச்சூழலுக்கு எதிரான போர்! போரைப் பெரிதாகப் பேசி, அணுகுண்டுகளைத் தயாரிக்கச் சொல்வது போருக்கு ஆதரவான உளவியல். மத அடிப்படையிலான வெறுப்புணர்வை வளர்க்கும் வரிசையிலிருந்து விலகி, மதச்சார்பற்ற அறிவாளிகளின் வரிசையில் நாம் சேர வேண்டும். ‘போரும் சமாதானமும்’ என்பதை வெளியேற்றிவிட்டு ‘போரும் - இனக் குவிப்பும்’ என்ற நிலை உருவாக விரும்புவோருக்கு எதிராக நாம் போரைத் தொடங்க வேண்டும்.போர் என்ற வார்த்தையை நாம் (சிந்தனையிலிருந்து) நீக்க வேண்டும்.

கோபாலகிருஷ்ண காந்தி, மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர், அசோகா பல்கலைக்கழகத்தின் வரலாறு - அரசியல் பேராசிரியர்.
சுருக்கமாகத் தமிழில்: சாரி
நன்றி : ‘தி இந்து’ (அக்.5)

1 comment:

  1. The Hindu இதழில் கோபாலகிருஷ்ணகாந்தியின் கட்டுரையைப் படித்தேன். அண்மைக்காலங்களில் வந்த அருமையான கட்டுரைகளில் இக் கட்டுரையும் ஒன்று. மிக அருமையாகவும், நுட்பமாகவும் விவாதித்திருந்தார்.

    ReplyDelete