Thursday, March 8, 2018

காக்கி கிரிமினல் – கைது மட்டும் போதாது




திருச்சியில் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. வாகனத்தை துரத்திச் சென்று காலால் எட்டி உதைத்து கணவன் மனைவியை கீழே விழ வைத்ததில் தலையில் அடிபட்ட கர்ப்பிணிப் பெண் உஷா சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். அவரோடு அவர் வயிற்றில் இருந்த கருவும் உலகை எட்டிப் பார்க்காமலேயே மடிந்திருக்கிறது.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய் என்று சர்வதேச மகளிர் தினத்திற்காக முழக்கமிடும் வேளையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ள ஒரு காவலர் குற்றவாளியாகியுள்ளார்.

எதற்காக இந்த வெறிச்செயல்?

அவர்கள் என்ன செயின் வழிப்பறிக் கொள்ளையர்களா?
எங்காவது வன்முறை நிகழ்த்தி விட்டு தப்பித்தார்களா?
காவிரி மணலை களவாடிக் கொண்டு போனார்களா?
அவர்கள் என்ன கொலைக் குற்றவாளிகளா?
இல்லை திருச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கூலிப்படைகளின் அங்கமா?

மாமூல் என்ற பெயரில் வசூலிக்கும் பிச்சைக்காசு கிடைக்காவிட்டால் போலீஸ் என்ன வேண்டுமானால் செய்யுமா?

அவர்கள் ஹெல்மெட் போட்டு வராதது ஒரு குற்றச்செயலாகவே இருக்கட்டும். அதற்காக அவர்கள் சென்ற வாகனத்தை எட்டி உதைக்க அரசியல் சாசனத்தின், குற்றவியல் சட்டத்தின் எந்த பிரிவு காவல் துறைக்கு அதிகாரம் தருகிறது?

எல்லோரின் மீதும் தங்கள் அதிகாரத்தை பிரயோகிக்கும் நேர்மை காவல்துறைக்கு இருக்கிறதா?

சொந்தக் காரணங்களுக்காக செத்துப் போன ஒருவனின் பிணத்தை வைத்துக் கொண்டு சவ ஊர்வலம் என்ற பெயரில் கடைகளை அடித்து நொறுக்கி அண்டா பிரியாணியை திருடி, மொபைல்களை களவாடிய போது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்ததுதானே தமிழக காவல் துறையின் வீரத்திற்கு உதாரணம்!

ஆளும் கட்சியின் பிரமுகர்கள் அல்ல, அவர்களின் அல்லக்கைகளுக்கே சல்யூட் அடித்து  வழியனுப்பும் நம் ஊர் காக்கிகளுக்கு சாமானியர்கள் என்றால் மட்டும் வீரம் பொத்துக் கொண்டு பீறிடும்.

காமராஜ் என்ற பெயர் கொண்ட அந்த காக்கியை கைது செய்துள்ளார்களாம். சரி, எந்த பிரிவிலே வழக்கு போட்டுள்ளார்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

கொலைக்கான ஐபிசி பிரிவு 302 ஆ அல்லது கடமையிலிருந்து தவறியது போன்ற சொத்தை பிரிவா?

கைது செய்ததாய் கணக்கு காட்டி தண்டனை இல்லாமல் தப்ப வைக்கும் சாமர்த்தியம் காவல்துறைக்கு உண்டு.

ஏனென்றால் அவர்கள்தான் மிகப் பெரிய கிரிமினல்கள்.

1 comment:

  1. பொலிஸ் இல்ல 'பொறுக்கி' காமராசுக்கு தூக்குதண்டணை தரவேண்டும். இநதிய (தமிழ்) நாட்டின் நீதி நிர்வாகம் அந்த கிரிமினலுக்கு தண்டனை தர த்வறினால் யாராவ்து "நீதிமான்" அவனை ரோட்டில் போட்டு நசுக்க வேண்டும்.

    ReplyDelete